–சூர்யபிரபா.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆனந்த் சோக்சே என்பவர் தனது மனைவிக்கு தாஜ்மஹாலை போன்று வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ளார். இச்சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் புர்கான்பூரில் உள்ள தப்தி ஆற்றின் கரையில் தனது மனைவிக்கு ஆனந்த் சோக்சே தாஜ்மகால் பாணியில் அழகிய சலவைக் கற்களால் ஆன மாளிகை ஒன்றை எழுப்பியிருக்கிறார். இதைக் கண்டு அவரது மனைவிக்கு அளவற்ற சந்தோஷம்!
''ஷாஜகானைவிட என் கணவர் உயர்ந்தவர்'' என்கிறார் இப்பெண்மணி. காரணம் – ஷாஜகான் தன் மனைவி இறந்தபிறகுதான் தாஜ்மகால் கட்டினார். ஆனால் என் கணவரோ, நான் உயிருடன் இருக்கும்போதே இக்கட்டிடத்தை காதல் பரிசாக அளித்துள்ளார்'' என்கிறார் பெருமை பொங்க!
''அதுமட்டுமில்லை.. ஷாஜகான் முதலில் தாஜ்மகாலை புர்கான்பூரில் உள்ள தப்தி ஆற்றின் கரையில்தான் கட்ட திட்டமிட்டான் என்றும் ஆனால் பல காரணங்களால் ஆக்ராவில் கட்டப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. அந்த வகையில் ஷாஜகான் விரும்பியதை நான் செய்து முடித்திருக்கிறேன்'' என்று பெருமையாக கூறுகிறார், ஆனந்த்.