
அரிது, அரிது மானிடராகப் பிறத்தல் அரிது' என்று புலவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். இந்த மனிதப்பிறவி எவ்வளவு நல்ல விஷயமோ அதே அளவிற்கு அஞ்சத்தக்க விஷயமும் ஆகும்.
ஏனெனில், மனிதர்கள் தங்கள் செய்கையால் இந்தப் பிறவியை மேலாகவோ, கீழாகவோ செய்கிறார்கள். நல்லதைச் செய்தால் இதைவிட நற்பிறவி கிட்டும். தீமையைச் செய்தால் மீண்டும் விலங்காகப் பிறக்க வேண்டி வரும்.
ஒரு மனிதனின் தயவைப் பெறுவதற்குக்கூட நீண்டநாள் போராடுகிறீர்கள். அரசாங்கத்தின் தயவு வேண்டுமானால் இன்னும் அதிகநாள் காத்திருக்க வேண்டி உள்ளது.
இந்தச் சாதாரண ஜென்மங்களுக்கே இப்படிக் காத்திருக்க வேண்டியது என்றால், கடவுளின் அருளைப் பெறுவதற்கு எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே அவரது கருணையைப் பெறப் பொறுமையுடன் காத்திருங்கள். மிகப் பெரிய பலன் கிடைக்கும்.
பாவம் செய்யும்போது எப்படி மறைவாகச் செய்கிறீர்களோ அதேபோல மிகுந்த புண்ணியமான அன்ன தானத்தையும் எவ்விதத் தம்பட்டமும் இல்லாமல் அமைதியாகச் செய்ய வேண்டும். அப்படியானால்தான் அந்த தானத்திற்குரிய பலன் வெகுவாக கிடைக்கும்.