மிக ஜாக்கிரதையாகப் பழகுதற்குரியவர்கள் யார் ?

மிக ஜாக்கிரதையாகப் பழகுதற்குரியவர்கள் யார் ?
Published on

ராமகிருஷ்ண பரமஹம்சர் அருளுரை

ரமஹம்சர், 'நாம் அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் பழக வேண்டும்' என்று எப்போதும் வலியுறுத்துவார். ஆனால், 'ஒரு சிலரிடம் எப்போதும் தள்ளியிருக்க வேண்டும்' என்பதையும் கூறியுள்ளார். எப்போதும் மிக ஜாக்கிரதையாகப் பழகுதற்குரியவர் சிலர் இருக்கின்றார்கள். அதில் முதலாவது செல்வ வளம் மிக்க தனவான்கள். அவர்களுக்கு பண பலம், செல்வாக்கு அதிகம் என்பதால், அவர்கள் இஷ்டப்பட்டால் உனக்குத் தீமை செய்துவிடுவார்கள். அதனால், அவர்களுடன் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். அவர்கள் சொல்வதைக்கேட்டு 'சரி, சரி ஆமாம்….' என்று சொல்லும் நிலை ஏற்படலாம்.

இரண்டாவது குடிகாரன். நீ அவனைத் தொந்தரவு செய்தால், காதால் கேட்கச் சகிக்காதபடியெல்லாம் உன்னைத் திட்டுவான். அதைவிட்டு, 'என்னப்பா நல்லாயிருக்கியா?' என்று கேட்டால் உன்னிடம் சந்தோஷத்துடன் ஐக்கியமாகிவிடுவான்.

மூன்றாவது காளை மாடு. அது உன்னை முட்டவரும்போது அதையும் ஏதாவதொரு சப்தம் செய்து சமாதானப்படுத்த வேண்டும்.

நான்காவது நாய். அது உன்னைக் கண்டு குரைக்கவோ கடிக்கவோ வரும்போது, நீ ஓடாமல் நின்று அதனைச் சமாதானம் செய்ய வேண்டும்.

ஐந்தாவதாக பாம்பைப் போன்ற விஷத்தன்மை உடைய மக்கள். அவர்கள் எப்போது உன்னைக் கடிப்பார்கள் என்று உனக்குத் தெரியாது. அவர்களின் விஷத்தை முறிக்க மிகுந்த பாடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவர்களைப் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்றிவிடும். அவர்களிடம் இருந்தும் தள்ளியிருக்க வேண்டும்.

பெண்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை
ஒரு முறை, ராமகிருஷ்ணரிடம் அவரது சீடர் ஒருவர், 'பெண்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும். அதற்குரிய முறைகள் என்ன என்பது பற்றிக் கேட்டார். தன்னுடைய சிஷ்யன் கேட்டதும், மிகவும் ஆனந்தத்துடன் பெண்களின் மகிமையையும், அவர்களிடம் நடந்துகொள்ளும் முறையையும் கூற ஆரம்பித்தார்.

பெண்கள் அனைவரும் தேவியின் ஸ்வரூபம் ஆவர். அவர்கள் அனைவரையும் தாயைப்போலக் கருத வேண்டும். ஸ்த்ரீகள் நற்குணங்களுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கற்புடையவளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களை அவமதிக்காமல் மதிக்கவேண்டியது கட்டாயமாகின்றது.

உண்மையை அறிந்தவனும், ஈஸ்வர தரிசனம் பெற்றவனும் பெண்களைக் கண்டு பயப்படத் தேவையில்லை. அவர்கள் பெண்ணை ஜகதீஸ்வரியாகவே  நினைத்து வழிபடுகிறார்கள். தாயை வணங்கும் மகனைப் போலவே பெண்ணை வணங்கவேண்டும். ஒருபோதும் பெண்ணைத் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என்றும்' அவர் கூறினார்.

பெண்ணின் மகிமையைப் பற்றி ஒரு முறை விவேகானந்தரிடம் ராமகிருஷ்ணர் கூறியுள்ளார், ' உனக்குத் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கவேண்டுமென்றால், தேவியைப் பற்றிக்கொள். ஆக்கல், காத்தல், அழித்தல் போன்ற மூன்று காரியங்களைச் சிறப்பாகச் செயல்புரிகின்றாள். அவள் விருப்பப்பட்டால் பரலோகத்தில் வசிக்கலாம். அவள் அருள்பார்வை இல்லையெனில், நம்மால் இவ்வுலகில் வசிக்க இயலாது. ஒவ்வொரு பெண்ணும் அவள் உருவம் கொண்டவள், என்று பெண்மையைப் போற்றிப் புகழ்கின்றார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com