இறைவன் அன்னப் பறவை வடிவில் அளித்த உபதேசம்

இறைவன் அன்னப் பறவை வடிவில் அளித்த உபதேசம்
Published on

உத்தவ கீதை – 9

டி.வி. ராதாகிருஷ்ணன்

கிருஷ்ணர் உத்தவருக்கு மேலும் கூறலானார்…

மூவகை குணங்களான சத்துவம், ரஜோ, தாமஸம் ஆகியவை புத்தியைச் சார்ந்தவை. உடலிலுள்ள ஆன்மாவைப் பற்றியதல்ல. சத்துவ குணத்தால் மற்ற இரண்டு குணங்களாகிய ரஜோ, தாமஸ குணங்களை அடக்க வேண்டும்.

தாமஸ குணம் என்பது சோம்பல், தூக்கம், கோபம் அதிக உணவை உண்ணுதல் போன்றவை.

ரஜோ குணமென்பது , காரியத்தில் ஈடுபாடு, வேகம், அதிகமாக உணவில் காரம் சேர்த்துக் கொள்ளவது போன்றவையாகும்.

சத்துவ குணத்தால் என்னிடத்தில் பக்தி உண்டாகும். சத்துவ குணம் மேலோங்கினால் ரஜோ குணமும், தாமஸ குணமும் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

வேதங்களை, புராணங்களைப் படித்தல், குடிக்கும் நீர், பழகும் மனிதர்கள், சுற்றுப்புற இடங்கள், காலம், செய்யும் தொழில், பிறப்பு, தியானம், உச்சரிக்கும் மந்திரங்கள், சுத்தம் செய்தல் ஆகிய பத்து காரணங்கள் குணங்கள் ஏற்படுவதற்குக் காரணமாகின்றன.

அறிவுடைய ஞானிகள், சத்துவ குணத்தைப் போற்றி, தாமஸ குணத்தை ஒதுக்கி, ரஜோ குணத்தைப்  பற்றிக் கவலைப்படாமல் இருப்பார்கள். வாழ்க்கையில் ஆன்மீக முன்னேற்றம் வேண்டுமானால், சத்துவ குணம் மேலோங்க வேண்டும்.

நிவர்த்தி மார்க்கத்தைப் போதிப்பது சாத்வீக குணம். பிருவிருத்தி மார்க்கத்தை வழிகாட்டுவது ரஜோ குணம். தீய குணங்களை அளிப்பதும், மது அருந்துதல், மாமிசம் உண்ணுதல் போன்றவற்றை ஊக்குவிப்பதும், பழைய உணவுகளை உண்ணச் செய்வதும் தாமஸ குணம்.

எப்படி மூங்கில் மரத்திலுண்டான தீ  மூங்கில் மரத்தை எரித்து… காட்டையே அழித்து விடுகிறதோ அப்படி உடலில் உண்டான சத்துவ குணம் மற்றெல்லா குணங்களையும் அழித்துவிடும்.

இப்போது உத்தவர் கேட்டார்…

ஆபத்பாந்தவா! இந்திரியங்கள்தான் மனிதனின் துன்பத்திற்கு மூல காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். பிறகு ஏன்… எல்லா மனிதர்களும் அவற்றின் பின் பொருளைத்தேடி ஓடும் நாயினைப் போல ஓடுகீறார்கள்?

இதற்கு கிருஷ்ணன் சொன்னார்…

பகுத்தறிந்து பார்க்கயியலாத மனிதனின் மனத்தில் "நான்" என்கின்ற அகங்காரம் தோன்றி, ரஜோ குண மேலீட்டால், அவன் பொருள்கள் மீது பற்றுக் கொள்கிறான். பொருட்களால் இன்பம் கிட்டும் என்று எண்ணி
அதன்பின் அதை அடைய அலைகிறான்.

பின்பு, அந்த பொருட்பற்றால் தன் சுயசிந்தனையற்று துன்பம் கொடுக்கும் செயல்களில் ஈடுபடுகிறான். பகுத்தறிந்து பார்க்கும் திறனுடையவன், ரஜோ, தமோ குணங்கள் அவனைத் தூண்டினாலும் அவன், அந்தத் தீய சிந்தனைச் செயல்களால் கவரப்படுவதில்லை.

மனத்தில் உறுதியுடனும், நேர்மையுடனும், குறித்த நேரத்தில் குறிப்பிட்ட ஆசனத்தில் அமர்ந்து, மனத்தை ஒருமைப்படுத்த வேண்டும். வெளி உலகில் எண்ணங்களைத் தவிர்த்து, தியானம் செய்து யோகத்தில் ஈடுபட வேண்டும்.

இதை நான் பிரம்மாவிடம் உண்டான சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தேன்.

அடுத்து, உத்தவர்…"தாங்கள் எப்போது சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தீர்கள்? என்ன அருளுரை வழங்கினீர்கள்? அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்…" என்றார்.

சனகாதி முனிவர்களாகிய நால்வரும் பிரம்மாவின் மானசிக புத்திரர்கள். அவர்கள், அவர்களின் தந்தையான பிரம்மாவிடம் யோகத்தைப்பற்றி வினவினார்கள். இந்திரியங்களால் மனதும், மனத்தால் இந்திரியங்களும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. முக்தியை அடைய விரும்பும் மனிதன் எப்படி இந்த இரண்டின் சேர்க்கையிலிருந்து விடுபட முடியும்?

இந்தக் கேள்வியை பிரம்மாவிடம் அவருடைய குமாரர்கள் கேட்டதற்கு அவருக்குப் பதில் தெரியாததால், என்னை வணங்கி என்னைத் தியானித்தனர். நான் அவர்களுக்கு பதில் கூறும் வண்ணம் அன்னப்பறவை வடிவெடுத்து, அவரிடம் காட்சியளித்தேன்.

பிரம்மனும் என்னைக் கண்டு வணங்கி "நீங்கள் யார்?" என வினவினார்.

முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அந்தச் சமயத்தில் அவருக்குப் பதில் கூறினேன்.

உத்தவரே! அதைக் கேளுங்கள். "ஆத்மாவே எல்லாவற்றிலும் கலந்து நிற்பதால், எல்லாம் ஒன்றுதான் என்றால் இந்தக் கேள்வியே எழாது. எந்த விதத்தில் நான் பதில் கூற முடியும்?

எல்லோருடைய உடம்பும் பஞ்சபூத சேர்க்கையால் ஆனது. ஆகையால் எல்லோர் உடம்பும் ஒன்றானதே! அதில் ஒருவருக்கொருவர் வித்தியாசமில்லை.

அப்படியானால், "நீ யார்?" என்ற கேள்விக்குப் பதில் கிடையாது. வெறும் கேள்வி மட்டும்தான் நிற்கும். அது பயனற்றது.

மனம், வாக்கு, காயம் போன்றவற்றால், "நான் எனும் அகங்காரம்  காரணமாக  ஒருவருக்கொருவர் தனித்து விளங்குகிறார்கள்.

மனது, இந்திரியங்களின் உதவியால் அறிவைப் பெறுகிறது. இயங்குகிறது. இந்த ஐந்து இந்திரியங்களும், மனதும் "நான்" என்ற அகங்காரமும் சேர்ந்து செயல்படுகிறது. வேறு ஒன்றுமில்லை.

மனம் இந்திரியங்களோடும், இந்திரியங்கள் மனதோடும் ஒன்றுபட்டுச் செயல்படுகின்றன.

உடலிலுள்ள ஆன்மாவானது இறைவனான பிரம்மாவுடன் தொடர்புடையது. மனத்தின் சாயல், நிழல் ஆன்மாவின் மீது படிந்து மனமே ஆன்மா என்கின்ற பிரமை உண்டாகிறது. இந்த மாயையில் அகப்படாமல், நித்தியமான ஆன்மாவை உணரவேண்டும். மனம், இந்திரியங்களின் சேர்க்கையில் இருந்து விடுபட்டு, என்னை (இறைவனை)  உணர வேண்டும். விழித்திருத்தல், உறக்கம், கனவு  என்ற மூன்று நிலைகளும் மனது மற்றும் மூன்று குணங்களின் செயல்களால் நடைபெறுகின்றன. உடலிலுள்ள ஆன்மா, இதை வெறும் சாட்சியாகவே பார்க்கிறது.

சாதகன், இந்த மூன்று நிலைகளையும் தாண்டி (விழிப்பு, உறக்கம், கனவு) என்னை உணரவேண்டும்.

அதனுடன் கூடிய மனது, இந்திரியங்களின் சேர்க்கை மற்றும் அகங்காரம் ஆகியவையே எல்லாத் துன்பங்களுக்கும் அடிப்படைக் காரணம். அதை புரிந்துகொள்ள வேண்டும்.

இதை உணராதவனை, விழித்திருந்தும் உறங்குபவனாகவே கருத வேண்டும். காரணம், அவன் அறியாமையில் வாழ்கிறான். ஆன்மாவைத் தவிர மற்றெல்லாம் பொய்யானவையே. கனவில் காண்பவை, விழித்தெழுந்ததுடன், அவை பொய்யானவை என உணர்வதுபோல, உலகில் காணப்படும் வேற்றுமைகள் (வர்ணங்கள், ஆஸ்ரமங்கள், வேறு வேறு விதமான மனிதர்கள்மற்ற மிருகங்கள்)பொய்யானவையே.

அதைப்போலவே, இறப்புக்குப் பின் சொர்க்கம், நரகம் என்பவையும் கனவில் காணப்பட்டது போல பொய்யானவையே.

பகுத்தறிவு பெற்ற ஞானி, 'இந்த உலகே மனத்தில் ஏற்பட்ட மாயை' என்றும், 'தோன்றி மறையும் தன்மை உடையது' என்றும் உணர்ந்து உலகில் வாழவேண்டும். இந்த உலகத்தின் மீது செல்லும் எண்ணங்களை உள்நோக்கித் திருப்பி, ஆசைகளை நீக்கி, மௌனமாய், கர்மங்களில் இருந்து விடுபட வேண்டும். தன்னையறிய உதவிய இந்த உடலை, எப்படி நன்றாக கள் குடித்தவன் தனது ஆடையைப் பற்றியும், ஆடை நழுவுவது பற்றிகூட கவலைப்படமாட்டானோ, அதுபோல, அறிவு பெற்ற ஞானியும் உலகில் இருத்தலையும், இறத்தலையும் பற்றி கவலைப்படமாட்டான்.

இந்திரியங்கள் மனது, இந்த உடல் யாவையும் விதியின் வசப்படி தேவையுள்ள வரையில் உலகிலிருக்கும். யோகத்தின் வழியாகச்  சமாதிநிலை அடைந்து இந்தப் பிரபஞ்ச அறிவைப் பெற்றவர்கள், இறை நிலையை அடைந்து, இந்த உடம்பையும் அதனுடன் சேர்ந்த மற்றவைகளையும்  ஒரு கனவாகவே கருதுவார்கள்.

சாங்கிய தத்துவத்தின் விளக்கமான பொருளும், உயிருக்குமுள்ள தொடர்பும் யோக சாத்திரத்தின் முடிவும் உங்களுக்கு விளக்கப்பட்டது.

முனிவர்களே! உங்களுக்கு ஞானமளிப்பதற்காக அவதரித்த என்னை அறிந்து கொள்ளுங்கள்.

நானே யோகத்தின் முடிவானவன். எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கும் தன்மை, பற்றின்மை ஆகிய குணங்கள். முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவை. அவைகள் யாவும் என்னை வணங்குகின்றன. நான் யாவற்றுக்கும் அப்பாற்பட்டவன்.

தங்களது சந்தேகங்கள் நீங்கி, சனகாது முனிவர்களும் மற்ற முனிவர்களும் என்னை பக்தியுடன் வழிபட்டார்கள்.

அவர்களால், வாழ்த்தி வணங்கப்பட்ட நான் எனது இருப்பிடம் திரும்பினேன்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com