ஒரு கலைஞனின் வாழ்க்கையில் – 13.மம்முட்டி. தமிழில் கே.வி.ஷைலஜா.பனிமலையின் சலனமற்ற அமைதி என்னைக் காஷ்மீரை நேசிக்க வைத்தது. பார்வை துளித்துளியாய் முடியும் தூரம்வரை வெண்பஞ்சுக் கூட்டமாய் கொட்டிக் கிடக்கும் உறைந்த பனிப் பிரவாகமும் தத்தி தத்தி விழும் பால்யத்தைப் போன்ற பனித் துகள்களும் இப்போதும் மனதில் உறைந்திருக்கிறது. பனிக்குன்றுகளிலிருந்து குன்றுகளுக்குத் தாவும் காட்சிதான் அன்றைய படப்பிடிப்பு..காலை பதினோரு மணிக்குப் படப்பிடிப்பு ஆரம்பிப்பதாக இருந்தது. 'குல்மர்க் ஹில்டன்' விடுதியிலிருந்து அதிக தூரம் பயணம் செய்த பின்னரே படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடைய முடியும். சக்கரத்தில் சங்கிலி பிணைத்த வண்டிகளையே பனிமலையில் பயன்படுத்துகிறார்கள்..நான், சுரேஷ்கோபி, முகேஷ், கணேசன், விஜயராகவன், குஞ்ஞன், சித்திக், மோகன் ஜோஸ், மணியன் பிள்ளை ராஜ் என எல்லோரும் சேர்ந்து சங்கிலியால் சக்கரம் பிணைக்கப்பட்ட வண்டியில் புறப்பட்டோம். பிரதான சாலையை விட்டு மலைப் பாதைக்கு வண்டி திரும்பியதுமே புறக்காட்சிகளின் வசீகரம் எங்களை ஈர்த்தன. பனியால் சூழப்பட்ட வெளி, வெண்மையென்ற ஏக நிறமானாலும், நிற்க வைத்து கவனத்தைக் கோரும் அழகு அதற்கிருந்தது. காலை பத்து மணி. வண்டியில் கேட்ட அபஸ்வரத்தின் தொடர்ச்சியாய் நின்றுபோன வாகனத்திலிருந்து இறங்கிப் பார்த்த டிரைவர் ஹிந்தியில் சொன்னான்..'சின்னப் பிரச்னைதான். உடனே சரி பண்ணிடறேன்'..பிரச்னையின் தீவிரத்தை டிரைவர் உட்பட நாங்கள் யாரும் புரிந்து கொள்ளாமல் போனதால் வண்டிக்குள் உட்கார்ந்தபடியே ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். பிறகு வெளியே இறங்கி வந்து சூழலின் அழகை ரசித்தோம். கேலிக்கும் கிண்டலுக்கும் குறைவேதும் இல்லாமல் நேரம் நகர்ந்தது. மகிழ்வின் சிறகடிப்புகளில் இரண்டு மூன்று மணி நேரம் உதிர்ந்திருந்தது. பேச்சின் கதகதப்பில் மெல்ல மெல்ல ஈரம் படர்ந்தது. பலருக்கும் கிண்டலே வராமல்போன நேரமது. பசிக்கத் தொடங்கிய நேரத்தில் சாப்பாடு இல்லையென்றாலும் நல்ல உணவைப் பற்றிப் பேசலாமே என்று எப்போதோ சாப்பிட்ட செம்மீன் குழம்பு வைப்பதை நேர்த்தியாய்ச் சொல்லத் தொடங்கினேன். சுத்தமாகக் கழுவின செம்மீனை, மிளகாய், வெங்காயம், இஞ்சி வைத்து நன்றாகக் கல்லில் தட்டி எடுத்துப் புரட்டிக்கொள்ள வேண்டும். மசாலாவில் ஊறின செம்மீனை இளந்தீயில் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி நீர் வற்றும்போது குடம்புளி கறிவேப்பிலை சேர்த்து தேங்காய் எண்ணெயில் வறுத்தெடுக்க வேண்டும். புளிச்சக்கையையும் கறிவேப்பிலையையும் வறுத்தபின் எடுத்துவிட வேண்டும்..பசியை மறக்க, சாப்பாட்டைப் பற்றிய விவரணையே சிறிது நேரத்திற்குப் போதுமானதாக இருந்தது. எங்கள் வண்டியில் தண்ணீர்கூட இல்லை. பழுது சரியாகி விடுமென்று டிரைவர் இன்னும் சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் மூன்று மணி நேரம் கரைந்திருக்க பலரின் முகம் இருளடைந்திருந்தது. கடைசி முறையாக வண்டியிலிருந்து வெளியே வந்த டிரைவர் இப்போதைக்கு வண்டியை சரிசெய்ய முடியாதென்றும் நாளை காலை மெக்கானிக் வந்தால்தான் முடியுமென்றும் சொல்லி அதிர வைத்தார். பனியில் வண்டி புதைந்து நின்று பழக்கமிருந்த டிரைவரின் பேச்சில் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் இருந்தது. ஆனால் அதைக் கேட்ட எங்கள் முகங்களில் ரத்த நாளங்கள் வற்றிப் போயிருந்தன..மணி ஆறு, காலையில் ஹோட்டலில் எதுவும் சாப்பிடாமல் லொக்கேஷனில் போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்த எங்களுக்கு அந்தக் குளிரிலும் பசி அதிகரித்தது. பசியில் தளர்ந்துபோயிருந்தோம். ஒரு பகல் முழுவதும் அங்கேயே நின்றிருந்தபோதும் எந்த வாகனமும் எங்களைக் கடந்து போகவில்லை. எங்களைத்தேடி யாரும் வரவுமில்லை. ஒருவேளை நாங்கள் பாதை மாறி வந்திருக்கலாம் அல்லது பனிமலை சரிந்து பாதை மூடியிருக்கலாம். சாலையின் ஒரு புறம் மலைக்கு மேலே போகும் பனிமலை. மறுபுறம் மிக ஆழமான பள்ளம். அந்த இடத்தின் பேரழுகு, ஏதோ ஒரு பயங்கரத்தைத் தனக்குள் புதைத்து வைத்திருப்பதாய்த் தோன்றியது..பனிக்காற்றைத் தடுக்கும் போர்வைகளோ, கம்பளி உடைகளோ எங்களிடம் இல்லை. பகலில் அணியும் சாதாரண உடைகளையே அணிந்திருந்தோம். இன்னும் இரண்டு மணிநேரத்தில் பனிக்காற்றின் நர்த்தனம் தொடங்கிவிடும். நர்த்தன அதிர்வில் அதன் பாகங்கள் இடிந்து விழலாம். வண்டியில் உட்கார்ந்திருப்பதுகூட ஆபத்தானது. நாங்கள் பேச்சற்றுப் போயிருந்தோம். உதவி கேட்கவோ, தகவல் சொல்லவோ எங்களிடம் வயர்லெஸ்சோ, அலைபேசியோ இல்லை. எப்படி இந்த இரவைக் கடப்பது? விடிந்தால் எங்களில் யார் மிச்சமிருப்பார்கள்? அதி சீக்கிரமாகச் சூழல் இருளத் துவங்க பனிக் காற்றின் ஊளையிடல் ஒரு துர்க்கனவினைப் போல எங்களைக் கவிழ்த்தது. பனியிலும், பயத்திலும் உறைந்து போனோம். சட்டென அதிர வைப்பதுபோல மலை உச்சியிலிருந்து ஒரு குரல்.."ஏய் மம்முட்டி…".அனைவரும் அதிர்ந்து ஒலி வந்த திசையில் திரும்பினோம். இந்த இரவில், காஷ்மீரின் நடுக்கமான சூழலில் யார் என்னைக் கூப்பிட்டது?.மலையிலிருந்து மூன்று பேர் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு இறங்கி வந்தார்கள். உடல் முழுவதையும் கம்பளிகளால் மூடியிருந்தார்கள். அருகில் வந்தபோதுதான் ஆறடி உயரமுள்ள ஆஜானுபாகுவான ஓர் ஆணும், பெண்ணும், இளம்பெண்ணுமாக அவர்கள் மூன்று பேர் என்பது புரிந்தது. கனவா அல்லது நிஜமா என்றே தெரியவில்லை. அவர் தன் கையை என்னை நோக்கி நீட்டி பச்சை மலையாளத்தில்,."நான் கர்னல் கமால், திருவனந்தபுரம்" என்றார்..இறுகப் பிடித்த அவருடைய கைச்சூட்டின் இதமான வெப்பம் மிகப் பெரிய நிம்மதியாய் என் உடல் முழுக்கப் பரவியது. எங்கள் எல்லோர் முகங்களிலும் வர்ண மொட்டுகள் பூக்க ஆரம்பித்தன. நாங்கள் கர்னலிடம் எங்கள் சூழ்நிலையைச் சொன்னோம்..எங்கள் வண்டி நிற்பதற்குக் கொஞ்சம் மேலேதான் அவருடைய வீடு. பக்கத்தில் இதேபோல் வேறு சில வீடுகளும் இருக்கின்றன. ஆனால் மலையின் அடுத்த அடுக்கிற்கு ஏறினால்தான் அந்த வீடுகளைப் பார்க்க முடியும். பனி மூடியதால் அவற்றைக் கண்டுபிடிப்பதும் சிரமம். வீட்டிலிருந்து வண்டிப்பாதையும் தெரியாது. எங்களுடைய வண்டி பழுதாகி நின்றிருந்த இடத்தையும் தாண்டி, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற அவர்களுடைய வண்டியை எடுக்கவே அவர்கள் இப்போது வந்திருக்கிறார்கள். மகளை இரவுப் பயணத்திற்கு டில்லிக்கு அனுப்பவேண்டும். காலையிலிருந்து சாப்பிடாமல் இருக்கும் எங்கள் நிலைமையை அவரிடம் சொன்னோம். அவர் எங்களை அவர்களின் வீட்டிற்கு அவசரமாய் அழைத்துப் போனார்..ஊருக்குப் போக இருந்ததால் அவர்கள் வீட்டில் அன்று சமைத்திருக்கவில்லை. சமையலுக்கான பொருட்களும் பெரிதாக அந்த வீட்டில் இருப்பில்லை. கிடைத்த கேக்கும், ரொட்டித் துண்டுகளும், கறுப்பு டீயும் அதீத ருசியைத் தந்தன. 'இனி இறந்து போக மாட்டோம்' என்ற தைரியம் துளிர்விட முகம் தெளிய ஆரம்பித்து மற்ற விஷயங்களையும் யோசிக்க வைத்தது. கமாலின் வீட்டிலிருந்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் தொலைபேசியில் தகவல் கொடுத்தோம்..கமால் அவருடைய கார் நிற்கும் இடத்திற்கு எப்போதும் வேறு வழியில்தான் செல்வாராம். அன்றைக்கு மட்டுமே இந்த வழியில் வந்திருக்கிறார். பகல் முழுவதும் அதே இடத்தில் பட்டினியால் அலைந்தபோதும் கொஞ்சம் மேலே சாலை ஓரத்தில் பனியில் புதைந்தபடி இப்படியொரு வீடு இருப்பதை நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் இரவில் ஆபத்தின் விளிம்பிலிருந்த எங்களைக் காக்க ஒரு ரட்சகனாய் கமால் வந்தார். ஆகாயத்திலிருந்து ஒரு ரட்சகன் இறங்கி வருவதைப் போலத்தான் முதல் பார்வையில் அவர் எங்களுக்குத் தெரிந்தார். அதன்பின்பு அங்கிருந்த நாட்களில் கமாலோடு நெருங்கிய நண்பர்களானோம். அந்தத் திருவனந்தபுரத்து மலையாளியை அதற்குப் பிறகு நான் சந்திக்கவேயில்லை..உயிர் காத்த ரட்சகனே இப்போது எங்கிருக்கிறாய்?.கடுங்குளிரிலும் பனிப்பொழிவிலுமிருந்து காப்பாற்றப்பட்ட அந்த இரவின் அடர்த்தியில் நான் ராணுவ வீரர்களைப் பற்றி பலவாறு யோசித்தபடி இருந்தேன். ஒரு நாளில் தற்செயலாய் அமைந்த பட்டினியையும், குளிரையும், நிர்கதியையுமே எங்களால் தாங்கமுடியாமல் தளர்ந்திருந் தோம். நாள் கணக்கில் உணவும், தண்ணீருமில்லாமல் தனியாளாய் சில இடங்களில் மாட்டிக் கொள்ளும் ஒரு ராணுவ வீரன், ஐஸ் கட்டியைக் கையிலெடுத்து உரசி, சூடாக்கி தண்ணீராக்கிக் குடித்த அனுபவத்தையெல்லாம் கமால் சொன்னார். நாம் தூங்கும்போது இந்த அவஸ்தையிலும், நம் நல்வாழ்வுக்காக, பாதுகாப்புக்காக, நிம்மதிக்காக, நாம் காணும் சந்தோஷக்கனவு கலையக்கூடாது என்பதற்காக அவர்கள் பனிபொழியும் இரவுகளில் காவலுக்கு நிற்கிறார்கள்..எல்லைப் பாதுகாப்பில் இருக்கும் ஜவான்களுக்கு வாழ்விற்கும், மரணத்திற்குமான தூரம் ஒரே ஒரு வெடிகுண்டின் இடைவெளியாக மட்டுமே இருக்கிறது. நம் எல்லோரையும் அதன் அழகின், கம்பீரத்தின் வழி ஈர்க்கும் பனியில் பொதித்து வைத்திருக்கும் கண்ணிவெடிகளுக்கு மேலே வைக்கும் ஒரு காலடியின் அகலம் மட்டுமாக இருக்கிறது. ராணுவவீரர்கள் தங்களுக்குள் எந்தப் பகையுடனுமில்லை. அவர்கள் பரஸ்பரம் அறிமுகமே இல்லாதவர்கள். ஆனால், தங்கள் நாட்டிற்காக பகையேற்றிருக்கிறார்கள்..ஒரு கோழியைக்கூடக் கொல்லத் தயங்கும் சாத்வீகன்தான் எதிரில் வரும் ஒரு மனிதனின் இதயத்துக்கு நேராக மிகச்சரியாக குறிபார்க்கிறான், வெடிகுண்டை வெடிக்கச் செய்து மனிதகுலத்தைச் சிதைத்து அழிக்கிறான்..பனியிலும் கடுங்குளிரிலும் தூங்காமல் பார்வையைக் கூர்மையாக்கி, துப்பாக்கியுடன் உலவும்பொழுது மனதில், வீட்டில் உள்ளவர்களின் முகங்களோ, சொந்தபந்தங்களின் நினைவுகளோ இல்லை. மின்னி மறையும் ஒரு நிமிட இடைவெளிகூட ஒரு யுத்தத்திற்கான முதல் அழைப்பாய் இருக்கலாம். எந்தச் சூழலிலும் உள்ளே அணையாதிருப்பது தேசத்தின் மீதான மாறாத பற்று மட்டுமே..யுத்தகாலங்களில் மட்டுமே நாம் இவர்களைப்பற்றிக் கொஞ்சமாவது யோசிக்கிறோம். யுத்தமில்லாத நேரங்களில் வெறுமனே குடித்தும், தின்றும், அலைந்தும் நாட்களைக் கடத்துபவர்களாகத்தான் நாம் அவர்களை நினைக்கிறோம். "அவன் மிலிட்டரிக்காரன்" எனும் தொனியில் விடுமுறையில் கொண்டுவரும் மதுக்குப்பிகளிலேயே நம் கவனம் குவிந்து, அவனுடைய தியாகத்திற்கான மரியாதையைச் சிதைக்கிறோம். மிகச்சரியாய் இயற்கையின் பேரழிவையோ, ஒரு வெடிகுண்டின் சத்தத்தையோ அனுபவித்தறியாத ஒரு மலையாளிக்குப் பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் பார்ப்பது மட்டுமே யுத்தம். எல்லையில் நடக்கும் கலவரப் பேரவஸ்தையைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? நம்முடைய தேசத்தின் மீதான பிரியம்கூட யதார்த்தத்லிருந்து மிகத் தொலைவில் நிற்கிறது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை நேசிப்பதுபோல, நமக்காகத் தன் சந்தோஷத்தின் துளிகளைக்கூடத் தியாகம் செய்து காவலிருக்கும் அந்த வீரர்களை நாம் நேசிப்போம். மரியாதை செய்வோம். அவர்களை நினைத்துப் பெருமைப்படுவோம், கர்வப்படுவோம். அவர்களைப்போல இந்த தேசத்திற்காக என்ன செய்யலாம் என்று யோசிப்போம்..ஜெய்ஹிந்த்….(தொடரும்)
ஒரு கலைஞனின் வாழ்க்கையில் – 13.மம்முட்டி. தமிழில் கே.வி.ஷைலஜா.பனிமலையின் சலனமற்ற அமைதி என்னைக் காஷ்மீரை நேசிக்க வைத்தது. பார்வை துளித்துளியாய் முடியும் தூரம்வரை வெண்பஞ்சுக் கூட்டமாய் கொட்டிக் கிடக்கும் உறைந்த பனிப் பிரவாகமும் தத்தி தத்தி விழும் பால்யத்தைப் போன்ற பனித் துகள்களும் இப்போதும் மனதில் உறைந்திருக்கிறது. பனிக்குன்றுகளிலிருந்து குன்றுகளுக்குத் தாவும் காட்சிதான் அன்றைய படப்பிடிப்பு..காலை பதினோரு மணிக்குப் படப்பிடிப்பு ஆரம்பிப்பதாக இருந்தது. 'குல்மர்க் ஹில்டன்' விடுதியிலிருந்து அதிக தூரம் பயணம் செய்த பின்னரே படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடைய முடியும். சக்கரத்தில் சங்கிலி பிணைத்த வண்டிகளையே பனிமலையில் பயன்படுத்துகிறார்கள்..நான், சுரேஷ்கோபி, முகேஷ், கணேசன், விஜயராகவன், குஞ்ஞன், சித்திக், மோகன் ஜோஸ், மணியன் பிள்ளை ராஜ் என எல்லோரும் சேர்ந்து சங்கிலியால் சக்கரம் பிணைக்கப்பட்ட வண்டியில் புறப்பட்டோம். பிரதான சாலையை விட்டு மலைப் பாதைக்கு வண்டி திரும்பியதுமே புறக்காட்சிகளின் வசீகரம் எங்களை ஈர்த்தன. பனியால் சூழப்பட்ட வெளி, வெண்மையென்ற ஏக நிறமானாலும், நிற்க வைத்து கவனத்தைக் கோரும் அழகு அதற்கிருந்தது. காலை பத்து மணி. வண்டியில் கேட்ட அபஸ்வரத்தின் தொடர்ச்சியாய் நின்றுபோன வாகனத்திலிருந்து இறங்கிப் பார்த்த டிரைவர் ஹிந்தியில் சொன்னான்..'சின்னப் பிரச்னைதான். உடனே சரி பண்ணிடறேன்'..பிரச்னையின் தீவிரத்தை டிரைவர் உட்பட நாங்கள் யாரும் புரிந்து கொள்ளாமல் போனதால் வண்டிக்குள் உட்கார்ந்தபடியே ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். பிறகு வெளியே இறங்கி வந்து சூழலின் அழகை ரசித்தோம். கேலிக்கும் கிண்டலுக்கும் குறைவேதும் இல்லாமல் நேரம் நகர்ந்தது. மகிழ்வின் சிறகடிப்புகளில் இரண்டு மூன்று மணி நேரம் உதிர்ந்திருந்தது. பேச்சின் கதகதப்பில் மெல்ல மெல்ல ஈரம் படர்ந்தது. பலருக்கும் கிண்டலே வராமல்போன நேரமது. பசிக்கத் தொடங்கிய நேரத்தில் சாப்பாடு இல்லையென்றாலும் நல்ல உணவைப் பற்றிப் பேசலாமே என்று எப்போதோ சாப்பிட்ட செம்மீன் குழம்பு வைப்பதை நேர்த்தியாய்ச் சொல்லத் தொடங்கினேன். சுத்தமாகக் கழுவின செம்மீனை, மிளகாய், வெங்காயம், இஞ்சி வைத்து நன்றாகக் கல்லில் தட்டி எடுத்துப் புரட்டிக்கொள்ள வேண்டும். மசாலாவில் ஊறின செம்மீனை இளந்தீயில் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி நீர் வற்றும்போது குடம்புளி கறிவேப்பிலை சேர்த்து தேங்காய் எண்ணெயில் வறுத்தெடுக்க வேண்டும். புளிச்சக்கையையும் கறிவேப்பிலையையும் வறுத்தபின் எடுத்துவிட வேண்டும்..பசியை மறக்க, சாப்பாட்டைப் பற்றிய விவரணையே சிறிது நேரத்திற்குப் போதுமானதாக இருந்தது. எங்கள் வண்டியில் தண்ணீர்கூட இல்லை. பழுது சரியாகி விடுமென்று டிரைவர் இன்னும் சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் மூன்று மணி நேரம் கரைந்திருக்க பலரின் முகம் இருளடைந்திருந்தது. கடைசி முறையாக வண்டியிலிருந்து வெளியே வந்த டிரைவர் இப்போதைக்கு வண்டியை சரிசெய்ய முடியாதென்றும் நாளை காலை மெக்கானிக் வந்தால்தான் முடியுமென்றும் சொல்லி அதிர வைத்தார். பனியில் வண்டி புதைந்து நின்று பழக்கமிருந்த டிரைவரின் பேச்சில் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் இருந்தது. ஆனால் அதைக் கேட்ட எங்கள் முகங்களில் ரத்த நாளங்கள் வற்றிப் போயிருந்தன..மணி ஆறு, காலையில் ஹோட்டலில் எதுவும் சாப்பிடாமல் லொக்கேஷனில் போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்த எங்களுக்கு அந்தக் குளிரிலும் பசி அதிகரித்தது. பசியில் தளர்ந்துபோயிருந்தோம். ஒரு பகல் முழுவதும் அங்கேயே நின்றிருந்தபோதும் எந்த வாகனமும் எங்களைக் கடந்து போகவில்லை. எங்களைத்தேடி யாரும் வரவுமில்லை. ஒருவேளை நாங்கள் பாதை மாறி வந்திருக்கலாம் அல்லது பனிமலை சரிந்து பாதை மூடியிருக்கலாம். சாலையின் ஒரு புறம் மலைக்கு மேலே போகும் பனிமலை. மறுபுறம் மிக ஆழமான பள்ளம். அந்த இடத்தின் பேரழுகு, ஏதோ ஒரு பயங்கரத்தைத் தனக்குள் புதைத்து வைத்திருப்பதாய்த் தோன்றியது..பனிக்காற்றைத் தடுக்கும் போர்வைகளோ, கம்பளி உடைகளோ எங்களிடம் இல்லை. பகலில் அணியும் சாதாரண உடைகளையே அணிந்திருந்தோம். இன்னும் இரண்டு மணிநேரத்தில் பனிக்காற்றின் நர்த்தனம் தொடங்கிவிடும். நர்த்தன அதிர்வில் அதன் பாகங்கள் இடிந்து விழலாம். வண்டியில் உட்கார்ந்திருப்பதுகூட ஆபத்தானது. நாங்கள் பேச்சற்றுப் போயிருந்தோம். உதவி கேட்கவோ, தகவல் சொல்லவோ எங்களிடம் வயர்லெஸ்சோ, அலைபேசியோ இல்லை. எப்படி இந்த இரவைக் கடப்பது? விடிந்தால் எங்களில் யார் மிச்சமிருப்பார்கள்? அதி சீக்கிரமாகச் சூழல் இருளத் துவங்க பனிக் காற்றின் ஊளையிடல் ஒரு துர்க்கனவினைப் போல எங்களைக் கவிழ்த்தது. பனியிலும், பயத்திலும் உறைந்து போனோம். சட்டென அதிர வைப்பதுபோல மலை உச்சியிலிருந்து ஒரு குரல்.."ஏய் மம்முட்டி…".அனைவரும் அதிர்ந்து ஒலி வந்த திசையில் திரும்பினோம். இந்த இரவில், காஷ்மீரின் நடுக்கமான சூழலில் யார் என்னைக் கூப்பிட்டது?.மலையிலிருந்து மூன்று பேர் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு இறங்கி வந்தார்கள். உடல் முழுவதையும் கம்பளிகளால் மூடியிருந்தார்கள். அருகில் வந்தபோதுதான் ஆறடி உயரமுள்ள ஆஜானுபாகுவான ஓர் ஆணும், பெண்ணும், இளம்பெண்ணுமாக அவர்கள் மூன்று பேர் என்பது புரிந்தது. கனவா அல்லது நிஜமா என்றே தெரியவில்லை. அவர் தன் கையை என்னை நோக்கி நீட்டி பச்சை மலையாளத்தில்,."நான் கர்னல் கமால், திருவனந்தபுரம்" என்றார்..இறுகப் பிடித்த அவருடைய கைச்சூட்டின் இதமான வெப்பம் மிகப் பெரிய நிம்மதியாய் என் உடல் முழுக்கப் பரவியது. எங்கள் எல்லோர் முகங்களிலும் வர்ண மொட்டுகள் பூக்க ஆரம்பித்தன. நாங்கள் கர்னலிடம் எங்கள் சூழ்நிலையைச் சொன்னோம்..எங்கள் வண்டி நிற்பதற்குக் கொஞ்சம் மேலேதான் அவருடைய வீடு. பக்கத்தில் இதேபோல் வேறு சில வீடுகளும் இருக்கின்றன. ஆனால் மலையின் அடுத்த அடுக்கிற்கு ஏறினால்தான் அந்த வீடுகளைப் பார்க்க முடியும். பனி மூடியதால் அவற்றைக் கண்டுபிடிப்பதும் சிரமம். வீட்டிலிருந்து வண்டிப்பாதையும் தெரியாது. எங்களுடைய வண்டி பழுதாகி நின்றிருந்த இடத்தையும் தாண்டி, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற அவர்களுடைய வண்டியை எடுக்கவே அவர்கள் இப்போது வந்திருக்கிறார்கள். மகளை இரவுப் பயணத்திற்கு டில்லிக்கு அனுப்பவேண்டும். காலையிலிருந்து சாப்பிடாமல் இருக்கும் எங்கள் நிலைமையை அவரிடம் சொன்னோம். அவர் எங்களை அவர்களின் வீட்டிற்கு அவசரமாய் அழைத்துப் போனார்..ஊருக்குப் போக இருந்ததால் அவர்கள் வீட்டில் அன்று சமைத்திருக்கவில்லை. சமையலுக்கான பொருட்களும் பெரிதாக அந்த வீட்டில் இருப்பில்லை. கிடைத்த கேக்கும், ரொட்டித் துண்டுகளும், கறுப்பு டீயும் அதீத ருசியைத் தந்தன. 'இனி இறந்து போக மாட்டோம்' என்ற தைரியம் துளிர்விட முகம் தெளிய ஆரம்பித்து மற்ற விஷயங்களையும் யோசிக்க வைத்தது. கமாலின் வீட்டிலிருந்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் தொலைபேசியில் தகவல் கொடுத்தோம்..கமால் அவருடைய கார் நிற்கும் இடத்திற்கு எப்போதும் வேறு வழியில்தான் செல்வாராம். அன்றைக்கு மட்டுமே இந்த வழியில் வந்திருக்கிறார். பகல் முழுவதும் அதே இடத்தில் பட்டினியால் அலைந்தபோதும் கொஞ்சம் மேலே சாலை ஓரத்தில் பனியில் புதைந்தபடி இப்படியொரு வீடு இருப்பதை நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் இரவில் ஆபத்தின் விளிம்பிலிருந்த எங்களைக் காக்க ஒரு ரட்சகனாய் கமால் வந்தார். ஆகாயத்திலிருந்து ஒரு ரட்சகன் இறங்கி வருவதைப் போலத்தான் முதல் பார்வையில் அவர் எங்களுக்குத் தெரிந்தார். அதன்பின்பு அங்கிருந்த நாட்களில் கமாலோடு நெருங்கிய நண்பர்களானோம். அந்தத் திருவனந்தபுரத்து மலையாளியை அதற்குப் பிறகு நான் சந்திக்கவேயில்லை..உயிர் காத்த ரட்சகனே இப்போது எங்கிருக்கிறாய்?.கடுங்குளிரிலும் பனிப்பொழிவிலுமிருந்து காப்பாற்றப்பட்ட அந்த இரவின் அடர்த்தியில் நான் ராணுவ வீரர்களைப் பற்றி பலவாறு யோசித்தபடி இருந்தேன். ஒரு நாளில் தற்செயலாய் அமைந்த பட்டினியையும், குளிரையும், நிர்கதியையுமே எங்களால் தாங்கமுடியாமல் தளர்ந்திருந் தோம். நாள் கணக்கில் உணவும், தண்ணீருமில்லாமல் தனியாளாய் சில இடங்களில் மாட்டிக் கொள்ளும் ஒரு ராணுவ வீரன், ஐஸ் கட்டியைக் கையிலெடுத்து உரசி, சூடாக்கி தண்ணீராக்கிக் குடித்த அனுபவத்தையெல்லாம் கமால் சொன்னார். நாம் தூங்கும்போது இந்த அவஸ்தையிலும், நம் நல்வாழ்வுக்காக, பாதுகாப்புக்காக, நிம்மதிக்காக, நாம் காணும் சந்தோஷக்கனவு கலையக்கூடாது என்பதற்காக அவர்கள் பனிபொழியும் இரவுகளில் காவலுக்கு நிற்கிறார்கள்..எல்லைப் பாதுகாப்பில் இருக்கும் ஜவான்களுக்கு வாழ்விற்கும், மரணத்திற்குமான தூரம் ஒரே ஒரு வெடிகுண்டின் இடைவெளியாக மட்டுமே இருக்கிறது. நம் எல்லோரையும் அதன் அழகின், கம்பீரத்தின் வழி ஈர்க்கும் பனியில் பொதித்து வைத்திருக்கும் கண்ணிவெடிகளுக்கு மேலே வைக்கும் ஒரு காலடியின் அகலம் மட்டுமாக இருக்கிறது. ராணுவவீரர்கள் தங்களுக்குள் எந்தப் பகையுடனுமில்லை. அவர்கள் பரஸ்பரம் அறிமுகமே இல்லாதவர்கள். ஆனால், தங்கள் நாட்டிற்காக பகையேற்றிருக்கிறார்கள்..ஒரு கோழியைக்கூடக் கொல்லத் தயங்கும் சாத்வீகன்தான் எதிரில் வரும் ஒரு மனிதனின் இதயத்துக்கு நேராக மிகச்சரியாக குறிபார்க்கிறான், வெடிகுண்டை வெடிக்கச் செய்து மனிதகுலத்தைச் சிதைத்து அழிக்கிறான்..பனியிலும் கடுங்குளிரிலும் தூங்காமல் பார்வையைக் கூர்மையாக்கி, துப்பாக்கியுடன் உலவும்பொழுது மனதில், வீட்டில் உள்ளவர்களின் முகங்களோ, சொந்தபந்தங்களின் நினைவுகளோ இல்லை. மின்னி மறையும் ஒரு நிமிட இடைவெளிகூட ஒரு யுத்தத்திற்கான முதல் அழைப்பாய் இருக்கலாம். எந்தச் சூழலிலும் உள்ளே அணையாதிருப்பது தேசத்தின் மீதான மாறாத பற்று மட்டுமே..யுத்தகாலங்களில் மட்டுமே நாம் இவர்களைப்பற்றிக் கொஞ்சமாவது யோசிக்கிறோம். யுத்தமில்லாத நேரங்களில் வெறுமனே குடித்தும், தின்றும், அலைந்தும் நாட்களைக் கடத்துபவர்களாகத்தான் நாம் அவர்களை நினைக்கிறோம். "அவன் மிலிட்டரிக்காரன்" எனும் தொனியில் விடுமுறையில் கொண்டுவரும் மதுக்குப்பிகளிலேயே நம் கவனம் குவிந்து, அவனுடைய தியாகத்திற்கான மரியாதையைச் சிதைக்கிறோம். மிகச்சரியாய் இயற்கையின் பேரழிவையோ, ஒரு வெடிகுண்டின் சத்தத்தையோ அனுபவித்தறியாத ஒரு மலையாளிக்குப் பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் பார்ப்பது மட்டுமே யுத்தம். எல்லையில் நடக்கும் கலவரப் பேரவஸ்தையைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? நம்முடைய தேசத்தின் மீதான பிரியம்கூட யதார்த்தத்லிருந்து மிகத் தொலைவில் நிற்கிறது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை நேசிப்பதுபோல, நமக்காகத் தன் சந்தோஷத்தின் துளிகளைக்கூடத் தியாகம் செய்து காவலிருக்கும் அந்த வீரர்களை நாம் நேசிப்போம். மரியாதை செய்வோம். அவர்களை நினைத்துப் பெருமைப்படுவோம், கர்வப்படுவோம். அவர்களைப்போல இந்த தேசத்திற்காக என்ன செய்யலாம் என்று யோசிப்போம்..ஜெய்ஹிந்த்….(தொடரும்)