
ரயில் சீரான குலுக்கலுடன் ஓடிக் கொண்டிருந்தது.
சாய்ந்து அமர்ந்திருந்த சமீரா கொஞ்சம் பூசிய மாதிரி இருந்தாள். கழுத்தில் புதிய தாலி. கொஞ்சம் அதிகப்படியான மஞ்சள் பூச்சுடன் இருந்தது. ஏழு நாட்களுக்கு முன்பு குனிந்த தலையுடன் வாங்கிக் கொண்ட தாலி.
தாலியைக் கட்டிய கோகுல் எதிரே அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இந்த தாலியை கட்டுவதற்காக நிறைய உழைத்திருக்கிறான். சமீராவை காதலித்திருக்கிறான்... வீட்டில் கொஞ்சம் சண்டை போட்டு பெற்றோர் சம்மதம் வாங்கியிருக்கிறான்.
சென்னையிலிருந்து திருப்பூருக்கு ரயிலில் போய்க் கொண்டிருக்கிறார்கள். சமீராவின் உறவுக்காரர்கள் விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள். எப்படியும் புதுத் துணி வைத்துக் கொடுப்பார்கள். இன்னும் இரண்டு மாதத்திற்கு இந்த சம்பிரதாயங்கள் ஓடும்.
நல்ல சாப்பாடு போடுவார்கள். சாப்பிட்ட தட்டைக் கூட கழுவுவார்கள்.
நீலகிரி எக்ஸ்பிரஸ் அரக்கோணத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு பத்து மணி இருக்கலாம்.
ஒரு வாரம் முன்பு டிக்கெட் ரிசர்வ் செய்தும் பெர்த் உறுதியாகவில்லை. ஆர்.ஏ.சி. தான் கிடைத்தது. இருவரும் எதிர் எதிரே அமர்ந்து கொண்டிருந்தார்கள்.
"காட்பாடி வந்த பிறகு காலி இருந்தா பெர்த் கொடுக்கறேன்" – தொப்பையில்லாத பீகார் டிக்கெட் பரிசோதகர் வாக்குறுதி வழங்கினார்.
கோகுல் பேச ஆரம்பித்தான்.
"இதே நீலகிரி எக்ஸ்பிரஸ். இதே மாதிரி ஆர்.ஏ.சி…ஞாபகம் இருக்கா சமீ?" என்றான். சமீராவே சிறிய பெயர்தான். அதையும் சுருக்குவதில் ஒரு செல்லமும் அன்யோன்யமும் தெரிந்தது.
"டிசம்பர் மாசம் நான்காம் தேதி" என்றாள் சமீரா.
"தேதி கூட ஞாபகம் வைச்சிருக்கியா?"
"எப்படி மறக்கும்? உங்கள முதன் முதல்ல சந்திச்ச நாள்"
"எனக்குத் தேதி ஞாபகம் இல்லே"
அவனைச் சற்றே கோபத்துடன் பார்த்தாள் சமீரா.
"ஆனா சீட் நம்பர் ஞாபகம் இருக்கு. 55"
"இப்போ 47" என்று சிரித்தாள் சமீரா.
"கொஞ்சம் இறங்கி வந்திருக்கோம்"
"இல்லே. நெருங்கி வந்திருக்கோம்"
"டிசம்பர் நான்காம் தேதி நீங்க எனக்காக செஞ்ச உதவிக்காகத்தான் நான் உங்கள விரும்ப ஆரம்பிச்சேன். இப்போ கல்யாணத்துல வந்து முடிஞ்சாச்சு."
"அது ஒன்னும் பெரிய உதவி இல்லே"
"யாரா இருந்தாலும் செஞ்சிருப்பீங்களா?"
"அதெப்படி? உன்னைப் பார்த்தவுடனே செய்யணும்னு தோனினது. செஞ்சேன்."
"அன்னைக்கு எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டீங்க. அதிகாலை குளிர்ல அஞ்சு மணிக்கு"
கோகுல் கண்களை மூடிக் கொண்டான். டிசம்பர் நான்காம் தேதி நடந்தது நினைவுக்கு வந்தது.
டிசம்பர் நான்கு. சென்னையிலிருந்து புறப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸில் ஏறியிருந்தான். டிக்கெட் கன்ஃபர்ம் ஆகவில்லை. ஆர்.ஏ.சி. 55.
ஒரே ஒரு சிறிய முதுகுப் பை மட்டுமே. சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு காலை எதிர் சீட்டின் மீது வைத்து செல்போனை நோண்ட ஆரம்பித்தான்.
"எக்ஸ்க்யூஸ் மீ" என்ற குரல் கேட்டது. நிமிர்ந்தான். அவள் நின்று கொண்டிருந்தாள். ஒரு பெரிய பெட்டி. அதனுடன் சேர்த்து இரண்டு சிறிய பைகள். போதாததுக்கு ஒரு ஹேண்ட் பேக் வேறு.
"நான் 55" என்றாள்.
"பார்த்தா 25 மாதிரி தெரியுது?"
அவள் பெட்டியை கீழே வைத்துக் கொண்டே அவனை முறைத்தாள்.
"கொஞ்சம் ஹெல்ப் பண்ணட்டுமா?" என்றான்.
"என் பெர்த் நம்பர் 55" என்றாள் மறுபடியும்.
"நானும் 55"
"அப்படின்னா?"
"ஆர்.ஏ.சி. பெர்த் கிடையாது"
"வாட்…நான் தூங்க முடியாதா? அதெப்படி?"
"அப்படித்தான். ரயில்வே ரூல்ஸ் தெரியாதா? இந்த 55ஐ நாம ரெண்டு பேரும் ஷேர் செய்யறோம்"
"நீங்க ஒரு 5. நான் ஒரு 5 ஆ?"
"ஜோக் நல்லா இல்லே. இந்த ஒரே பெர்த்தான் ரெண்டு பேருக்கும்"
"எப்படி முடியும்?"
"உக்காந்துக்கிட்டே வரணும்"
"ஆனா ஸ்லீப்பர் சார்ஜஸ் வாங்கியிருக்காங்களே!"
"ராஜ்ய சபால போய்க் கேளுங்க"
அவள் பதில் பேசவில்லை. பின் பக்கம் சாய்ந்து அமர்ந்தாள். அவள் முகம் அழகாய் இருந்தாலும் ஒரு அசதி தெரிந்தது. களைத்துப் போயிருக்கிறாள். கண்கள் தூக்கத்துக்கு கெஞ்சிக் கொண்டிருந்தன.
"என்ன செய்யலாம்?" என்றாள்.
"தெரியாது"
"நான் தூங்கணுமே?"
"இன்னும் ரெண்டு ஸ்டேஷன் போனவுடனே யாரும் ஏறாம ஏதாவது பெர்த்
காலியிருந்தா அலாட் பண்ணுவாங்க"
அவள் தலையைக் கலைத்து விட்டுக் கொண்டாள். தூங்குவதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்து கொண்டாள். கால்களை நீட்டினாள். கோகுல் மேல் படாமல் எல்லைக் கோட்டை தாண்டாமல் கவனமாக இருந்தாள்.
கோகுல் எழுந்தான்.
"நீங்க தூங்குங்க" என்றான்.
"நீங்க?"
"நான் நின்னுப்பேன்"
"ராத்திரி முழுக்கவா?"
"இல்லேன்னா இதே பெர்த்ல ஒரு ஊசி முனை இடம் கொடுங்க. அட்ஜஸ்ட் பண்ணி உக்காந்துக்கறேன்"
"பாவம் நீங்க" என்றவள் காலை நீட்டிப் படுத்து விட்டாள். உடனே கண்ணயர ஆரம்பித்து விட்டாள்.
"சார்" என்றாள் திடீரென.
"என்ன?"
"அந்த லைட் ஆப் பண்ணிடுங்களேன்"
"சரி"
"அப்புறம்?"
"வாட்டர் பாட்டில் தானே. இந்தாங்க"
"தாங்க்ஸ். அப்புறம் இன்னொன்னு"
"இன்னொரு வாட்டர் பாட்டில் இல்லே"
"இல்லே…திருப்பூர் வந்தா எழுப்பி விடறீங்களா?"
"எதுக்கு?"
"நான் திருப்பூர்ல இறங்கணும். நான் டயர்டா இருக்கேனா…தூங்கினாலும்
தூங்கிடுவேன்"
"திருப்பூருக்கு காத்தால நாலு மணிக்கு போகும்"
"ஆமா… ப்ளீஸ் எழுப்பி விட்டுடுங்க. அலாரம் வைச்சா மத்தவங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கும். எனக்கு மத்தவங்களை டிஸ்டர்ப் பண்ணா பிடிக்காது"
"ஓ…" என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.
"சரி. எழுப்பி விடறேன்"
சமீரா தூங்க ஆரம்பித்தாள். கோகுல் ஒரு பேப்பரை விரித்து இரண்டு லோயர் பெர்த்களுக்கு நடுவே தூங்க ஆரம்பித்தான்.
நள்ளிரவு. தோள்பட்டையில் ஏதோ அதிர்வு ஏற்படவே எழுந்தான்.
சார்ஜர் ஒயர் எடுத்து அவன் மேல் தட்டிக் கொண்டிருந்தாள் சமீரா.
"ஏன் தரைல படுத்துகிட்டிருக்கீங்க?"
"என் பெர்த்ல எலிசபெத் மகாராணி படுத்துக்கிட்டிருக்காங்க"
"ஸாரி சார். திருப்பூருக்கு இன்னும் எவ்வளவு நேரம்?"
"இப்போதான் சேலம் வந்திருக்கு. நீங்க இன்னும் ரெண்டு மணி நேரம் தூங்கலாம்"
"தாங்க்ஸ்"
காலை ஐந்து மணி. வண்டி ப்ளாட்ஃபாரத்தில் நுழையும் அறிகுறிகள் தெரிந்தன. பிறகு ஒரு குலுக்கலோடு ரயில் நின்றது.
கோகுல் எழுந்தான். அவசரம் அவசரமாக முதுகுப் பை கொண்டு அவளை இடித்தான்.
"எந்திரிங்க"
சமீரா எழுந்தாள்.
"இவ்வளவு பேர் இறங்கறாங்க? வண்டியே காலியாகற மாதிரி இருக்கு. திருப்பூர்ல இவ்வளவு பேர் இறங்க மாட்டாங்களே!"
"ஆமா… இது கோயம்புத்தூர்"
"வாட்… கோயம்புத்துரா?"
"வட கோயம்புத்தூர் இல்லே. ஜங்ஷன்"
"திருப்பூர் போயிடுச்சா?"
"நாலே காலுக்கே போயிடுச்சு"
"என்ன சொல்றீங்க?" – அவனைக் கோபத்துடன் பார்த்தாள்.
"கோச்சுக்காதீங்க. திருப்பூர் தாண்டி கோயம்புத்தூர் வந்துட்டோம். உங்களை எழுப்ப மறந்துட்டேன்"
"ஏன்?"
"நானும் தூங்கிட்டேன். கொஞ்சம் டயர்ட்"
சமீரா தலையில் கை வைத்துக் கொண்டாள். கவலையாக இருப்பது தெரிந்தது.
"நான் கண்டிப்பா திருப்பூர்ல இருந்தே ஆகணும். இங்கேந்து திருப்பூர் எப்படி போறது? பஸ் இருக்கா?"
"இருக்கு. காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் போகணும். இன்னும் விடியல்லே.
டிசம்பர் குளிர் வேற"
"ம்ம்ம்ம்"
"ரோட்ல கோயம்புத்தூர் நாய்கள் வேற இருக்கும்"
"பின்னே நுங்கம்பாக்கம் நாய்ங்களா இருக்கும்? நான் பஸ் ஸ்டாண்ட் போகணும்"
"எப்படி போவீங்க?"
"போய்த்தான் ஆகணும்… எனக்கு வழி மட்டும் சொல்லுங்க"
"நீங்க இந்த இருட்டுல தனியா போக வேணாம். பாதுகாப்பு இல்லே. நான் வேணும்னா திருப்பூர் வந்து உங்களை விட்டுட்டுப் போறேன்"
"திருப்பூர் வரைக்குமா? வேணாம். உங்களுக்கு சிரமம்"
"பரவாயில்லே. ஆபத்துல உதவாதவன் மனுசனே இல்லே"
பஸ் ஸ்டாண்டுக்குப் போய் பஸ் பிடித்து திருப்பூர் போய் சேரும்போது விடிந்துவிட்டது.
"இனிமே நானே போயிடுவேன். தேங்க்ஸ்.
நீங்க எப்படி கோயம்புத்தூர் போவீங்க?" என்றாள் சமீரா.
"மறுபடியும் பஸ் பிடிச்சுடுவேன். எட்டரை, ஒன்பது மணிக்கு கோயம்புத்தூர் போயிடுவேன்"
"தாங்க்ஸ்"
அவள் நடந்தாள். சிறிது தூரம் போனதும் திரும்பினாள்.
"என் பேர் சமீரா"
"நான் கோகுல்"
"ம்ம்ம்…" ஒரு பத்து இலக்க நம்பரை சொன்னாள்.
"இதுதான் என் போன் நம்பர்"
"என் போன் நம்பர் சொல்ல மாட்டேன்"
அவள் திகைப்புடன் பார்த்தாள்.
"மிஸ்டு கால் தர்ரேன். பாத்துக்குங்க"
சிரித்துக்கொண்டே போய்விட்டாள். போகும் முன் போனஸாக ஒரு சிரிப்பு சிரித்தாள்.
அதன் பிறகு அவள் போன் செய்தாள். பிறகு தினமும் போன் செய்தாள்.
இரண்டு மாதம் கழித்து ஐ லவ் யூ சொன்னாள்.
"லவ்வா? எதுக்கு" என்றான் அவன்.
"எல்லாம் அந்த திருப்பூர் சம்பவத்துக்காகத்தான். காத்தால நேரத்துல குளிர்ல என்னைக் கொண்டு வந்து திருப்பூர்ல சேர்த்து விட்டு, மறுபடியும் நீங்க கோயம்புத்தூர் போய்… எவ்வளவு சிரமம்?"
சில ஆரம்ப உரசல்களுக்குப் பிறகு இரண்டு வீட்டிலும் திருமணத்துக்குச் சம்மதம் சொன்னார்கள்.
இதோ தம்பதிகளாக அதே ரயிலில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதே ஆர்.ஏ.சி. இரண்டு ஸ்டேஷன் வந்ததும் டிக்கெட் பரிசோதகர் வந்தார். இப்போது தொப்பையுடன் திருச்சி டிக்கெட் பரிசோதகர்.
"அடுத்த கோச்ல ஒரு பெர்த் இருக்கு. ஒருத்தர் போறீங்களா?"
"வேணாம். வேற யாருக்காவது கொடுத்திடுங்க. நாங்க உக்காந்து
பேசிக்கிட்டே வந்துடுவோம்" என்றாள் சமீரா.
"சமீ.." என்றான் கோகுல்.
அவள் பதில் பேசவில்லை.
"என்ன யோசனை?"
"டிசம்பர் நான்காம் தேதி சம்பவம்"
"இன்னும் அதையே?"
"ஆமா… எனக்கு உங்க மேல ஒரு ஈர்ப்பு வந்ததுக்கு காரணமே அதுதான். என்னைப் பொறுத்தவரை அது ஒரு டைம்லி ஹெல்ப். அதிகாலைத் தியாகம்"
"சமீரா… ஒன்னு சொல்லட்டுமா?"
"சொல்லுங்க"
"டிசம்பர் நான்காம் தேதி நானும் திருப்பூர்ல இறங்க வேண்டியவன்தான். என் ஊரும் திருப்பூர்தான். கோயம்புத்தூர் இல்லே. உன்னை மாதிரியே நானும் தூங்கிட்டு கோயம்புத்தூர் வரைக்கும் வந்துட்டேன். உன்னை
திருப்பூர்ல கொண்டு போய் விடற மாதிரி நைசா நானும் திருப்பூர் வந்துட்டேன். கோயம்புத்தூர் எல்லாம் திரும்பி போகலே. அதை தியாகம்னு நீ நினைச்சுட்டே… ஸாரி. உன்கிட்டே உண்மையை மறைச்சிட்டேன்"
மேற்கண்ட வசனத்தை சமீராவிடம் சொல்லத் துடித்தான். சொல்லவில்லை.
சில பொய்கள் இறுதிவரை காக்கப்பட வேண்டும். அவை 'தியாகம்' என்று அழைக்கப்பட்டாலும் தப்பில்லை.
"ஏதோ சொல்லணும்னு நினைச்சீங்களே? சொல்லுங்க"
"ஒன்னும் இல்லே"