இரண்டு  வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க அதிபர் பைடன்

இரண்டு  வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க அதிபர் பைடன்
Updated on

– ஹர்ஷா

மெரிக்காவில் 'நன்றி தெரிவிக்கும் நாள்' என்று ஒரு நாள் கொண்டாடப்படுகிறது.  நன்றி தெரிவிக்கும் நாள் என்பது ஒரு
வட அமெரிக்கப் பாரம்பரிய கொண்டாட்டம். 200 ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது.  இன்றைய காலகட்டத்தில் அரசியல், சமூக, கலாசார, சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும்விதமாக ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 'நன்றி தெரிவிக்கும் நாள்' கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக நன்றி தெரிவிக்கும் நாளன்று அமெரிக்கர்கள் வான்கோழி கறியை உணவாக உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வு அமெரிக்க அதிபர் மாளிகையில்  தொடங்குகிறது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பவர்கள், நன்றி தெரிவிக்கும் நாளுக்கு முன்பு  2 வான்கோழிகளுக்கு மட்டும் பொதுமன்னிப்பு அளிப்பது அங்கு பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்படும் 2 வான்கோழிகள், நாட்டிலுள்ள விலங்குக் காப்பகங்களுக்குப் பரிசாக அளிக்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு நன்றி தெரிவிக்கும் நாளை முன்னிட்டு 'ஜெல்லி' மற்றும் 'பீனட் பட்டர்' எனப் பெயரிடப்பட்ட 2 வான்கோழிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொதுமன்னிப்பு அளித்தார்.

ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நீண்ட தூரம் பயணம் செய்து தம் பெற்றோர், உடன்பிறப்புகளோடு சேர்ந்து இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். நன்றி தெரிவித்தல் நாளில் நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதுண்டு. அதில் முக்கியமானது.  அமெரிக்கக் கால்பந்தாட்டங்கள். இப்போது இந்த ஆட்டங்களை டி.வி.யில் பார்ப்பவர்கள் மிக அதிகம். சானல்கள் விளம்பரங்களில் கோடிகளை அள்ளுகிறது,  இந்த நாளுக்காக மால்களில்  சிறப்புத் தள்ளுபடியுடன்  இரவு முழுவதும் நடக்கும்  சேல்களில் கிறிஸ்துமஸ் சேலைவிட  அதிகம் விற்பனையாகும்.

நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான வான்கோழிகளைக் கொன்று சமைத்துச் சாப்பிடும்  அமெரிக்கர்களும்  அதன் மூலம் பெரும் பணம் ஈட்டும் வணிகர்களும்  அந்த வான்கோழிகளிடம்  மன்னிப்பு அல்லவா கேட்க வேண்டும்?. ஆனால், அதற்கு மன்னிப்பு வழங்குகிறார் அமெரிக்க அதிபர்.

அமெரிக்காவின் வினோதங்களில் இதுவும் ஒன்று.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com