என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?

என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?

ண்மையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடிப் பேச்சால் அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவில் லேசான உரசலும் சலசலப்பும் எழுந்திருக்கிறது. அ.தி.மு.க.-பாரதிய ஜனதா கூட்டணி நீடித்தாலும் இரு கட்சிகளிடையேயும் உரசல் தொடங்கி இருக்கிறது.

2024 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணியை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இதற்கு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைய வேண்டும் என்று பா.ஜனதா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக டெல்லி மேலிட தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்பந்தம் கொடுத்து வருகிறார்கள். ஆனால், பா.ஜனதா தலைவர்கள் நிர்பந்திப்பதை எடப்பாடி பழனிசாமிக்கு விரும்பவில்லை.

கடந்த வாரம் சென்னைக்கு வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திப்பதையும் தவிர்த்து விட்டார். இது பா.ஜ.க. வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கிறது.

ஓ.பி.எஸ்.சின் நம்பிக்கை

ஒற்றைத் தலைமை பிரச்னை இன்னும் முடிவுக்கு வராததால் ஓ.பன்னீர் செல்வம் பா.ஜனதா தலைவர்களுடன் இருக்கும் நெருக்கத்தின் காரணமாக தன்னை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், “அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும் “அ.தி.மு.க. என்றால் நான்தான். என்னிடம் தான் கட்சி ரீதியான தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறிவிட்டார். இதுபற்றி டெல்லி பா.ஜனதா தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

அதன் பிறகும் பா.ஜனதா தலைவர்கள் நிர்பந்திப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை. இதனால் கடந்த வாரம் சென்னைக்கு வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திப்பதையும் தவிர்த்து விட்டார். இதுபற்றி எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிக்கையாளார்கள் கேட்டபோது, “பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அதன் தலைவர்கள் வரும் போதெல்லாம் சந்திக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பிரதமர் மோடி வருகையின் போது எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் வரவேற்க சென்றேன்” என்றார். இந்த உரசல் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை இருந்தால் மட்டுமே தி.மு.க.வை எதிர்க்க முடியும். எங்களுக்கும் பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணியில் எந்த சிக்கலும் இதுவரை இல்லை. தேவையில்லாமல் நெருக்கடி கொடுத்தால் கூட்டணிதான் உடையும். எங்களை பொறுத்தவரை 2024 பாராளுமன்ற தேர்தல் ஒரு பொருட்டே இல்லை.

எங்கள் குறிக்கோள் 2026 சட்டசபை தேர்தல்தான். கழகம் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவோ ஏற்ற இறக்கங்களையும், சோதனைகளையும் சந்தித்து விட்டது. எனவே, எத்தகைய நெருக்கடிகளையும் சந்திக்கும் வல்லமை கட்சிக்கு உண்டு. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் வலிமையான தலைவராக இருக்கிறார். எத்தகைய சவால்களையும் அவர் சந்திப்பார் என்றார்கள்.

பா.ஜ.க.வின் கவலை

கூட்டணியில் பா.ஜ.க. இல்லா விட்டாலும் அது பற்றி கவலை இல்லை என்பதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவுக்கு இந்த அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளார். இது தமிழக பா.ஜ.க. தலைவர்களை கவலைகொள்ளச் செய்திருக்கிறது. அ.தி.மு.க. அமைக்கும் மெகா கூட்டணியில் தாங்கள்தான் முக்கிய கட்சி என்ற எண்ணத்திலிருந்த நிலையில் எடப்பாடியின் இந்த அதிரடியால் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் சற்று மிரண்டிருக்கிறார்கள்.

தங்கள் தலைவர்கள் மீது வழக்குகள் பாய காத்திருக்கும் நேரத்தில் எடப்பாடியாரின் இந்த நிலைப்பாட்டை அ.தி.மு.க.வின் மூத்ததலைவர்களில் சிலர் விரும்பவில்லை.

கூட்டணியின் எதிர்காலம்

பா.ஜனதா தலைவர்களின் அணுகுமுறையை பொறுத்துதான் இந்த கூட்டணியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்கிறார்கள். ஒ.பி.எஸ், தினகரன் தலைமையில் அ.தி.மு.க.வை பிளந்து அதனுடன் கூட்டணி அமைந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறது டெல்லி வட்டாரம். இதற்கு அடிப்படையாக அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதையும், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடத்தப்படும். வாய்ப்பு கிடைத்தால் டி.டி.வி. தினகரனை சந்திப்பேன் என்றும் பன்னீர் செல்வம் சொல்லியிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com