விண்வெளிக்குப் போகிறது  இட்லி

விண்வெளிக்குப் போகிறது  இட்லி

ன்று நம்மில் பலர் காலை சிற்றுண்டியாக வெள்ளை மற்றும் மென்மையான இட்லியுடன்தான் தொடங்குகிறோம். இன்று இட்லி தென் இந்தியாவின் உணவு மட்டுமில்லை, பல இந்திய நகரங்களில் கிடைக்கிறது.  இந்த இட்லி இந்தியஉணவில்லை, “வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தது“ என்றால் நம்பமுடிகிறதா?  தோசை, அப்பம், வடை, பஜ்ஜி போன்றவை குறித்து தமிழ்ச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, கி.மு.300ல் இருந்தே இவை நம்மிடம் பழக்கத்தில் உள்ளன. ஆனால், இட்லி?

உணவு வரலாற்றை ஆராயும் ஆய்வாளர்கள் இந்த  இட்லி இந்தியாவில் கர்நாடகா பகுதியில் எழுதப்பட்ட கவிதைகளில் இட்லி முதன்முதலில் குறிப்பிடப்பட்டதாகவும், அவை சமஸ்கிருதத்தில் 'இடலிகே' மற்றும் 'இத்தாரிகா' என்று அழைக்கப்பட்டதாகவும் உணவு வரலாற்றாசிரியர் கே.டி. அச்சையா தன் 'இந்திய உணவு‘ வரலாற்றுத் கையேட்டில் எழுதியிருக்கிறார்.

‘அலிகே‘ என்றால் கன்னடத்தில் ‘நீராவி பாத்திரம்‘ என்று பொருள். இதிலிருந்தே 'இடலிகே' என்ற சொல் வந்திருக்கலாம் என்பது அவருடைய கருத்து. அதே நூலில் 920ல் கன்னடக் கவிஞர் சிவகோடி ஆச்சார்யா எழுதிய “வத்தராதனே’ என்ற கவிதையில் இட்லி பற்றிய முதல் குறிப்பு வெளியாகியிருப்பதாகவும் சொல்லுகிறார். அதன் பின்னர் பல படைப்புகளில் இட்லி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை மேற்கோள் காடுகிறார்.கி.பி.1025ல் ‘சவுந்தராயா‘ என்ற கவிஞர் இட்லி செய்யும் முறையை விவரித்துள்ளார். அதன்பிறகு, கி.பி.1130ல் 'மனசொல்லாச' என்ற சமஸ்கிருத நூலில் இட்லி பற்றிய குறிப்பு இருப்பதாக அச்சையா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி 1235 தேதியிட்ட கர்நாடகக் குறிப்பு இட்லிகளை ஒளி மற்றும் விலை மதிப்பற்ற நாணயம் போன்ற பொருள் என்று குறிப்பிடுகிறது.

ஆனால், தமிழ் நாட்டில்  17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மச்சபுராணத்தில் 'இட்டலி' என்ற பெயரில் இட்லி பற்றிய குறிப்புகள் காணப்படுவதை தமிழக உணவு வரலாற்றை ஆராயும் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எதுவாகயிருந்தாலும் முதன் முதலில் இட்லி செய்யப்படும் விதம் விவரிக்கப்பட்டிருப்பதில் , இட்லி தயாரிக்க அரிசி பயன்படுத்தப்பட்டதாக குறிப்புகள் எதுவும்  இல்லை. அப்படியானல் உளுந்து அல்லது வேறு ஒரு தானியம் பயன்படுத்தப்பட்டிருக்கிலாம் என்கிறது வரலாறு.

அப்படியானால் அதேபோல நவீன காலத்தில் இட்லி தயாரிக்கப்படும் செயல்முறைகள் எப்போது நம்மிடம் பழக்கத்திற்கு வந்தன?

எவராலும் அந்த காலத்தில் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.  

“இட்லி இந்தோனீசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்திருக்கலாம்“ என்று கே.டி. அச்சையா தனது புத்தகத்தில் கூறியுள்ளார். 'கெட்லி' என்பது இந்தோனீசியாவில் புளிக்கவைக்கப்பட்டு வேகவைக்கப்படும் ஒரு பொருள் அவருடைய ஆராய்ச்சியின்படி, இந்தோனீசியாவில் பழங்காலத்திலிருந்தே பொருட்களை வேகவைக்கும் முறை நடைமுறையில் உள்ளது. சோயாபீன்ஸ், வேர்க்கடலை, மீன் போன்றவற்றை அந்த மக்கள் வேகவைத்து உண்டார்கள். 8 ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தோனீசியாவை ஆண்ட இந்து மன்னர்களிடம் பணிபுரிந்த இந்திய சமையல்காரர்கள் இந்தியா திரும்பியபோது நொதித்தல் செயல்முறையை இங்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்று கே.டி. அச்சையா கூறுகிறார்.

சீனாவிலும் பழங்காலத்திலிருந்தே வேகவைத்தல் முறை நடைமுறையில் உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் இந்தியா வந்த சீன புத்த துறவி ஹுயன் சாங் இந்தியாவில் நீராவி பாத்திரங்களே இல்லை என்று எழுதியிருக்கிறார். . . அதற்கு நீராவியில் சமைக்கத் தெரியாது என்று அர்த்தமல்ல. இந்தியர்களுக்கு எளிமையான முறையில் ஆவியில் வேக வைக்கத் தெரியும். அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்த பிறகு மெல்லிய துணிஅல்லது மூங்கில் கூடைகளில் பண்டம் மூடப்பட்டு மேலே இருந்து தொங்கவிடப்பட்டது. கேரளாவில் புட்டு இந்த முறையில் சமைக்கப்படும். மேலும், சிந்து பள்ளத்தாக்கு பகுதிகளில், ஒரு நீண்ட துளையிடப்பட்ட மண் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது நாம் நீராவியில் சமைத்ததைக் குறிக்கிறது"

பிற்காலத்தில், தினையுடன் அரிசியைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனை தோன்றி, இட்லி தயாரிப்பில் அரிசி சேர்ப்பதை கண்டுபிடித்தவன் தமிழன்.

இந்தோனீசியாவிலிருந்து நம் நாட்டில் குடியேறியதாக நம்பப்படும் இட்லி, நவீன காலத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. இட்லி சமைப்பதில் நிறைய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எம்டிஆர் இட்லியும், காஞ்சிபுரம் இட்லியும் மிகவும் பிரபலமாகிவிட்டன.

இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே இட்லி மிக முக்கியமான உணவுப் பொருள் என்கிறார் பிரபல உணவு எழுத்தாளர் வீர் சிங்வி.

“இந்திய பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம் இந்தியாவின் முதல் மனிதர்கள் கொண்ட விண்கலமான ககன்யானில் பயணிக்க இருக்கும் விண்வெளி வீரர்களுக்காக சில உள்நாட்டு உணவுகளை தயாரித்துள்ளது. அதில் ஒன்று “சாம்பார் இட்லி” என கடந்த 2020ஆம் ஆண்டு ஏஎன்ஐ செய்தி முகமை ட்வீட் செய்தது. கொரோனா காரணமாக ககன்யான் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கடந்த ஜூன் மாதம் தெரிவித்தார். அதாவது, இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இட்லியும் வீர்ர்களுடன் விண்வெளிக்கு போகப்போகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com