கெம்பேகெளடா சிலை திறப்பில் அரசியலா?

சிலையும் அரசியலும்
கெம்பேகெளடா சிலை திறப்பில் அரசியலா?

ண்மையில் பெங்களூரு நகரை நிர்மாணித்த கெம்பேகெளடாவின் 108 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டது. இந்த நகருக்கு வான் வழியாக வருவோரை வரவேற்கும் வகையில் சிலையை பெங்களூரு விமான நிலைய வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோதி திறந்து  வைத்திருக்கிறார்.

“16ஆம் நூற்றாண்டின் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைவராக பெங்களூரு நகரை நிர்மாணித்தவர் கெம்பேகெளடா. அவரது சிலை 511 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகா மக்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது” என்று சிலையை நாட்டுக்கு அர்பணித்து பிரதமர் பேசினார்.

2019ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், முதலமைச்சராக பதவியில் இருந்த எடியூரப்பா, “23 ஏக்கர் இடத்தில் ரூ.100 கோடி மதிப்பில் சிலையுடன் கூடிய தீம் பார்க் உருவாக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.

அயோத்தி நகரில் அமைக்கபடும் ராமர் கோயிலுக்கு நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் செங்கற்கள் எடுத்து வரப்பட்டது போல, இந்த தீம் பார்க்குக்கு அக்டோபர் 21 ஆம் தேதி முதல் மாநிலத்தின் 31 மாவட்டங்களில் இருந்து மண் மற்றும் தண்ணீர்  கொண்டு வரப்பட்டது. சில மாவட்டங்களில் பா.ஜ.க. இதற்காக விழாவே எடுத்தது.

கெம்பேகெளடாவின் சிலையை ராம் வி. சுதார் என்ற சிற்பி வடிவமைத்துள்ளார். இவர்தான்  சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும்  ஒற்றுமை சிலையை வடிவமைத்தவர். இந்தச்சிலையும்  பிரமாண்டமானது, 4,000 கிலோ எடை கொண்ட வாளுடன் சேர்ந்து இந்த சிலையின் மொத்த எடை 220 டன்கள்.

அரசியலா?

இந்ந சிலை நிறுவியதின் பின்னால் அரசியல் இருப்பதாக சில விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அவர் ஒரு சிறந்த போர் வீரர் என்ற பின்பம் கொடுக்கப்படுகிறது. திருப்பதியில் கிருஷ்ணதேவராயருக்கு  வெண்கல சிலை அமைக்கப்பட்டதற்கு மாறாக இதை அமைத்திருக் கிறார்கள்.  சிலையில் காணப்படுவது போல அவர் பெரிய மீசையுடன், கைகளில் வாள் மற்றும் கேடயம் ஆகியவற்றை கொண்டிருக்கவில்லை. அவர் போர்களில் ஈடுபட்டார் என்பது உண்மை. ஆனால், பாலேகர்களிடையே அமைதியை ஏற்படுத்த உழைத்த ராஜதந்திரியாகதான் பரவலாக  அறியப்பட்டவர். மேலும் இந்தச் சிலையிலுள்ளது போன்ற  உடைகள் அவரது காலத்தில் இந்தியாவில் இல்லை என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள். சிலை பிரதமரால் திறக்கப்படும் அளவு முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கு காரணம் அரசியல் என்கிறார்கள் சிலர்.

 கர்நாடகா மாநிலத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஒக்கலிகர் சமுதாயத்தினர் அதிகம் உள்ள பகுதிகளில் ஆளும் கட்சிக்கான செல்வாக்கு சரிந்து விடாமல் பாதுகாக்க அந்த சமூகத்தைச் சேர்ந்த கெம்பேகெளடாவின் சிலை திறக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

கெம்பேகெளுடா, முன்னேறிய சமூகத்தை சேர்ந்த ஒக்கலிகர் சமூகத்தில் இருந்து வந்தவர். இந்த சமூகத்தினர் தெற்கு கர்நாடகா அல்லது பழைய மைசூரு பிராந்தியத்தில் பெங்களூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், ஹாசான், சிக்கமக்களூரு, தும்கூரு மற்றும் கோலார் ஆகிய மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக உள்ளனர்.

அதே நேரத்தில் ஒக்கலிகர் சமூகத்தினர், இன்னொரு முன்னேறிய சமூகத்தினரான லிங்காய்த்துகளைப் போல மாநிலம் முழுவதும் பரவியிருக்கவில்லை.

லிங்காயத்துகள் வட கர்நாடகாவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் பரவலாகவும் உள்ளனர்.

பழைய மைசூரு பிராந்தியமானது காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றுக்கு இடையேயான முதன்மையான களமாகவே இருக்கிறது.

ஒக்கலிகர் சமூகத்தின் சக்திவாய்ந்த தலைவராக முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவேகெளட உள்ளார்.

இந்த பிராந்தியத்தில் கடந்த முறை நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வசதியாக வென்றிருந்தாலும்., சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு எதிர்கட்சிகளின் கைகளில் இருந்தும் பாஜகவால் இந்தத் தொகுதிகளைக் கைப்பற்ற முடியவில்லை.

யார் இந்த கெம்பேகெளடா?

1513 ஆம் ஆண்டு முதல் 1569 ஆம் ஆண்டு வரைஅவர் கர்நாடகத்தை  ஆண்டார்.  யெலஹங்காவில் பிறந்தவர். மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட தலைவராக இருந்தார். "இந்த விஜயநகரப்பேரரசர், தனக்கு கற்கோட்டைகள் கட்ட வேண்டாம் என்றும், தங்களுக்கு யாரும் சவால் விடுவதை விரும்பவில்லை என்றும் கூறினார். தனது கோட்டையை உயர்ந்த இடத்துக்கு மாற்றினார். நீண்ட தூரத்துக்கு கண்காணிப்பு மேற்கொள்வதற்கு இது அவருக்கு உதவியது. தனக்காகவும், தனது மக்களுக்காகவும் முன்னெச்சரிக்கை செய்யும் முறையை அவர் உருவாக்கினார்," நகரின் வளர்ச்சியின் எல்லையை முன்கூட்டியே அறிந்து  நகரத்தில் நான்கு கண்காணிப்பு கோபுரங்களை அவர் அமைத்தார் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்த நான்கு கோபுரங்களும் இப்போது லால்பாக், கவி கங்காதரேஸ்வரா கோவில், MEG மையம் மற்றும் யெலஹங்கா கேட் என அழைக்கப்படும் இடங்களில் உள்ளன.

விஜயநகர பேரரரசின் விதிமுறைகளை அவர் பின்பற்றினார். தன் எல்லைக்குட்பட்ட நாட்டிற்கு ஒரு  சொந்த நாணயத்தை அச்சடித்தவர்.   

கெம்பேகெளடா பற்றிய பெரும்பாலான தகவல்கள், கல்வெட்டுகளை விட நாட்டுப்புறவியல் கதைகள் மூலமே தெரியவந்தது," பெங்களூர் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை தொடரும் இந்த ஆய்வுக்கு மாநில அரசு இப்போது அதிக  நிதிஉதவி அளித்திருக்கிறது. 

இந்த  சிலைக்கு  பின்னே அரசியல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டாலும்,  பெங்களூரு நகருக்கு வான் வழியே வருவோரை  கம்பீரமாக இருக்கும் இந்தச் சிலை வரவேற்கிறது என்பதுதான் உண்மை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com