முடிவுக்கு வருகிறதா உக்ரைன் –ரஷ்யா போர்?

முடிவுக்கு வருகிறதா உக்ரைன் –ரஷ்யா போர்?

க்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. “வெறும் ராணுவ நடவடிக்கை” என்ற பெயரில் தாக்குதலை தொடுத்த ரஷ்யா இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. உக்ரைன் நிலைகுலைந்தது. இந்தப் போர்தான் உலகிலேயே மிகக் குறுகிய காலம் நடந்த போராக இருக்கும் என்றெல்லாம் போர் நிபுணர்கள் கணித்தனர். ஆனால், அடுத்த நாளே நிலைமை மாறியது. அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. நேட்டோ உறுப்பு நாடுகளும் ஆயுத உதவி, நிதியுதவி, உக்ரைன் அகதிகளுக்கு அடைக்கலம் என கருணைகாட்டத் தொடங்கின.

‘எங்களை நேட்டோவில் இணைத்துக் கொள்ளுங்கள்’ என்ற கோரிக்கை வைத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நாளடைவில் அந்த அணியில் இல்லாமலே, அணியில் இருக்கும் உறுப்பு நாடுகள் பெறும் அத்தனை உதவிகளையும் அனுபவிப்பதால் நிம்மதி பெருமூச்சு விடலானார்.

ஆயுதங்களையும், போர் உத்திகளையும் இலவசமாக அமெரிக்காவில் இருந்து இன்று வரை பெற்றுக்கொண்டிருக்கிறது உக்ரைன்.

இதனால்தான் கீவ் வரை முன்னேறிய ரஷ்யப் படைகள் வேகமாகப் பின்வாங்கியது. இப்போது ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் நான்கு மாகாணங்கள் மட்டுமே உள்ளன.

இந்தப் போரில் அமெரிக்காவுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?

‘ஈகோதான்’ என்கின்றனர் சர்வதேச வல்லுனர்கள். ரஷ்யாவுடன் நேரடியாக போரில் ஈடுபடுவது மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கும். அதேவேளையில் ரஷ்யா, உக்ரைனை வெல்ல அனுமதிப்பதும், அதனுடைய ராணுவ பலத்தை உலகிற்கு பறைச்சாற்றுவதாகிவிடும். அப்படியென்றால் வெறும் ஆயுத உதவிகளை மட்டும் வழங்கினால், அது போரில் நேரடியாக ஈடுபட்டதாகவும் இருக்காது, ரஷ்யாவுக்கும் செக் வைத்ததாக இருக்கும் என்பது மேற்குலகின் கணிப்பு. அமெரிக்காவின் தலைமையில் மேற்குலகு, நேட்டோ குழுமம் என அனைத்தும் இந்தப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தன.

ஆனால், அவர்கள் கணிப்பில் வரப்போகும் பிரச்னைகளை சரியாக ஊகிக்கவில்லை. அதில் முக்கியமானது ஆயுதங்கள் காலியாவது. நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்துமே பல்வேறு அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதால் ஓரளவு மட்டுமே ஆயுதங்களை உற்பத்தி செய்து வைத்திருந்தன. அவை அந்தந்த நாடுகளின் தற்காப்புக்கு போதுமானவையாகவே இருக்கின்றன.

அமெரிக்காவும் நேட்டோ உறுப்பு நாடுகளும். பொதுவாக நேட்டோ தன் உறுப்பு நாட்டில் போர் என்றால்தான் இதுபோல் உதவிகளை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ‘ரஷ்யா’ என்ற பொது எதிரியை சமாளிக்க அமெரிக்காவும், நேட்டோ உறுப்பு நாடுகளும், இன்னும் சில ஐரோப்பிய நாடுகளும் இப்போது உதவிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், பல ஐரோப்பிய நாடுகள். இந்தியா, சீனா போன்று ராணுவத்திற்கு அதிகம் செலவிடுவதில்லை. அப்படியான நாடுகள் தங்களிடம் உபரியாக இருக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கின. அமெரிக்கா பெருமளவில் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. உக்ரைனுக்கான அனைத்து போர் உத்திகளும் பென்டகனில் சிறப்பாக வகுத்துக் கொடுக்கப்படுகின்றன.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமைதியாக பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு தளபதிகளை இயக்கினால் போதும். அவ்வப்போது வீடியோவில் தோன்றி பேசினால் போதும் என்றளவுக்கு சூழலை எளிமைப்படுத்திக் கொடுத்திருக்கின்றன . இதை உக்ரைன் சற்று பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக நேட்டோவும், அமெரிக்காவும் பார்க்கிறது.

'ரஷ்யா தோல்வி' என்ற ஒரேயொரு வார்த்தையைக் கேட்பதற்காக செய்யும் உதவிகள் எல்லாம் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை இப்போது அமெரிக்காவும், நேட்டோவும் உணரத் தொடங்கியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா தலைமையில் நேட்டோ உறுப்பு நாடுகள் முக்கிய ஆலோசனை நடத்தின. ஐரோப்பிய யூனியனின் தலைவர் ஜோசப் பேரல் பேசுகையில், "நேட்டோ உறுப்பு நாடுகளில் ராணுவத் தளவாடங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன என்று சொல்ல மாட்டேன். ஆனால் வெகுவாகக் குறைந்துவிட்டன. பெருமளவிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வாரி வழங்கியதே இதற்குக் காரணம்" என்றார்.

கடந்த பிப்ரவரி தொடங்கி இதுவரை அமெரிக்கா மட்டும் உக்ரைனுக்கு 15.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கியுள்ளது. இதில் 155 mm ஹோவிட்சர் மற்றும் நீண்ட தூர தாக்குதலை கச்சிதமாக முடிக்கும் HIMARS ஹைமார்ஸ் ஆகியனவும் அடங்கும். இவற்றை உக்ரைன் 14 நாட்களில் காலி செய்துவிட்டு மீண்டும் கேட்கிறது. ஆனால், இந்த ஆயுதங்களை உற்பத்தி செய்ய மாதங்கள் பிடிக்கும். அதாவது, ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் நேரத்தைவிட அவற்றை காலி செய்யும் வேகம் பல நூறு மடங்கு அதிகம்.

இப்போது அமெரிக்காவும், நேட்டோ உறுப்பு நாடுகளும் இது குறித்து தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இப்போதைக்கு அமெரிக்காவுக்கு இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளன. ஒன்று அமெரிக்கா தன் சொந்த ரிஸ்கில் ஆயுதங்களை தொடர்ந்து வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஆயுத உதவியைப் படிப்படியாகவோ முற்றிலுமோ நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஆனால், சொந்தச் செலவில் பிரச்னையை இழுத்துப் போட்டுக் கொண்ட அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இந்த சிக்கலில் இருந்து எவ்வித பாதிப்பும் இல்லாமல் ரஷ்யாவின் ஏளனத்துக்கும் உள்ளாகாமல் வெளியே வர முடியுமா? என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி.

“ஒரு சுதந்திர நாடு உருவாவதற்கான போராக வர்ணிக்கப்பட்ட உக்ரைன் - ரஷ்யா போர் இப்போது ஆயுதப் பற்றாக்குறையால் விரைவில் முடிவுக்கு வரும்” என்று அமெரிக்க ஐரோப்பிய பத்திரிகைகள் எழுத ஆரம்பித்திருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com