மலையாளப் பட டீசரை வைத்து அரசியல்

மலையாளப் பட டீசரை வைத்து அரசியல்

'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் வரவிருக்கும் திரைப்படத்துக்கான டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தது. அப்படத்தில் நடித்திருக்கும் நடிகை அடா ஷர்மா, “இஸ்லாமிய பயங்கரவாதிகளாக “மாற்றப்பட்ட” கேரளாவை சேர்ந்த 32,000 பெண்களில் ஒருவராக வரும் ஒரு பெண் கதாபாத்திரம்தான் நான் நடித்திருப்பது” என்று அண்மையில் கூறுயிருந்தார்.

டீசரில், புர்கா அணிந்த பெண் ஒருவர் தனது பெயர் ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்றும், தான் செவிலியராக விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால் “இப்போது நான் பாத்திமா பா. ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையில் இருக்கும் ஐஎஸ் பயங்கரவாதி. என்னைப் போல் மதமாற்றம் செய்யப்பட்ட 32,000 சிறுமிகள் சிரியா மற்றும் ஏமன் பாலைவனங்களில் புதைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் டீசரில் கூறுகிறார்.

இந்த் டீஸர் அதிர்ச்சி அலைகளை கிளப்பியிருக்கிறது. டீசர் வெளியாகிய ஆறு நாட்களில் யூட்யூபில் 440,000 பேருக்கும் மேலாகப் பார்க்கப்பட்டு விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

“கேரளாவில் சாதாரண பெண்களை மோசமான பயங்கரவாதிகளாக மாற்றும் கொடிய விளையாட்டு ஆடப்படுகிறது. அதுவும் வெளிப்படையாக,” என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர். அப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில முதல்வருக்கு பத்திரிகையாளர் அரவிந்தக்ஷன் பிஆர் எழுதிய அந்தக் கடிதத்தை முதல்வர் அலுவலகம் காவல்துறைக்கு அனுப்பியது.கேரள போலீசார் சட்ட ஆலோசனையை நாடியுள்ளனர்.

“சிலருக்கு நடந்திருக்கலாம். ஆனால், 32,000 என்பது நம்பமுடியாதது,” என்கிறார் வீக் பத்திரிகையின் மூத்த செய்தியாளார். 2016ஆம் ஆண்டில், கேரளாவை சேர்ந்த 21 பேர் கொண்ட குழு ஐஎஸ் ஜிஹாதி தீவிரவாதக் குழுவின் துணை அமைப்பில் சேர்வதற்காக நாட்டை விட்டு வெளியேறியது செய்தியாகியிருந்தது. அதுபோல் 2021ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஐஎஸ்-இல் இணைந்த கேரளாவை சேர்ந்த நான்கு பெண்கள் அங்கு சிறையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

“கேரள பெண்களை இழிவு படுத்தும் இந்தப் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது” என்று மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், மாநில திரைப்பட சான்றிதழ் வாரியங்கள் மற்றும் இந்தியாவின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கும் கடிதம் எழுதியுள்ளதாக அரவிந்தக்ஷன் கூறுகிறார். அவருக்கு இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.

“தரவுகளைச் சரிபார்க்க வேண்டும். ஆனால், 2016 முதல் கேரளாவில் இருந்து ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக 10 - 15க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மேல் மதம் மாறவில்லை என்பது எங்கள் கணிப்பு,” என்று பெயர், அடையாளம், வெளிப்படுத்த விரும்பாத போலீஸ் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com