டாலர் சிட்டியின் துயரங்கள்: தேவை புதிய வெளிச்சம்

சிறப்புக் கட்டுரை
டாலர் சிட்டியின் துயரங்கள்: தேவை புதிய வெளிச்சம்

ஆண்டு ஒன்றுக்கு ரூ.60,000 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி செய்து கொண்டிருந்த தமிழ்நாட்டின் டாலர் சிட்டியான  திருப்பூர், இன்று முடங்கிக் கிடக்கிறது. தமிழ்நாட்டின் பிற ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழ்நாட்டிற்கு வரும் பிற மாநில தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதில்  முன்னணியில் இருந்த திருப்பூர்,  இன்று இந்தியாவின்  மிக அதிக வேலையிழ்ந்தவர்களின் நகரமாயிருக்கிறது. இரவு பகலாக எல்லா நிறுவனங்களிலும் 3 ஷிப்ட் வேலைகள்  நடந்துகொண்டிருந்த திருப்பூரில் இன்று 30% நிறுவன்ங்கள்  கூட இயங்கவில்லை

என்ன காரணம் ?

திருப்பூர் கடந்த சில வருடங்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. மூலப் பொருட்கள் விலை உயர்வு, ஆர்டர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் திருப்பூரில் பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது ஆடை உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

பணமதிப்பிழப்பில் தொடங்கிய சரிவு

"திருப்பூர் ஜவுளி சந்தையில் 90% சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான் இயங்குகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்தே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சரியத் தொடங்கிவிட்டன. தொடரும் தொடர்கதையாக அதன் பின்னர் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு ஏற்கனவே நலிவடைந்திருந்த ஜவுளித்துறை மேலும் பல நெருக்கடிகளைச் சந்தித்தது. கொரோனா பொது முடக்கம் இந்த சரிவை துரிதப்படுத்தியது. சர்வதேச ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பும் சரிய ஆரம்பித்தது.

2017ஆம் ஆண்டு சர்வதேச அளவில் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 5% பங்களிப்புடன் 2வது இடத்தில் இருந்தது இந்தியா. அதன் பின்னர் படிப்படியாக சரிந்து 2020ஆம் ஆண்டில் 6 வது இடத்திற்கு சரிந்துள்ளது. சீனா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. 

பருத்தி சந்தை பங்குசந்தைபோல் ஆகிவிட்டது.

 பருத்தி விலை இந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. "இதனால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் பாலிஸ்டர் ஆடை உற்பத்திக்கு மாறத் தொடங்கிவிட்டனர். காட்டன் ஆடைகள் உற்பத்தி 20% வரை சரிந்துவிட்டது. அதேபோல் வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்வதும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருத்தி உற்பத்தி எவ்வளவு இருக்கும் என்பது முன்கூட்டியே கணிக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு இந்த கணிப்பு தவறியது. உள்நாட்டு தேவைக்கு இல்லாமல் பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனால்தான் மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு கேண்டி பருத்தி தற்போது ரூ.75,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இப்போது பருத்தியின் விலை சீராக இல்லை. இந்த ஆண்டு ஒரு கேண்டி (355 கிலோ) பருத்தியின் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது. பருத்தி விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற பஞ்சாலைகளின் கோரிக்கையை தொடர்ந்து பருத்தி இறக்குமதி மீதான வரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் பருத்தி விலை எதிர்பார்த்த அளவு குறையவில்லை

சரிந்த ஏற்றுமதி

ரஷ்யா - யுக்ரேன் போரும் இந்தியாவின் ஏற்றுமதி சரிவுக்கு முக்கியக் காரணம். இந்தியாவின் 70% ஜவுளி ஏற்றுமதி சந்தை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனில் தான் உள்ளது என்று கூறும் இவர், உக்ரைன் - ரஷ்யா போரால் மேற்குலக சந்தை கடுமையான நிதி நெருக்கடி மற்றும் விலையேற்றத்தைச் சந்தித்து வருதால் அந்நாடுகள் ஆடை இறக்குமதியை நிறுத்திவிட்ட்து,

"நடப்பு நிதியாண்டில் ஆயத்த ஆடை ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 12,000 கோடி ரூபாயாக இருந்து, அக்டோபர் மாதத்தில் ரூ.8,141 கோடியாக சரிந்தது. கடந்த ஆண்டின் ஏற்றுமதியை விட இது 14% சரிவு.

அதே சமயம் பின்னலாடை ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.3,298 கோடியாக இருந்து அக்டோபர் மாதத்தில் 2,165 கோடியாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டின் ஏற்றுமதியை விட இது 35% சரிவு.

மின்கட்டணம்  தந்த ஷாக்

தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்தப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது தொழிற்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. 

 ’புதிய மின் கட்டண விகிதத்தால் தற்போது 25% வரை செலவு அதிகரித்துள்ளது. இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்கிற அறிவிப்பு தொழில்துறையை கடுமையாக பாதிக்கும்

 மின் கட்டணம் 1 யூனிட்டிற்கு ரூ.1.50 அதிகரித்திருப்பது விசைத்தறிகளை கடுமையாக பாதித்துள்ளது "ஏற்கனவே 50 சதவிகிதத்துக்கும் குறைவான விசைத்தறிகள் தான் இயங்கி வந்தன. 20% விசைத்தறிகள் ஸ்கிராப்புக்கு சென்று விட்டன.  

 தேவை புதிய ஏறுமதிக் கொள்கை

கடந்த 15 ஆண்டுகளாகவே இந்தியா ஜவுளி ஏற்றுமதியில் சர்வதேச அளவில் 4% பங்களிப்புதான் செய்து வருகிறது. உலகிலேயே பருத்தி அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா தான். ஆனால்  வளரும் உலகப் பொருளாதாரத்துக்கு ஏற்ப அரசின் கொள்கைகள் மாற்றப்படவில்லை. "இந்தியாவில் பருத்தி உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது. போதிய மனித வளமும், தொழில்நுட்பமும் நம்மிடம் உள்ளது. ஆனால் நம்மை விட சிறிய நாடுகளான வங்கதேசம், வியட்நாம் ஜவுளி ஏற்றுமதியில் கோலோச்சுகின்றன. இந்திய அரசிடம் தெளிவான கொள்கை இல்லாததே இதற்கு காரணம். இந்தியாவில் உள்ள பஞ்சாலைகளில் 45% தமிழ்நாட்டில் தான் உள்ளன. ஆண்டு ஒன்றுக்கு 120 கோடி பேல் பருத்தி தமிழ்நாட்டிற்கு தேவைப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 6 கோடி பேல் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் அளவிற்கு ஒரு பருத்தி புரட்சி உருவாகும் வகையில்  புதிய கொள்கை  வல்லுனர்களின் உதவியுடன் தமிழக அரசு உருவாக்க வேண்டும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com