அடை மழைக்காலத்தில்
சூடான தேநீர் கோப்பையை
இறுகப் பற்றியபடி
அப்பாவுடன் கதைத்திருப்பேன்.
‘ஜோ’வென விழும்
நீர்த்தாரைகளின்
சத்தத்தை மீறி
உரக்கச் சிரிக்கும் அப்பாவின்
முகம் பார்த்து ரசித்திருப்பேன்.
‘ஆறிப்போயிரும், குடிம்மா’
அப்பாவின் கனிந்த சொற்களில்
இனிக்கத்தான் செய்தது
ஏடு படிந்த தேநீரும்!
இப்போதும் ஆறிப்போன
தேநீர்க் கோப்பையுடன் நான்!
அருகில் அப்பா இல்லை – என்
கன்னங்களில் மட்டும்
சூடான மழை!