கல்கி களஞ்சியத்திலிருந்து கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளையொட்டி கல்கி 31-07-1983 –ல் வெளிவந்த கவிதை!
ஒரு
மெழுகுவர்த்தியின் பயணம்
என்
மெல்லிய மனத்தில் சலனம்
நெருப்பில் நின்று
நீராடும்போதும்
நிம்மதியான நளினம்!
இந்தப் பூச்செடிக்கு
என்ன நேர்ந்தது
திராவகப் பூக்கள் பூக்கிறதே!
தன்
வேருக்கு வெந்நீர் வார்க்கிறதே!
எரிகின்றபோதிலும்
என்ன அதிசயம்
சிரித்துக்கொண்டே இருக்கிறதா?
இல்லை
மரித்துக்கொண்டே சிரிக்கிறதா?
மெழுகு ராணியின்
மேனி கரைந்தும்
கைகள் இல்லாமல் தொழுகிறாள்!
இரு
கண்கள் இல்லாமல் அழுகிறாள்!
அக்கினிக் கொழுந்தின்
நுனியில் அடடா
நானே அல்லவா தெரிகின்றேன்
அதில்
நானே அல்லவா எரிகின்றேன்.