கல்கி களஞ்சியத்திலிருந்து...
பழ விதைகளாகின்றன
உன் விரல்கள் உதிர்க்கும்
கோலப் புள்ளிகள்
அவ்விதைகளிலிருந்து
உயிர்த்தெழும் கிளி
உன் ஜடைக்குஞ்சங்களை
விநோதப் பழமெனச் சுவைத்தபடி
உன் பின்னால் வருகிறது
முகம் துடைக்க
நீ முந்தானையை எடுத்தபோது
உன் கையில் சிக்கியது
அதன் சிறகுகள்தான்
ஜன்னலுக்கு வெளியே
நீ கிளி பார்த்து நிற்கிறாய்
அது உன் கிளிதான் என்பதை
உணராமல்
உன்னிடம் வருமா என்று
யோசிக்கிறாய்
இரவு
தலையணையில் வரையப்பட்ட கிளியை
இரகசியமாகத் தொட்டுப் பார்க்கிறாய்
அதன் கெச்சட்டம்
உனக்கு மட்டும்
கேட்கிறது.
- கவிஞர் பழநிபாரதி