தீபாவளி திருநாளில் புனிதமான கங்கையை நினைவு கூர்கிறோம். அந்த கங்கா தேவிக்கு திருவண்ணாமலை - வேலூர் சாலையில் 30 கி.மீ. தொலைவில் உள்ள சந்தவாசல் எனும் இடத்தில் கோயில் உள்ளது. இங்கு கங்கா தேவி இடது காலை மடித்து, வலக்கையை தொங்க விட்டபடி ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்து அருள்பாலிக்கிறார். கையில் தண்டம், உடுக்கை மற்றும் அமுதகலசமும் உள்ளது. தீபாவளி அன்று இந்த அம்மனுக்கு விஷேச பூஜையும், தீர்த்தவாரியும் நடக்கும். அன்றைய தினம் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தையே பிரசாதமாக தருகின்றனர். இதை செம்பில் வாங்கிச்சென்று பூஜை அறையில் வைத்துக்கொள்ள செல்வ வளம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
கும்பகோணம் திருவாரூர் பாதையில் குடவாசலில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள கொரடாச்சேரி செல்லும் பாதையில் உள்ள திருக்களம்பூர் விஸ்வவனநாதர் கோயிலில் தீபாவளி அன்று மட்டும் அர்த்த ஜாம பூஜை நடைபெறாது. அது மறுநாள் காலையில் நடைபெறும். ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே இப்படி காலம் தவறிய பூஜை நடக்கும். இந்த பூஜையில் கலந்துகொண்டால் நாம் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது அங்க மங்கலம். இங்குள்ள நரசிம்ம சாஸ்தா கோயிலில் நரசிம்மர் தனது தங்கையான அன்னபூர்ணியுடன் மானிட வடிவில் அருள்பாலிக்கிறார். இப்படி ஒர் அபூர்வமான ஆலயம் வேறு எங்கும் இல்லை. இந்த கோயில் 800 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான கோயில். தீபாவளி அன்று இங்கு அன்னபூர்ணி லட்டு அலங்காரம் செய்யப்பட்டு அருள்பாலிக்கிறார்.
கும்பகோணம் அருகே உள்ள திருநரையூர் சித்த நாகேஸ்வரர் ஆலயத்தில் மகாலட்சுமிக்கு தனி சன்னிதி உள்ளது. பொதுவாக மகாலட்சுமி குழந்தை வடிவில்தான் இங்கு அருள்பாலிக்கிறார். தீபாவளி அன்று மட்டுமே மகாலட்சுமி பட்டு புடவை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மயிலாடுதுறை திரு இந்தளூர் பரிமலரங்கநாதர் திருக்கோயில் ஆழ்வார்களால் பாடப் பெற்ற 108 வைணவ திருக்கோயில்களில் 26வது திருத்தலமாகும். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நிளமும் இருநூற்று முப்பது அடி அகலமும் கொண்ட பெரிய தலமாகும். பொதுவாக எல்லா பெருமாள் கோயில்களிலும் கருங்கல்லால் ஆன பெருமாளைதான் பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்குள்ள பெருமாள் பச்சை மரகதக் கல்லால் ஆனவர் என்பது சிறப்பு. இங்கு தீபாவளிக்கு மறுநாள் பெருமாள் கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தேனி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி ‘ஹைவேவிஸ்’. இந்த மலையிலே உள்ள மணலாறு கிராமத்தில் மணலாறு அணைக்கரையில் இச்சி மரத்தின் அடியில் அமைந்துள்ளது கவுரி மாரியம்மன் கோயில். இங்கு தீபாவளி அன்று காலை நான்கு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்படும். இந்த தரிசனத்தைப் பார்த்த பிறகே அக்கிராம மக்கள் தங்களது வீடுகளுக்கு சென்று சமையல் செய்து பட்டாசு வெடிக்கிறார்கள்.