
கம்பெனிக்கு உள்ளே வந்ததுமே கேட்ட ஒரு துக்கச் செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்தது. தேவராஜின் மரணச்செய்திதான் அது. அதிக பட்சம் அவனுக்கு 40 வயசு தான் இருக்கும். லோன் செக்சனில் கலெக்சன் எக்ஸிக்யூட்டிவ் ஆக இருக்கிறான், சாரி இருந்தான் பதற்றத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மேனேஜர் சர்க்குலர் அனுப்பினார், இன்று மாலை 6 மணிக்கு மீட்டிங் என்று.
எங்கள் கம்பெனி ஒரு பிரைவேட் பேங்க் உடன் டை அப் வைத்துக்கொண்ட பிரைவேட் ஃபைனான்ஸ் கம்பெனி. நான் கலெக்சன் டிபார்ட்மெண்ட்டில் டீம் லீடர். லோன் செக்சனில் எனக்குக்கீழ் பணி ஆற்றும் 8 கலெக்சன் எக்ஸிக்யூட்டிவில் ஒருவன்தான் தேவராஜ். அவனுடைய பர்சனல் விபரங்கள் அதிகம் தெரியாது. வேலையில் பக்கா, கஸ்டமர்களிடம் நடந்து கொள்வதிலும் சரி , மேலதிகாரிகளிடம் நடந்து கொள்வதிலும் சரி, பர்ஃபெக்ட்டான ஆள்.
மாலை 6. மீட்டிங்கில் கம்பெனியின் முக்கியமான ஸ்டாஃப்கள் கூடினார்கள். மேனேஜர் பேச ஆரம்பித்தார். தேவராஜ் திடீர்னு இறந்த செய்தி எல்லாரும் கேட்டிருப்பீங்க, நாளை காலை அடக்கம் பண்றாங்க . அவர் நம்ம கம்பெனில ஜாய்ன் பண்ணி ஆறு மாசம் தான் ஆகுது, ஆஃப் ரோல் தான். பர்மணெண்ட் ஆகலை. நம்ம கம்பெனி ரூல்ஸ் படி 2 வருசம் ஒர்க் பண்ணி பின் எக்சாம்ல பாஸ் ஆனாதான் ஆன் ரோல் ஸ்டாஃப் ஆகமுடியும். பர்மணெண்ட் ஸ்டாஃப் ஆகிட்டா கிடைக்கற சலுகைகள், வசதிகள் இப்போ கிடைக்காது , அது உங்களுக்கே தெரியும்.
ஆனா, ஒரு ஸ்டாஃப் இறந்துட்டா கம்பெனி தர வேண்டிய பிஎஃப் பணம், இன்சூரன்ஸ் பணம் மட்டும் கிடைக்கும், ஆனா, அந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிஞ்சு கைக்கு வர சில மாசங்கள் ஆகலாம். அதனால, எம்.டி.கிட்டே பேசி என்ன முடிவு எடுத்திருக்கோம்னா முறைப்படி கம்பெனி தர்ற பணம் எப்பவோ தரட்டும், ஆனா நம்ம ஸ்டாஃப்ஸ் எல்லாரும் சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அதன் மூலம் திரட்டப்படும் தொகையை நாளை நேர்ல் போய் கலந்துக்கிட்டு பின் அவரோட குடும்பத்தார் கைல கொடுத்துட்டு வரலாம்
பொதுவா கல்யாணத்துல வைக்கற மொய்யும் , சாவு வீட்டில் தரப்படும் பணமும் அவங்க செலவுக்கு உதவியா இருக்கும். இவ்வளவுதான் தரணும்னு கட்டாயம் இல்லை, நம்ம கம்பெனில 150 பேர் இருக்கோம், அவங்கவங்க சக்திக்கு தகுந்தபடி 1000 ரூபாயோ , 500 ரூபாயோ கொடுங்க , கைல கேஷ் இல்லாதவங்க கேஷியரிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொடுக்கலாம். நாளைக்கு சடங்கில் கலந்துகொள்ள யாராவது 2 பேர் மட்டும் வாங்க , எம் டி ஆர்டர் இது . எல்லாரும் போனா வேலை கெட்டுடும். மறுபடி போக விருப்பம் இருக்கறவங்க சண்டே லீவ்ல போய் தலையைக்காட்டி துக்கம் விசாரிச்சுட்டு வந்திருங்க.
மீட்டிங் முடிந்ததும் எல்லோரும் டிஸ்கஸ் செய்தார்கள். மாத சம்பளம் 10,000ம் அதற்கு மேலும் இருப்பவர்கள் 1000 ரூபாயும் 15,000 + இருப்பவர்கள் தலா ரூ 1500 ம் தருவதாக முடிவானது. ஒரு 20 பேர் தர முடியாத சூழலில் இருந்தாங்க. கேஷியரிடம் அட்வான்ஸ் வாங்கவும் முடியல... ஆல்ரெடி க்ரெடிட் லிமிட் தாண்டி இருந்தாங்க . ரூ 1,40,000 ரூபாய் கலெக்ட் ஆச்சு. அதைக்கொண்டு போய் மேனேஜரிடம் ஒப்படைத்தேன்
“சார், நாளை நானும் உங்க கூட வர்றேன் சார்...”
“எதுக்கு? இங்கே யார் எல்லாம் பாத்துக்கறது? நானும் அசிஸ்டெண்ட மேனேஜரும், இன்னும் 2 சீனியர் ஆஃபீசர்சும் போறோம், நீங்களும் எங்க கூட வந்துட்டா உங்களுக்குக்கீழே இருக்கற 7 எக்ஸ்சிக்யூட்டிவ்சை மானிட்டர் பண்றது யாரு? நீங்க இங்கேயே இருங்க , நாங்க போய்ட்டு வர்றோம்.”
சரி என்று நானும் வீட்டுக்குக்கிளம்பி விட்டேன்
அடுத்தநாள் மாலை மேனேஜர் வந்தார், மீண்டும் மீட்டிங்.
“ தேவராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்திருக்கு. கல்லீரல் கெட்டுப்போய் இருக்கு, கிட்னி ஃபெய்லியர்.அவங்க வீட்ல வசதி இல்லை. அம்மா, அப்பா பெருசா கேர் எடுத்துக்கல. காரணம் தேவராஜ் அவங்க பார்த்த பெண்ணைக் கட்டிக்கல...”
“லவ் மேரேஜா சார்”
“கிட்டத்தட்ட லவ் மேரேஜ்தான், ஆனா....”
மேனேஜர் இழுத்தார், தயங்கினார்... லேடி ஸ்டாஃப்ஸ் இருக்காங்களேனு பார்த்திருப்பார்.
பிறகு சொன்னார்...
தேவராஜோட மனைவி ஆல்ரெடி வேற ஒருவர் கூட இல்லீகலா குடும்பம் நடத்திட்டு இருந்திருக்கு, இவர் கூட்டிட்டு வந்துட்டார், தாலி கட்டலை , ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணலை . இவரும் கீப் மாதிரி சும்மா வெச்சுட்டு இருந்திருக்கார். அவங்க 2 பேருக்கும் குழந்தைகள் இல்லை. ஆனா தேவராஜோட கீப் க்கு ஆல்ரெடி முத புருசனோட குழந்தை இருக்கு
இதனால எங்களுக்கு குழப்பம் வந்துடுச்சு. வசூல் பண்ண பணத்தை எப்படி யார் கிட்டே தர? சட்டப்படி தேவராஜ்க்கு மனைவி இல்லை . வாரிசு இல்லை . பெற்றோரும் விட்டேத்தியா இருக்காங்க . மகனோட சாவு பற்றி அவங்களுக்குப்பெரிய வருத்தம் இல்லை. தன் பேச்சைக்கேட்காம இப்படி ஒருத்தியை இழுத்துட்டு வந்துட்டானேனு ஆதங்கம்.
இதனால நாங்க அந்தப் பணத்தை யார்கிட்டேயும் தரலை. அவ்ளோ தூரம் போய்ட்டமேனு பேருக்கு ஒரு 20,000 ரூபா மட்டும் அந்தப்பொண்ணு கைல தந்துட்டு வந்துட்டோம். மீதி இருக்கும் 1,20,000 அப்படியே ரிட்டர்ன் கொண்டு வந்துட்டோம். அந்தப் பணத்தை “அவசர கால நிதி உதவி திட்டம்” என்ற பேர்ல வெச்சிருப்போம், நாளைக்கு யாருக்காவது ஏதாவது அவசரச் செலவு வரும்போது பார்ப்போம்.
மீட்டிங் முடிந்து மேனேஜர் கிளம்பினார்
ஸ்டாஃப்ஸ் எல்லாம் குசு குசு என அவர்களுக்குள் பேசத் தொடங்கினார்கள்.
நம்ம மேனேஜர் பண்ணது தப்பு சார். ஒருத்தரோட பர்சனல் மேட்டர் நமக்குத்தேவை இல்லாதது. தாலி கட்னா என்ன? கட்டாட்டி என்ன? கீப்பா இருந்தா என்ன? இழுத்துட்டு வந்திருந்தா என்ன? தேவராஜ் கூட அந்தப் பொண்ணு ஒரு 6 மாசம் வாழ்ந்திருக்கு. முறைப்படி அவர்கிட்டே பணத்தை தந்துட்டு வந்திருக்கனும்
அல்லது அவங்க பேரண்ட்ஸ்கிட்டேயாவது தந்துட்டு வந்திருக்கனும். இரண்டும் செய்யலையா? இங்கே வந்து எல்லார்கிட்டேயும் அவங்கவங்க தந்த பணத்தை அவங்க கிட்டேயே திருப்பி தந்திருக்கணும் . இந்த மூணு ஆப்சனையும் விட்டுட்டு இவர் பாட்டுக்கு இப்படி சொல்லிட்டுப்போறாரே?
அவரவர் ஆதங்கங்கள் வெளிப்பட்டன, பின் கலைந்து சென்றோம்.
நாளடைவில் அதைப்பற்றி மறந்து போனோம். அந்த வார ஞாயிறு யாரும் தேவராஜ் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க செல்லவில்லை. நிலைமை சரி இல்லாததால் யாருக்கும் போகப் பிடிக்கவில்லை.
இரண்டு வருடங்கள் கழிந்தன. நான் ஃபேஸ்புக்கில் மூழ்கி இருந்தபோது யுவர் காண்டாக்ட் லிஸ்ட் என ஒரு 10 பேரைக் காட்டியது. அதை அசுவராஸ்யமாய் பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு பெயரைப் பார்த்துத் திடுக்கிட்டேன்.
அது ஆர்த்தி தேவராஜ், டிபி யில் தேவராஜ் படம் . தேவராஜ் செல் ஃபோன் நெம்பரை வைத்து நோட்டிஃபிகேஷன் காட்டி இருக்கு. மேனேஜர் சொன்னது போல் கீப்பாக இருந்தால் இறந்து 2 வருசம் ஆகியும், இன்னுமா அவர் ஃபோட்டோவை டிபியாக வைத்திருக்கும்? ஃபிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்பினேன். ஏற்றுக்கொண்டார்.
சேட்டிங்கில் அறிமுகங்கள் , நலவிசாரிப்புகள் முடிந்தபின்,
“எனக்கு என்ன வருத்தம்னா அவரோட கம்பெனியிலிருந்து யாருமே ஒரு ஃபார்மாலிட்டிக்குக்கூட துக்கம் விசாரிக்க வராததுதான்.”
“மேடம், என்ன சொல்றீங்க? எங்க மேனேஜர் உட்பட 4 பேர் வந்திருப்பாங்களே?”
“அப்படி யாரும் வரலைங்களே?”
“ரூ. 20,000 பணம் தந்ததா சொன்னாங்களே?”
“ நான் எதுக்கு சார் மறைக்கணும்? எந்தப் பணமும் வரல , அவரோட பிஎஃப் பணமும் கம்பெனி செட்டில்மெண்ட் பணமும் வரலை.”
“ சரி, நான் விசாரிக்கிறேன் மேடம்.”
சேட்டிங்கை கட் பண்ணேன்.
எனக்கு இரண்டு அதிர்ச்சி...
1. இவர் தேவராஜ்க்கு சின்சியரான துணையாகத்தான் இருந்திருக்கிறார் என்பது அவரது ஃபேஸ் புக் பதிவுகள் சோகங்கள் , கவிதைகள் புலம்பல்கள் சொல்லின.
2வது அதிர்ச்சி மாசம் 75,000 சம்பளம் வாங்கும் மேனேஜர் கேவலம் அந்த 20,000 ரூபாயைக்கூட தராம ஆட்டையைப் போட்டிருக்கார்.
இதை விடக்கூடாது , மேனேஜரிடம் ஃபேஸ் டூ ஃபேஸ் கேட்டுவிடுவது என முடிவெடுத்தேன்
மேனேஜர் வீட்டுக்குப் போனேன்...
வாப்பா ,ம் என்ன இந்தப் பக்கம்? ஏதாவது அர்ஜெண்ட் மேட்டரா? லாக்டவுன் டைம்ல தைரியமா போலீசை தாண்டி வந்திருக்கே...
சார். தேவராஜ் மனைவியை நேர்ல பார்த்தீங்களா?
என்ன திடீர்னு?
சார்... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க...
சரி, அந்த பேலன்ஸ் அமவுண்ட் என்னாச்சு?
அப்படியே இருப்புலதான் இருக்கு.
எவ்ளோ?
ஏன்? உனக்கு கணக்கு தெரியாதா? 1,40,000 ல ரூ 20,000 போய்ட்டா மீதி 1,20,000
சார்... அதெப்பிடி? அதை பேங்க்ல போட்டா 80 பைசா வட்டி கணக்கு போட்டாக்கூட 1,20,000க்கு ஒரு மாச வட்டி 960 ரூபா வருது. இரண்டு வருசத்துக்கு ரூ 24,000 வந்திருக்கும் , மொத்தம் ரூ. 1,44,000 இருக்குமே?
மேனேஜர் பதில் பேசலை...மௌனமாக இருந்தார்.
அதை பேங்க் ல போடலை. அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா செலவு பண்ணிட்டேன்.
சார் , இது ரொம்பத் தப்பு... நல்லாலை... இப்போ சாப்பாட்டுக்கே வழி இல்லாம ஏழைகள் எவ்வளவோ பேர் கஷ்டப்படறாங்க . அவங்களுக்கு நிதி உதவியா அதை தரலாமில்ல? அவசர கால நிதில வெச்சிருக்கறதா சொன்னீங்க, இதைவிட அவசர காலம் எது வந்திரப்போகுது?
யோவ், பிழைக்கத் தெரியாதவனாய் இருக்கியே? உனக்கு வேணும்னா கொஞ்சம் கேட்டு வாங்கிக்க, ஏன் வீணா காசை இழக்கறே?
நான் கோபம் அடைந்து கத்தினேன். சார் , உங்க கைக்கசை செலவு பண்ணச்சொல்லலை. வசூல் பண்ண காசை தான் தரச்சொன்னேன். அதுக்கும் உங்களுக்கு மனசு வர்லை.
நான் வர்றேன் சார், இதுக்கான பின் விளைவுகளை நீங்க சந்திப்பீங்க.
நான் வேகமாக போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.