எதிர்வீட்டு வாசலில் மருதாயி தண்ணீர் தெளிக்கும் சத்தத்தில்தான் கந்தய்யா விழித்துக் கொண்டார். மருதாயி வந்துவிட்டால் ஆறரைமணியாகிவிட்டது என்று அர்த்தம்.கயிற்றுக்கட்டிலின் மேல் கூடாரமாய் படர்ந்திருந்த கொசுவலையின் ஒரு மூலையை உயர்த்தி அவசரமாக வெளியில் இறங்கினார்.இடுப்பிலிருந்த சாவியை எடுத்து கிரில்கேட்டின் பூட்டை திறக்க ஆரம்பித்தார். மழையிலும் வெயிலிலும் கிடந்ததால், பூட்டினுள்ளே நகரும் பாகங்கள் துருப்பிடித்து இறுகிப் போயிருந்தன. சாவியை மேலும் கீழுமாக தொடர்ந்து அசைத்ததில், தொந்திரவு தாங்காமல் பூட்டு வழிவிட்டது. கேட்டைத் திறந்துவிட்டு நிமிர்கையில் முதுகு பிடித்துக் கொண்டதுபோல் வலித்தது.‘நமக்கு எந்த எண்ணையை ஊத்தி சரிபண்றதுன்னு தெரியல” என்று முணுமுணுத்துக் கொள்கையில் எதிர்வீட்டு ஓனர் கார் பார்க்கிங் இடத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி பேப்பர் படித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.அவருடைய பெயர் தெரிந்திருந்தாலும், கந்தய்யா அவரை ‘ஓனரய்யா’ என்றே அழைத்து வந்தார்.கந்தய்யாவைவிட அவருக்கு வயது 10 வருடங்கள் கூடுதலாகத்தானிருக்கும். பணம் தாராளமாகப் புழங்குவதால் என்னவோ மனிதர் திடகாத்திரமாகத்தான் இருந்தார். ஆனாலும் என்ன...வியாதிகளுக்கு ஏனோ குறைவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால்கூட ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு போய், சொன்னால் விளங்காத ஒரு வியாதிக்கு அறிந்திராத சிகிச்சை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருந்தார்.மூன்று வருடங்களுக்கு முன்பு வரை தனிவீடாக இருந்த இடத்தை இடித்து நான்கு பிளாட்டுகளாக மாற்றியிருந்தார். மனைவி எப்போதோ போய்ச் சேர்ந்து தற்சமயம் கட்டிடத்தின் பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவருக்கு மூன்று வாரிசுகள். இரண்டு பையன்கள் கடைக்குட்டியாய் ஒரு மகள். அவள் கல்யாணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டிருந்தாள். இரு மகன்களும் வெளியூரில் வேலை பார்த்துவிட்டு தற்போதுதான் மாற்றலாகி சொந்த ஊருக்கு வந்திருக்கின்றனர். ஓனரய்யா தான் கட்டியதில் மூன்றை வாரிசுகளுக்கு எழுதிவைத்துவிட்டு நான்காவது வீட்டைத் தன் பெயரில் வாடகைக்கு விட்டிருக்கிறார். பென்ஷன் கிடையாது அவருக்கு.கேட்டால், “கைச்செலவுக்கு டப்பு வேணும்ல கந்தா” என்று சிரிப்பார்.கந்தய்யாவிற்கு பணமுடை ஏற்படும்போதெல்லாம் அவரிடம்தான் போய் நிற்பார். அவரும் பழைய கடனே திருப்பித் தரவில்லை என்றெல்லாம் பார்க்காமல் , கையில் கொஞ்சம் கொடுப்பார். ஒவ்வொரு தடவையும் , நீ ஒன்றும் இதெல்லாம் திருப்பித்தரவேண்டாம் என்பது போல்தான் அவர் கொடுக்கின்ற பணமும் இருக்கும். நல்ல மனிதர்.கந்தய்யா இடுப்பு வேட்டியை இறுக்கிக் கொண்டு மோட்டார் அறையை நோக்கி நடந்தார். அவரது குடியிருப்பில் உள்ளவர்கள் காலைக் கடன்களைத் தீர்க்க ஆரம்பிக்கும்போதே தண்ணீரின் வேகம் குறைய ஆரம்பிக்கும்.. கந்தய்யாவைக் கூப்பிட ஆரம்பித்துவிடுவார்கள்.‘மோட்டாரைச் சரியான நேரத்தில் போடாத கந்தய்யா தேவைதானா? அந்த வேலையை ஒரு ஆட்டோமேடிக் சுவிட்ச் செய்யாதா?’ என்பதிலிருந்து யாராவது அப்போது ஆரம்பிப்பார்கள். காரில் போய் வரும்போதெல்லாம் வாசல்கேட்டை இன்னமும் வாட்ச்மேன்தான் திறக்கவேண்டியிருக்கிறது.. அதனால்தான் மேற்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்கள்.கந்தய்யா வாசலில் இருந்த குழாயில் முகத்தைக் கழுவிவிட்டு வாயைக் கொப்பளித்தார். தோளில் இருந்த துண்டினால் முகத்தைத் துடைத்துவிட்டு மறுபடியும் கட்டில் விளிம்பில் அமர்ந்து கொண்டார். மோட்டரை அணைத்துவிட்டு சில தெருக்கள் தள்ளியிருக்கும் அவரது வீட்டிற்கு போய்விட்டு நாஷ்டாவை முடித்துவிட்டு வரவேண்டும்.“தாத்தா..ரெண்டாம் மாடி வீட்டுக்காரரு வந்திட்டாரா..?” சைக்கிளை மிதித்துக் கொண்டுவந்த சிறுவன் கையில் பேப்பருடன் சுருட்டி வைத்திருந்த கேள்வியைத் தொடுத்தான்.“நேத்தி ராத்திரி பத்துமணிக்கு மேல..” அவர் சொன்ன பதிலுக்கு பதிலாய் சுருட்டிய பேப்பர் தரையைத் தேய்த்துக் கொண்டு விழுந்தது. பையனுக்கு அடுத்த வீடு இலக்கு- போய்விட்டான்.எதிர்வீட்டு ஓனரய்யா அவரது பேப்பரை அவசரமாகப் படித்து முடித்துவிட்டு கையில் எடுத்துக் கொண்டு மாடியேறிப் போனார். ஏழு மணிக்குள் மூத்தவன் வீட்டு வாசலில் பேப்பரை வைத்தாகவேண்டும். இல்லாவிட்டால் சத்தம் போடுவான். ‘டிவியில நியூஸ் பாத்தாப் போதாதா’ என்றும் ‘பேப்பரைப் படிச்சா சரியாக மடிச்சு வைக்கிறதே இல்லை’ என்றும் சொல்லுவான். அவர் சிரித்துக் கொள்வார்.மூத்தவன் சிறுவனாக இருந்த போது “பேப்பரைச் சரியா மடிச்சு வை” என்று அவர் சொன்ன வார்த்தைகள் காலக்குகையில் புகுந்து பல வருடங்கள் கழித்து அவர் காதில் எதிரொலிப்பது போல் தோன்றும்.திரும்பவும் கீழிறங்கி வந்தவர் , கேட்டில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள்பைகளில் சுரந்திருந்த பால் பாக்கெட்டுக்களை எடுத்துக் கொண்டு மாடிக்கு ஏறினார். மகன்களின் இருவரது வீட்டிலும் பால் பாக்கெட்டைக் கொண்டுபோய் சேர்க்கவேண்டியது அவரது காலைக் கடமைகளில் ஒன்று.அதற்கப்புறம் அரைமணி நேரத்திற்கு அவரைப் பார்க்க முடியாது.. அவருக்குரிய காப்பிக்கான பாலைக் காய்ச்சி ஒரு மடக்கு குடித்தால்தான் மற்ற வேலைகளை அவரால் செய்யமுடியும். கார்பார்க்கிங் இடத்தில் ஒட்டடை வேறு அடைந்து கிடக்கிறது.. குச்சியை வெகுநேரத்திற்கு உயர்த்தி அடிக்க முடியாததினால் , சிறிது சிறிதாக அடித்துக் கொண்டிருக்கிறார்.ஆனால் , பார்க்கிங்கில் இருக்கிற வண்டிகள் எல்லாம் வெளியில் போனால்தான் அதைச் செய்யமுடியும். அதற்கும் மகன்களிடம் அவர் பேச்சு வாங்கவேண்டும்.“இதெல்லாம் பண்ணி அலர்ஜி வந்து படுத்துக்கிட்டு எங்க உசிர வாங்கப்போறீங்க” என்று மூத்தவனும் “இந்த இடத்தை மொத்தமா வித்திட்டு ஹீராநந்தினியில் வாங்கிட்டு போயிடலாம்னு சொன்னேன்.. எல்லா வேலையும் அவங்களே பாத்துப்பாங்க.. எங்க கேட்டீங்க..” என்று சின்னவனும் மறக்காமல் கமெண்ட் அடித்துவிட்டுப் போய்விடுவார்கள்.வாஸ்தவம். அவர் வித்திருக்கலாம்தான். அவரே யாரையும் கேட்காமல் தன்னிச்சையாகத் தீர்மானம் செய்து பிளாட்டுகள் கட்டுவதற்கு எல்லாவித ஏற்பாடுகளையும் செய்தபிறகு அவரால் பின்வாங்க முடியவில்லை. அவரது மகன்கள் விற்றுவிடலாமென்று சொன்னபோதுகூட கட்டிட பராமரிப்பை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பிடிவாதமாகச் சொல்லியிருந்தார். அதுதான் இப்போது அவரை வெளியில் எங்கும் செல்லவிடாமல் கட்டிப்போட்ட மாதிரி ஆக்கிவிட்டது. அவரின்றி ஒரு அணுவும் அசையாது அங்கு.உடம்புசரியில்லாமல் , அவர் படுத்துக்கொண்ட பல நாட்கள் மஞ்சள்பையிலேயே பால் பாக்கெட்டுக்கள் கிடந்திருக்கின்றன. தண்ணீர் வரவில்லையென்று வாடகைக்கு குடியிருப்பவர் மூத்தவனிடம் சண்டை போட்டிருக்கிறார்.கந்தய்யா அந்தக் கூத்துகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார். பெரியவர் வரும் வரை, தினசரி வேலைகளைச் செய்ய இரண்டு மகன்களில் யார் பொறுப்பை எடுத்துக் கொள்வது என்கிற கேள்வி வரும்போதெல்லாம் இளையவன் காரை எடுத்துக் கொண்டு சீக்கிரமே ஆபீசிற்கு போய்விடுவான். மூத்தவன் புலம்பிக் கொண்டே வேலைகளைச் செய்வது கந்தய்யாவின் காதுகளில் விழும்.ஓனரய்யா மறுபடி நடமாட ஆரம்பித்ததும் , அது சாந்தி நிலையம் ஆகிவிடும்..மற்றொரு நாள் “அய்யா.. மோட்டார் ரொம்ப நேரமா ஓடிக்கிட்டு இருக்கு போலியே..” என்றார் கந்தய்யா.“நீயும் கவனிச்சிட்டியா.. தண்ணி ரொம்பற மாதிரியே தெரியலை.. தண்ணி ஏர்ற பைப்புல காதை வெச்சிக் கேட்டாலும் ஏதோ சளிபிடிச்ச நெஞ்சு மாதிரி கர்புர்ன்னு சத்தம் மட்டும் கேக்குது..” என்று சொன்னவர் சும்மா இருந்தால்தானே. மூன்று மாடிகள் ஏறி அதற்கு மேலும் மொட்டை மாடியில் இருக்கும் இரும்பு ஏணியில் ஏறி தண்ணீர் தொட்டியையும் பார்த்துவிட்டு இறங்குவார். தன் வயதிற்கு ஒவ்வாத சாகசங்களை அவர் செய்யும் போது கந்தய்யாவிற்கு நெஞ்சம் பதறும்.“அய்யா.. உங்க மகன்களைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொல்லலாமில்ல..” என்று கேட்டால் அவர் பதிலொன்றும் சொல்லாமல் சிரிப்பார். அதில் ஓராயிரம் உண்மைகள் இருக்கும்.“கந்தா.. நான் இருக்கிற வரைக்கும் யாருக்கும் குறையிருக்காது” என்றார் ஒரு நாள்.அவர் அதற்காக வருத்தப்பட்டதும் இல்லை. ஒரு நாள் வேலைக்காரி வரவில்லையென்றால்கூட அவரே துடைப்பத்தைக் கையில் எடுத்துப் பெருக்கி வீட்டு வாசலில் தண்ணீரும் தெளித்துவிடுவார்.கந்தய்யா அவருக்கு உதவி செய்யலாமென்றாலும் மறுத்துவிடுவார்.“கோலத்திற்கு புள்ளி கூட வெச்சிடலாம் கந்தா.. யாரு இழை இழுக்கிறது? குனிஞ்சாலே எனக்கு மூச்சுதான் இழுக்குது” என்பார்.தண்ணீர் தெளித்து எழும் மண்ணின் வாசம் போல் அவரது சுவாசம்தான் அந்த கட்டிடம் முழுக்க பரவியிருந்தது.ஒருநாள் அவரது மூச்சும் நின்று போனது. அனாயாசமான மரணம்.எப்போதும்போல் வாசல் கேட்டைத் திறந்துவிட்டு, தண்ணீர் மோட்டார் போட்டவர் சேரில் உட்கார்ந்தபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர்தான். சில நிமிடங்களில் அவரது கைகளிலிருந்து பேப்பர் நழுவியிருந்தது.. தன்னுடைய பேப்பர் நேரமாகியும் வரவில்லை என்கிற கோபத்தில் தபதபவென்று இறங்கிய மூத்தவன்தான் முதலில் பார்த்தது. தெருவில் அன்றைக்கு அவரே செய்தியாகிப் போனார்.மளமளவென்று காரியங்கள் ஆரம்பித்தன. அவரது பெண் போனிலேயே அழுது துக்கத்தைப் பகிர்ந்து கொண்டாள். மதியத்திற்குள் அவரை எடுத்துக் கொண்டு வண்டி போய்விட்டது. நான்கு மனிதர்கள் சுமக்கவேண்டியதை நான்கு சக்கரங்கள் சுலபமாகச் செய்துவிட்டன.“கந்தா.. நான் செத்தேன்னா நேரா காட்டுக்குப் போயிடுவேன்.. நீ செத்தேன்னா முதல்ல வீட்டுக்குத்தான் போவே..” என்று சிரித்தபடியே கமெண்ட் அடித்த மனிதர் சுலபமாக போய் சேர்ந்துவிட்டார். கந்தய்யாவிற்கு அழுகையாய் வந்தது.ஓனரய்யா இறந்த அன்று மதியமே கந்தய்யாவின் தெருவில் குடியிருக்கும் அந்தோணி வாசலில் வந்து நின்றான்.“இன்னாப்பா கந்தா..அய்யா போயிட்டாராமே.. பால் பாக்கெட் போடற அம்மாதான் சொல்லிச்சு..அதுக்குள்ளியா தூக்கிட்டாங்க?” என்றான்.“ஏன்.. நீ மாலை வாங்கியாறலாம்னு பாத்தியாக்கும்..”அந்தோணி எதற்கு துக்கம் விசாரிக்கிறான் என்று கந்தய்யாவிற்கு சுலபமாகப் புரிந்தது. அவனும் கந்தய்யாவும் ஒரே வயதுக்காரர்கள்தான். அரசுப் பள்ளியில் படிக்காமல், கோடம்பாக்கம் ஸ்டூடியோக்களின் அருகில் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்தவர்கள். சரியாகப் படிக்கவில்லை, வீட்டுப் பாடம் முடிக்கவில்லை என்று வாத்தியார் வகுப்பறை வாசலில் நிற்கவைத்தது பின்னாட்களில் வாட்ச்மேன் வேலைக்குத்தான் லாயக்கு என்பதாயிற்று.“சும்மா வந்து நீ கேக்கமாட்டியே.. எதிர் வீட்டு வேலைக்கு மனுப்போட சிபாரிசுக்கு எங்கிட்ட வந்திட்டியாக்கும்..”“ஆமாமா.. இது கவர்மெண்டு வேல.. நீ ஒரு மந்திரி… மனு போடுவாங்களாம்..” என்று அந்தோணி சொல்ல இருவரும் சிரித்தனர். கேட்டால் சொல்கிறேன் என்று அவனை அனுப்பி வைத்தார் கந்தய்யா.கந்தய்யாவிற்கு இரண்டு மூன்று நாட்கள் வெறுமையாய் கழிந்தன. ஆனால் ஓனரய்யாவின் மூத்த மகன் மேலும் கீழுமாக நடப்பதையும், பால் பாக்கெட்டுக்களை எடுத்துக் கொண்டு போவதையும் பார்த்தபடி இருந்தார்.நான்காம் நாள் எதிர்வீட்டிலிருந்து வெளியில் வந்த மூத்தமகன் கந்தய்யாவை நோக்கி சிரித்தபடி அருகில் வந்தான்.“அப்பாவும் நீங்களும் ரொம்ப பிரண்ட்ஸ் போல.. அவர் சொல்லிக்கிட்டிருப்பாரு..” என்றான்.“அப்படியெல்லாம் இல்லீங்க.. அவரு பெரிய மனுசன்.. நான் ஏதோ கூலிக்கு இங்க வாட்ச்மேனாக இருக்கிறேன்.. அவ்வளவுதாங்க..” என்றார் கந்தய்யா. தந்தையை இழந்த சோகத்தைப் பகிர்ந்து கொள்வது போல் தலையைக் குனிந்து கொண்டார்.“அதான் உங்ககிட்ட கேக்கலாம்னு.. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது நம்ம வீட்டுக்கும் வாட்ச்மேனா இருக்கலாம்… மோட்டார் போட.. எல்லாத்துக்கு ஆள் தேவைபடுது.. கூட சம்பளம் ஒண்ணும் பிரச்னையில்ல..” என்று மூத்தவன் முடிப்பதற்கு காத்திருந்தார் கந்தய்யா.ஓனரய்யா சொன்னது போல் அவர் இருந்தவரை அந்த வீட்டிற்காக உழைத்துவிட்டார். இப்போது அவர்களுக்கு இன்னொரு வேலைக்காரர் தேவைப்படுகிறார்.அந்தோணிதான் இருக்கிறானே.. சொல்லிவிடலாமென்று தோன்றிய மறுகணம்,“இல்லிங்கய்யா.. உங்ககிட்ட முடியாதுன்னு சொல்ல முடியல.. எங்க ஓனர் தப்பா நெனப்பாரு.. எங்க ஏரியாவுல வேற யாராவது இருந்தா கட்டாயம் சொல்றேன். ..” என்றபடி தலையைக் குனிந்து கொண்டார் கந்தய்யா..“சீக்கிரம் சொல்லுங்க.. ஒரு நாளைப் போல.. என்னால முடியல..” என்று முணுமுணுத்தவன் சற்றுநேரம் அப்படியே நின்றுவிட்டு தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.‘தினமும்தான் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கட்டுமே.. வாசல் கதவைத்திறந்து வைத்து விட்டு தண்ணீர் மேலே ஏற்றட்டுமே.. பால் பாக்கெட், பேப்பரை எடுத்துக் கொண்டு போங்களேன்.. ஓனரய்யா செய்த வேலைகளை கொஞ்ச நாட்களுக்கு செய்தால் என்ன குறைந்துவிடப்போகிறது? அப்போதாவது அவரது அருமை அவங்களுக்குத் தெரியட்டும். ‘ என்று நினைத்தவர், “ஓனரய்யா.. மன்னிச்சிடுங்க.. உங்க பிள்ளைகளும் ரெண்டு மூணு நாளைக்கு நீங்க பண்ணின வேலைகளைச் செஞ்சு பார்க்கட்டுமேன்னு அப்படிச் சொல்லிட்டேன்.. ” என்றபடி ஓனரிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டிக் கொண்டார்.
எதிர்வீட்டு வாசலில் மருதாயி தண்ணீர் தெளிக்கும் சத்தத்தில்தான் கந்தய்யா விழித்துக் கொண்டார். மருதாயி வந்துவிட்டால் ஆறரைமணியாகிவிட்டது என்று அர்த்தம்.கயிற்றுக்கட்டிலின் மேல் கூடாரமாய் படர்ந்திருந்த கொசுவலையின் ஒரு மூலையை உயர்த்தி அவசரமாக வெளியில் இறங்கினார்.இடுப்பிலிருந்த சாவியை எடுத்து கிரில்கேட்டின் பூட்டை திறக்க ஆரம்பித்தார். மழையிலும் வெயிலிலும் கிடந்ததால், பூட்டினுள்ளே நகரும் பாகங்கள் துருப்பிடித்து இறுகிப் போயிருந்தன. சாவியை மேலும் கீழுமாக தொடர்ந்து அசைத்ததில், தொந்திரவு தாங்காமல் பூட்டு வழிவிட்டது. கேட்டைத் திறந்துவிட்டு நிமிர்கையில் முதுகு பிடித்துக் கொண்டதுபோல் வலித்தது.‘நமக்கு எந்த எண்ணையை ஊத்தி சரிபண்றதுன்னு தெரியல” என்று முணுமுணுத்துக் கொள்கையில் எதிர்வீட்டு ஓனர் கார் பார்க்கிங் இடத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி பேப்பர் படித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.அவருடைய பெயர் தெரிந்திருந்தாலும், கந்தய்யா அவரை ‘ஓனரய்யா’ என்றே அழைத்து வந்தார்.கந்தய்யாவைவிட அவருக்கு வயது 10 வருடங்கள் கூடுதலாகத்தானிருக்கும். பணம் தாராளமாகப் புழங்குவதால் என்னவோ மனிதர் திடகாத்திரமாகத்தான் இருந்தார். ஆனாலும் என்ன...வியாதிகளுக்கு ஏனோ குறைவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால்கூட ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு போய், சொன்னால் விளங்காத ஒரு வியாதிக்கு அறிந்திராத சிகிச்சை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருந்தார்.மூன்று வருடங்களுக்கு முன்பு வரை தனிவீடாக இருந்த இடத்தை இடித்து நான்கு பிளாட்டுகளாக மாற்றியிருந்தார். மனைவி எப்போதோ போய்ச் சேர்ந்து தற்சமயம் கட்டிடத்தின் பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவருக்கு மூன்று வாரிசுகள். இரண்டு பையன்கள் கடைக்குட்டியாய் ஒரு மகள். அவள் கல்யாணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டிருந்தாள். இரு மகன்களும் வெளியூரில் வேலை பார்த்துவிட்டு தற்போதுதான் மாற்றலாகி சொந்த ஊருக்கு வந்திருக்கின்றனர். ஓனரய்யா தான் கட்டியதில் மூன்றை வாரிசுகளுக்கு எழுதிவைத்துவிட்டு நான்காவது வீட்டைத் தன் பெயரில் வாடகைக்கு விட்டிருக்கிறார். பென்ஷன் கிடையாது அவருக்கு.கேட்டால், “கைச்செலவுக்கு டப்பு வேணும்ல கந்தா” என்று சிரிப்பார்.கந்தய்யாவிற்கு பணமுடை ஏற்படும்போதெல்லாம் அவரிடம்தான் போய் நிற்பார். அவரும் பழைய கடனே திருப்பித் தரவில்லை என்றெல்லாம் பார்க்காமல் , கையில் கொஞ்சம் கொடுப்பார். ஒவ்வொரு தடவையும் , நீ ஒன்றும் இதெல்லாம் திருப்பித்தரவேண்டாம் என்பது போல்தான் அவர் கொடுக்கின்ற பணமும் இருக்கும். நல்ல மனிதர்.கந்தய்யா இடுப்பு வேட்டியை இறுக்கிக் கொண்டு மோட்டார் அறையை நோக்கி நடந்தார். அவரது குடியிருப்பில் உள்ளவர்கள் காலைக் கடன்களைத் தீர்க்க ஆரம்பிக்கும்போதே தண்ணீரின் வேகம் குறைய ஆரம்பிக்கும்.. கந்தய்யாவைக் கூப்பிட ஆரம்பித்துவிடுவார்கள்.‘மோட்டாரைச் சரியான நேரத்தில் போடாத கந்தய்யா தேவைதானா? அந்த வேலையை ஒரு ஆட்டோமேடிக் சுவிட்ச் செய்யாதா?’ என்பதிலிருந்து யாராவது அப்போது ஆரம்பிப்பார்கள். காரில் போய் வரும்போதெல்லாம் வாசல்கேட்டை இன்னமும் வாட்ச்மேன்தான் திறக்கவேண்டியிருக்கிறது.. அதனால்தான் மேற்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்கள்.கந்தய்யா வாசலில் இருந்த குழாயில் முகத்தைக் கழுவிவிட்டு வாயைக் கொப்பளித்தார். தோளில் இருந்த துண்டினால் முகத்தைத் துடைத்துவிட்டு மறுபடியும் கட்டில் விளிம்பில் அமர்ந்து கொண்டார். மோட்டரை அணைத்துவிட்டு சில தெருக்கள் தள்ளியிருக்கும் அவரது வீட்டிற்கு போய்விட்டு நாஷ்டாவை முடித்துவிட்டு வரவேண்டும்.“தாத்தா..ரெண்டாம் மாடி வீட்டுக்காரரு வந்திட்டாரா..?” சைக்கிளை மிதித்துக் கொண்டுவந்த சிறுவன் கையில் பேப்பருடன் சுருட்டி வைத்திருந்த கேள்வியைத் தொடுத்தான்.“நேத்தி ராத்திரி பத்துமணிக்கு மேல..” அவர் சொன்ன பதிலுக்கு பதிலாய் சுருட்டிய பேப்பர் தரையைத் தேய்த்துக் கொண்டு விழுந்தது. பையனுக்கு அடுத்த வீடு இலக்கு- போய்விட்டான்.எதிர்வீட்டு ஓனரய்யா அவரது பேப்பரை அவசரமாகப் படித்து முடித்துவிட்டு கையில் எடுத்துக் கொண்டு மாடியேறிப் போனார். ஏழு மணிக்குள் மூத்தவன் வீட்டு வாசலில் பேப்பரை வைத்தாகவேண்டும். இல்லாவிட்டால் சத்தம் போடுவான். ‘டிவியில நியூஸ் பாத்தாப் போதாதா’ என்றும் ‘பேப்பரைப் படிச்சா சரியாக மடிச்சு வைக்கிறதே இல்லை’ என்றும் சொல்லுவான். அவர் சிரித்துக் கொள்வார்.மூத்தவன் சிறுவனாக இருந்த போது “பேப்பரைச் சரியா மடிச்சு வை” என்று அவர் சொன்ன வார்த்தைகள் காலக்குகையில் புகுந்து பல வருடங்கள் கழித்து அவர் காதில் எதிரொலிப்பது போல் தோன்றும்.திரும்பவும் கீழிறங்கி வந்தவர் , கேட்டில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள்பைகளில் சுரந்திருந்த பால் பாக்கெட்டுக்களை எடுத்துக் கொண்டு மாடிக்கு ஏறினார். மகன்களின் இருவரது வீட்டிலும் பால் பாக்கெட்டைக் கொண்டுபோய் சேர்க்கவேண்டியது அவரது காலைக் கடமைகளில் ஒன்று.அதற்கப்புறம் அரைமணி நேரத்திற்கு அவரைப் பார்க்க முடியாது.. அவருக்குரிய காப்பிக்கான பாலைக் காய்ச்சி ஒரு மடக்கு குடித்தால்தான் மற்ற வேலைகளை அவரால் செய்யமுடியும். கார்பார்க்கிங் இடத்தில் ஒட்டடை வேறு அடைந்து கிடக்கிறது.. குச்சியை வெகுநேரத்திற்கு உயர்த்தி அடிக்க முடியாததினால் , சிறிது சிறிதாக அடித்துக் கொண்டிருக்கிறார்.ஆனால் , பார்க்கிங்கில் இருக்கிற வண்டிகள் எல்லாம் வெளியில் போனால்தான் அதைச் செய்யமுடியும். அதற்கும் மகன்களிடம் அவர் பேச்சு வாங்கவேண்டும்.“இதெல்லாம் பண்ணி அலர்ஜி வந்து படுத்துக்கிட்டு எங்க உசிர வாங்கப்போறீங்க” என்று மூத்தவனும் “இந்த இடத்தை மொத்தமா வித்திட்டு ஹீராநந்தினியில் வாங்கிட்டு போயிடலாம்னு சொன்னேன்.. எல்லா வேலையும் அவங்களே பாத்துப்பாங்க.. எங்க கேட்டீங்க..” என்று சின்னவனும் மறக்காமல் கமெண்ட் அடித்துவிட்டுப் போய்விடுவார்கள்.வாஸ்தவம். அவர் வித்திருக்கலாம்தான். அவரே யாரையும் கேட்காமல் தன்னிச்சையாகத் தீர்மானம் செய்து பிளாட்டுகள் கட்டுவதற்கு எல்லாவித ஏற்பாடுகளையும் செய்தபிறகு அவரால் பின்வாங்க முடியவில்லை. அவரது மகன்கள் விற்றுவிடலாமென்று சொன்னபோதுகூட கட்டிட பராமரிப்பை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பிடிவாதமாகச் சொல்லியிருந்தார். அதுதான் இப்போது அவரை வெளியில் எங்கும் செல்லவிடாமல் கட்டிப்போட்ட மாதிரி ஆக்கிவிட்டது. அவரின்றி ஒரு அணுவும் அசையாது அங்கு.உடம்புசரியில்லாமல் , அவர் படுத்துக்கொண்ட பல நாட்கள் மஞ்சள்பையிலேயே பால் பாக்கெட்டுக்கள் கிடந்திருக்கின்றன. தண்ணீர் வரவில்லையென்று வாடகைக்கு குடியிருப்பவர் மூத்தவனிடம் சண்டை போட்டிருக்கிறார்.கந்தய்யா அந்தக் கூத்துகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார். பெரியவர் வரும் வரை, தினசரி வேலைகளைச் செய்ய இரண்டு மகன்களில் யார் பொறுப்பை எடுத்துக் கொள்வது என்கிற கேள்வி வரும்போதெல்லாம் இளையவன் காரை எடுத்துக் கொண்டு சீக்கிரமே ஆபீசிற்கு போய்விடுவான். மூத்தவன் புலம்பிக் கொண்டே வேலைகளைச் செய்வது கந்தய்யாவின் காதுகளில் விழும்.ஓனரய்யா மறுபடி நடமாட ஆரம்பித்ததும் , அது சாந்தி நிலையம் ஆகிவிடும்..மற்றொரு நாள் “அய்யா.. மோட்டார் ரொம்ப நேரமா ஓடிக்கிட்டு இருக்கு போலியே..” என்றார் கந்தய்யா.“நீயும் கவனிச்சிட்டியா.. தண்ணி ரொம்பற மாதிரியே தெரியலை.. தண்ணி ஏர்ற பைப்புல காதை வெச்சிக் கேட்டாலும் ஏதோ சளிபிடிச்ச நெஞ்சு மாதிரி கர்புர்ன்னு சத்தம் மட்டும் கேக்குது..” என்று சொன்னவர் சும்மா இருந்தால்தானே. மூன்று மாடிகள் ஏறி அதற்கு மேலும் மொட்டை மாடியில் இருக்கும் இரும்பு ஏணியில் ஏறி தண்ணீர் தொட்டியையும் பார்த்துவிட்டு இறங்குவார். தன் வயதிற்கு ஒவ்வாத சாகசங்களை அவர் செய்யும் போது கந்தய்யாவிற்கு நெஞ்சம் பதறும்.“அய்யா.. உங்க மகன்களைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொல்லலாமில்ல..” என்று கேட்டால் அவர் பதிலொன்றும் சொல்லாமல் சிரிப்பார். அதில் ஓராயிரம் உண்மைகள் இருக்கும்.“கந்தா.. நான் இருக்கிற வரைக்கும் யாருக்கும் குறையிருக்காது” என்றார் ஒரு நாள்.அவர் அதற்காக வருத்தப்பட்டதும் இல்லை. ஒரு நாள் வேலைக்காரி வரவில்லையென்றால்கூட அவரே துடைப்பத்தைக் கையில் எடுத்துப் பெருக்கி வீட்டு வாசலில் தண்ணீரும் தெளித்துவிடுவார்.கந்தய்யா அவருக்கு உதவி செய்யலாமென்றாலும் மறுத்துவிடுவார்.“கோலத்திற்கு புள்ளி கூட வெச்சிடலாம் கந்தா.. யாரு இழை இழுக்கிறது? குனிஞ்சாலே எனக்கு மூச்சுதான் இழுக்குது” என்பார்.தண்ணீர் தெளித்து எழும் மண்ணின் வாசம் போல் அவரது சுவாசம்தான் அந்த கட்டிடம் முழுக்க பரவியிருந்தது.ஒருநாள் அவரது மூச்சும் நின்று போனது. அனாயாசமான மரணம்.எப்போதும்போல் வாசல் கேட்டைத் திறந்துவிட்டு, தண்ணீர் மோட்டார் போட்டவர் சேரில் உட்கார்ந்தபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர்தான். சில நிமிடங்களில் அவரது கைகளிலிருந்து பேப்பர் நழுவியிருந்தது.. தன்னுடைய பேப்பர் நேரமாகியும் வரவில்லை என்கிற கோபத்தில் தபதபவென்று இறங்கிய மூத்தவன்தான் முதலில் பார்த்தது. தெருவில் அன்றைக்கு அவரே செய்தியாகிப் போனார்.மளமளவென்று காரியங்கள் ஆரம்பித்தன. அவரது பெண் போனிலேயே அழுது துக்கத்தைப் பகிர்ந்து கொண்டாள். மதியத்திற்குள் அவரை எடுத்துக் கொண்டு வண்டி போய்விட்டது. நான்கு மனிதர்கள் சுமக்கவேண்டியதை நான்கு சக்கரங்கள் சுலபமாகச் செய்துவிட்டன.“கந்தா.. நான் செத்தேன்னா நேரா காட்டுக்குப் போயிடுவேன்.. நீ செத்தேன்னா முதல்ல வீட்டுக்குத்தான் போவே..” என்று சிரித்தபடியே கமெண்ட் அடித்த மனிதர் சுலபமாக போய் சேர்ந்துவிட்டார். கந்தய்யாவிற்கு அழுகையாய் வந்தது.ஓனரய்யா இறந்த அன்று மதியமே கந்தய்யாவின் தெருவில் குடியிருக்கும் அந்தோணி வாசலில் வந்து நின்றான்.“இன்னாப்பா கந்தா..அய்யா போயிட்டாராமே.. பால் பாக்கெட் போடற அம்மாதான் சொல்லிச்சு..அதுக்குள்ளியா தூக்கிட்டாங்க?” என்றான்.“ஏன்.. நீ மாலை வாங்கியாறலாம்னு பாத்தியாக்கும்..”அந்தோணி எதற்கு துக்கம் விசாரிக்கிறான் என்று கந்தய்யாவிற்கு சுலபமாகப் புரிந்தது. அவனும் கந்தய்யாவும் ஒரே வயதுக்காரர்கள்தான். அரசுப் பள்ளியில் படிக்காமல், கோடம்பாக்கம் ஸ்டூடியோக்களின் அருகில் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்தவர்கள். சரியாகப் படிக்கவில்லை, வீட்டுப் பாடம் முடிக்கவில்லை என்று வாத்தியார் வகுப்பறை வாசலில் நிற்கவைத்தது பின்னாட்களில் வாட்ச்மேன் வேலைக்குத்தான் லாயக்கு என்பதாயிற்று.“சும்மா வந்து நீ கேக்கமாட்டியே.. எதிர் வீட்டு வேலைக்கு மனுப்போட சிபாரிசுக்கு எங்கிட்ட வந்திட்டியாக்கும்..”“ஆமாமா.. இது கவர்மெண்டு வேல.. நீ ஒரு மந்திரி… மனு போடுவாங்களாம்..” என்று அந்தோணி சொல்ல இருவரும் சிரித்தனர். கேட்டால் சொல்கிறேன் என்று அவனை அனுப்பி வைத்தார் கந்தய்யா.கந்தய்யாவிற்கு இரண்டு மூன்று நாட்கள் வெறுமையாய் கழிந்தன. ஆனால் ஓனரய்யாவின் மூத்த மகன் மேலும் கீழுமாக நடப்பதையும், பால் பாக்கெட்டுக்களை எடுத்துக் கொண்டு போவதையும் பார்த்தபடி இருந்தார்.நான்காம் நாள் எதிர்வீட்டிலிருந்து வெளியில் வந்த மூத்தமகன் கந்தய்யாவை நோக்கி சிரித்தபடி அருகில் வந்தான்.“அப்பாவும் நீங்களும் ரொம்ப பிரண்ட்ஸ் போல.. அவர் சொல்லிக்கிட்டிருப்பாரு..” என்றான்.“அப்படியெல்லாம் இல்லீங்க.. அவரு பெரிய மனுசன்.. நான் ஏதோ கூலிக்கு இங்க வாட்ச்மேனாக இருக்கிறேன்.. அவ்வளவுதாங்க..” என்றார் கந்தய்யா. தந்தையை இழந்த சோகத்தைப் பகிர்ந்து கொள்வது போல் தலையைக் குனிந்து கொண்டார்.“அதான் உங்ககிட்ட கேக்கலாம்னு.. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது நம்ம வீட்டுக்கும் வாட்ச்மேனா இருக்கலாம்… மோட்டார் போட.. எல்லாத்துக்கு ஆள் தேவைபடுது.. கூட சம்பளம் ஒண்ணும் பிரச்னையில்ல..” என்று மூத்தவன் முடிப்பதற்கு காத்திருந்தார் கந்தய்யா.ஓனரய்யா சொன்னது போல் அவர் இருந்தவரை அந்த வீட்டிற்காக உழைத்துவிட்டார். இப்போது அவர்களுக்கு இன்னொரு வேலைக்காரர் தேவைப்படுகிறார்.அந்தோணிதான் இருக்கிறானே.. சொல்லிவிடலாமென்று தோன்றிய மறுகணம்,“இல்லிங்கய்யா.. உங்ககிட்ட முடியாதுன்னு சொல்ல முடியல.. எங்க ஓனர் தப்பா நெனப்பாரு.. எங்க ஏரியாவுல வேற யாராவது இருந்தா கட்டாயம் சொல்றேன். ..” என்றபடி தலையைக் குனிந்து கொண்டார் கந்தய்யா..“சீக்கிரம் சொல்லுங்க.. ஒரு நாளைப் போல.. என்னால முடியல..” என்று முணுமுணுத்தவன் சற்றுநேரம் அப்படியே நின்றுவிட்டு தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.‘தினமும்தான் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கட்டுமே.. வாசல் கதவைத்திறந்து வைத்து விட்டு தண்ணீர் மேலே ஏற்றட்டுமே.. பால் பாக்கெட், பேப்பரை எடுத்துக் கொண்டு போங்களேன்.. ஓனரய்யா செய்த வேலைகளை கொஞ்ச நாட்களுக்கு செய்தால் என்ன குறைந்துவிடப்போகிறது? அப்போதாவது அவரது அருமை அவங்களுக்குத் தெரியட்டும். ‘ என்று நினைத்தவர், “ஓனரய்யா.. மன்னிச்சிடுங்க.. உங்க பிள்ளைகளும் ரெண்டு மூணு நாளைக்கு நீங்க பண்ணின வேலைகளைச் செஞ்சு பார்க்கட்டுமேன்னு அப்படிச் சொல்லிட்டேன்.. ” என்றபடி ஓனரிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டிக் கொண்டார்.