கேரளாவில் கனமழை பெய்து வருவதையடுத்து அம்மாநிலத்துக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரியில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறீயதாவது:
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்யக் கூடும் என்பதால், அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், கேரளா எல்லையை ஒட்டியுள்ள பந்தலூர், கூடலூரியில் மழை அதிகரித்துள்ளது. அப்பகுதிகளில் பேரிடர் பாதிப்பை தடுக்க வருவாய் உட்பட அனைத்து துறையினருடன் மீட்புக் குழுவினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை நிவாரண முகாமில் யாரும் தங்க வைக்க வில்லை.
–இவ்வாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிலையில் பரவலான மழையால், தமிழக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. குந்தா, பைக்காரா மின் வட்டத்தின் கீழ், 13 அணைகள், 30 தடுப்பணைகள் உள்ளன. பரவலான மழையால், மேற்கு தொடர்ச்சி மலை நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அப்பர்பவானி, பைக்காரா, அவலாஞ்சி, எமரால்டு, முக்குறுத்தி, பார்சன்ஸ்வேலி, கிளன் மார்கன் அணைகளுக்கு வினாடிக்கு, 150 லிருந்து 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் நீர் வரத்து அதிகரிப்பாலும் அணைகள் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.