காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளுக்கு நகை கடன் வழங்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் கலைச்செல்வி, கண்காணிப்பாளராக ஜெயஸ்ரீ, மற்றும் நகை மதிப்பீட்டாளராக விஜயகுமார் என்பவரும் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் மூன்று பேரும் இணைந்து நகைக் கடன் வாங்க வருவோரிடம் கமிஷன் பெறுவதற்காக கவரிங் நகைகளுக்கு கடன்கள் வழங்கி இருந்தது வங்கி தணிக்கையின்போது தெரிய வந்தது. இதுகுறித்து இந்த 3 பேர் மீதும் கூட்டுறவு சங்கங்களுக்கான துணை பதிவாளர் சுவாதி, வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையில் புகாரளித்தார்.
இதன் அடிப்படியில் நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் அந்த கூட்டுறவு வங்கியில் 21 பேரிடம் கவரிங் நகைகளை பெற்றுக்கொண்டு 1.64 கோடி நகை கடன் வழங்கி உள்ளது தெரியவந்துள்ளது . இதைத்தொடர்ந்து பெண் ஊழியர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் இந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வங்கியின் கண்காணிப்பாளரான ஜெயஸ்ரீ தலைமறைவான நிலையில் போலீசார் அவரை தேடி வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.