கோயில் நகைகளை உருக்க இடைக்காலத் தடை: சென்னை உயர்நீதி மன்றம்!

கோயில் நகைகளை உருக்க இடைக்காலத் தடை: சென்னை உயர்நீதி மன்றம்!

தமிழ்நாட்டு கோயில்களிலுள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டதாவது: இந்து சமய அறநிலைய சட்டத்தில் கோயிலுக்குச் சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை. அறநிலையத் துறை, கோவில் நிர்வாகத்தில் மட்டும் தலையிட முடியும். தவிர மத வழிபாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது. வருவாய் ஈட்டுவதற்காக நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பதில், ஆக்கிரமிப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டு வருவாய் ஈட்டலாம். கோயில் நகைகள் தொடர்பாக முறையாக எந்த பதிவேடுகளும் பராமரிக்கப்படாத நிலையில், நகைகளை உருக்கி வங்கிகளில் டெபாசிட் செய்வது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால் நகைகளை உருக்குவது தொடர்பான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இது பழைய நடைமுறை தான் எனவும், 1977ஆம் ஆண்டிலிருந்து கோயில் நகைகளை உருக்கும் நடைமுறை நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனை நிர்வகிக்கவும் கோயில் நகைகளைக் கணக்கெடுக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதால் தவறு நடக்காது எனவும் வாதிடப்பட்டது.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் தெரிவித்ததாவது:

தமிழக கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது இருப்பினும் காணிக்கை நகைகளைக் கணக்கெடுப்பதில் தவறில்லை.

இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தர்வௌ பிறப்பித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com