தெலுங்கு திரையுலகில் நடிகை சமந்தாவுக்கும் அவர் கணவர் நாக சைதன்யாவுக்கு விவாகரத்து ஆகப்போவதாக ஹாட் நியூஸ் வலம் வருகிறது. அதற்கேற்றார்போல், சமந்தா சமீபத்தில் தன் சமூக வலைதளப் பக்கங்களில் தன் பெயரில் இருந்த கணவரின் குடும்பப் பெயரான 'அக்கினேனி' என்பதை நீக்கிவிட்டு சிம்பிளாக 'எஸ்' என்று மட்டும் போட ஆரம்பித்துள்ளார். இதனால் விவாகரத்து உண்மை என்று வதந்தி, பற்றி எரிகிறது.
சமந்தா தனது காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்து வாழ்வதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. பிறகு இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க மாமனார் நாகர்ஜுனா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தீவிரமாக முயற்சித்ததாகவும், ஆனால் அது வெற்றிபெறவில்லை என்று சொல்லப்படுகிறது. இருவருக்கும் சுமுக விவாகரத்திற்கான ஏற்பாடுகள் கோர்ட்டில் நடந்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நாக சைதன்யா – சாய் பல்லவி நடித்த 'லவ் ஸ்டோரி' படத்தின் டிரைலர் வெளியானது. செப்டம்பர் 24- ம் தேதி ரிலீசாக உள்ள இந்த படம் பற்றி தன் டிவிட்டரில் சமந்தா பதிவிட்டார். அதில் ''படம் வெற்றி அடைய லவ் ஸ்டோரி டீமுக்கு வாழ்த்துக்கள்'' என கூறி இருந்தார். இதனால் விவாகரத்து விவகாரம் வெறும் வதந்தியே என்று சிலரும், ''இல்லையில்லை.. அவர் தன் கணவருக்கு வாழ்த்து சொல்லாமல் பொத்தம்பொதுவாக, பட டீமுக்குதான் வாழ்த்து சொல்லியிருக்கிறார். அதனால் அவர்களுக்குள் உறவுநிலை சரியில்லை" என்று சில ரசிகர்களும் கருத்து தெரிவித்தனர்,
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தவற்காக நேற்று அதிகாலை சமந்தா சென்றார். சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த சமந்தாவை ஒரு செய்தியாளர் சந்தித்து, விவாகரத்து பற்றி கேள்வி கேட்டார்.
அவ்வளவுதான்.. அதுவரைகறுப்புநிற மாஸ்க் அணிந்து, அமைதியாக வந்த சமந்தா, அந்த பத்திரிக்கையாளரை முறைத்தார். பின்னர், ''நான் இப்போது கோயிலில் இருக்கிறேன். இங்குவந்து கேட்கக்கூடிய கேள்வியா இது?'' என கோபமாக கேட்டு விட்டு நகர்ந்தார். கோயில் நிர்வாகிகளும் அவரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில்தான் நாகசைதன்யாவும் ''விவாகரத்து பற்றி கேள்வி கேட்காதீர்கள். சினிமா பற்றி மட்டுமே கேளுங்கள்" என்று கேட்டுகொண்டது குறிப்பிடத்தக்கது.