- P.R.லட்சுமி
ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு பருத்திக்காகவும், அவுரிக்காகவும் நாடாள வந்ததாக கூறுவர். அவுரிக்கு இண்டிகோ, நீலி, சென்னா போன்ற பெயர்கள் உண்டு.
இந்த அவுரி சிந்துவெளி நாகரிகத்தில் இருந்து பயிரிடப்பட்டதாக கூறுவர். புரியாத குறியீடுகள் என இன்றளவிலும் பேசப்படும் சிந்துவெளி நாகரிகச் சின்னக் குறியீடுகளில் ஒன்றாக இந்த அவுரி இருந்திருக்கலாம். அதையும் தாண்டி கற்பனைக் கண்டம் என்று அழைத்து வரும் குமரிக்கண்டத்திலும் இது பயிரிடப்பட்டதாக கூறுவது உண்டு.
இந்தியாவின் தென்னாட்டிலும், வடநாட்டிலும் அதிகம் பயிராகும் இந்த அவுரிக்கு வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு.
இரண்டிலிருந்து மூன்று அடி வரை வளரும் இந்த அவுரி ஆவாரம் செடிகளின் குடும்பத்தை ஒட்டியே இருப்பதால் அந்த ஆவாரம் இலைகளைப் போன்றே இருக்கும் பூக்கள் வெளிறிய மஞ்சள் வண்ணத்துடனும் இருக்கிறது.
நெல் பயிரிட்ட பின் இந்த அவுரியைப் பயிரிடுவர். அவ்வாறு பயிரிடும் பொழுது, இது நிலத்தில் உள்ள விஷத்தை நீக்கி மண்ணை வளப்படுத்தும் என்பது விவசாயிகளின் கருத்து. நிலத்தின் இருபதில் மூன்று பாகத்தில் தனது நில உரிமையாளருக்காக அவுரியைக் கட்டாயம் பயிர் செய்ய வேண்டும் என்ற சட்டம் 1917 களில் இருந்து வந்தது. இதற்கு தீன்கதியா என்று கூறுவர். 20 கதியாக்கள் கொண்டது ஒரு ஏக்கர்.
நெல் பயிரிடுவதை விட அவுரி பயிரிடுவது சிறந்தது என விவசாயிகளிடத்தில் ஒரு கருத்து உண்டு. திருநெல்வேலி மாவட்டத்தில் பண்டைக் காலத்தில் அவுரி அதிகம் பயிரிட்டதாக கூறுவர். ஆங்கிலேயர் நெல் பயிரிடும் விவசாயிகளின் எண்ணங்களை மாற்றி அவுரி பயிரிடும்படியாக கட்டாயப்படுத்துவர். அந்த அவுரி ஏற்றுமதி பெட்டிகளின் மேல் விவசாயிகளின் ரத்தக்கறை இருந்ததாக்க கூறுவது உண்டு.
இச்செடிகளில் இருந்து நீலம் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. கிராம மக்கள் பருத்தித் துணிகளுக்கும் இந்த அவுரியை பயன்படுத்தி சாயம் பயன்படுத்தினர். சில ஆயிரம் ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யப்பட்ட அவுரி இயற்கை சாயத்தைத் தரும். அதற்குப் பெயர் இப்போது இண்டிகோ. இந்தியாவில் இருந்து வந்ததால் அதற்கு இண்டிகோ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அவுரியின் மருத்துவ குணங்கள்:
அவுரி மூலிகைச் செடி என்பது பலருக்குத் தெரியாது. சித்த மருத்துவத்தில், ஆயுர்வேத மருத்துவத்தில் இம்மூலிகை பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த அவுரியின் பெருமை தெரிந்து பேசப்பட்டு வருகிறது.
அவுரி சிறந்த மூலிகை என குணபாடம் நூல் கூறுகிறது. இது பலவிதமான நோய்களை நீக்கும் ஒரு தாவரமாக இருக்கிறது.
அவுரி தலைமுடி வளர்ச்சியைச் சீராக வைத்திருக்கும்.
இது விஷத்தை முறியடிக்க உதவும். அவுரி மூலிகை 18 வகையான விஷங்களையும் எடுக்கும் திறன் பெற்றது.
ஆனால் அவற்றை நாம் உள் மருந்து எடுக்கும்போது மருத்துவரிடம் கலந்து செய்யவேண்டும். ஏனெனில் சித்த மருந்து என்பது ஒவ்வொருவரின் உடம்புக்கு ஏற்ற வகையில் மருத்துவரால் மட்டுமே அளிக்கப்படக்கூடிய ஒன்று.
இன்று மனிதனுக்கு மட்டுமல்லாது நமக்கு பால் தரும் மாடுகளுக்கும் மருத்துவம் பார்க்க வேண்டி உள்ளது. இதற்கென நூல்கள் தனியாக பல இருந்தாலும் அவற்றை யாரும் படிப்பது கிடையாது. அனுபவ அறிவை வைத்து மாடுகளை பராமரித்து வருகின்றனர். விலங்குகளுக்கு என உரிய மருத்துவர்களிடம் சென்று கலந்து பேசினால் மாடுகள் நோயின்றி வாழும். பால் நமக்கு தூயதன்மையுடையதாய் கிடைக்கும். அவுரி மாடுகளுக்கும்,ஆடுகளுக்கும் நன்மை செய்யும் மருந்து.
ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம் போன்ற நமது முன்னோர் வகுத்த மருத்துவ முறைகள் மக்களால் பின்பற்றப்படாமல் போனதால் இன்று நாம் எல்லாவற்றிற்கும் அடிமையாகி இருக்கிறோம். அதனை மக்கள் முழுமையாக உணர்ந்து இயற்கையாக இந்தியாவில் கிடைக்கும் எளிமையான பொருட்களை பயிரிட்டு விவசாயத்தின் அருமை தெரிந்து வாழ்ந்தோமானால் அறிவியல் தீய விளைவுகள் நம்மை அண்டாது.