

அகோரிகள் என்றாலே நம்மில் பலருக்கு பலவகையான கருத்துகள் உண்டு. புத்தகங்கள், ஊடகங்கள், இணையம், செவிவழி செய்தி என பலவாறாக அவர்களை பற்றி அறிந்திருப்போம். சில நேரங்களில் அவர்களை பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளும் வருவதுண்டு. உண்மையில் அகோரிகள் என்பவர் யார் ? தெரிந்து கொள்வோம் வாருங்கள்!
உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட முடியுடன், முகத்திலும் மார்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள். தலை பகுதி தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடிகள் இருக்காது. இவர்கள் உலகை வெறுத்து தனியாக வாழ்பவர்கள் கிடையாது. சிறு சிறு குழுக்களாக தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள். தங்களை விளம்பரபடுத்தி கொள்ளவோ, தங்களுக்கு இருக்கும் அமானுஷ ஆற்றலை வெளிகாண்பிக்கவோ மாட்டார்கள். உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண்கொண்டு பூசியிருப்பார்கள். மத பொருட்கள் எதையும் கைகளில் வைத்திருக்க மாட்டார்கள்.
அகோரிகள் குழுக்களாக இருக்கும் சூழலில் யார் தலைமை யோகி அல்லது குரு எனகண்டறிவது சிரமம். அனைவரும் ஒரே போல இருப்பார்கள்.
ஆண் மற்றும் பெண் அகோரிகள் இருவரும் உண்டு. நிர்வாணமாக இருந்தாலும் பெண் யோகிகளை கண்டறிவது கடினம். வயதானாலும் இவர்களின் தலைமுடி வெள்ளை ஆகாது. உடல் சீரான நிலையில் இருக்கும்.
ரிஷிகேசம் அல்லது இமய மலையின் வனங்களில் இருப்பார்கள். பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளாவிற்கு வந்து கூடுவார்கள். இமாலய வனத்திலிருந்து நடந்தே அலாகாபாத் எனும் இடத்திற்கு வருவார்கள். மீண்டும் நடந்தே சென்று விடுவார்கள். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்பொழுது கட்டுகோப்பாக வரிசையில் செல்வார்கள். வரிசையின் முன்னாலும், பின்னாலும் இருக்கும் அகோரிகள் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள்.
நீண்ட முடியும், மண் அல்லது சுடுகாட்டு சாம்பலை பூசி இருந்தாலும் அவர்கள் மேல் எந்த விதமான வாசனையும் இருக்காது. நறுமணமும் இருக்காது, நாற்றமும் இருக்காது. முக்கியமாக இவர்கள் பிறருடன் பேசுவது குறைவு. தங்களுக்குள்ளும் பேசிக்கொள்ளவே மாட்டார்கள்.
குழுவாக வட்டவடிவில் உட்கார்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள். இம்மூலிகை கஞ்சா என பிறர் எண்ணுகிறார்கள். கும்பமேளாவில் கஞ்சா எல்லா இடத்திலும் கிடைக்கும், சிலர் இலவசமாக பிறருக்கு வழங்குவார்கள். ஆனால் இவர்களிடம் யாரும் கொடுக்க மாட்டார்கள், இவர்களும் வாங்க மாட்டார்கள். தாங்கள் இருக்கும் வனத்திலிருந்து சில மூலிகைகளை கொண்டு வருவார்கள். வட்டமாக உட்கார்ந்திருக்கும் இவர்கள் வட்டத்தின் மையத்தில் அந்த மூலிகையை வைத்து ப்ரார்த்தனை செய்த பின் புகைப்பார்கள். மூலிகை குழாயில் வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள். பிறகு அடுத்தவருக்கு கொடுப்பார்கள். இப்படியாக வட்டம் முழுவதும் புகைகுழாய் வட்டமடிக்கும்.
ரிஷிகேசத்திலும், கும்ப மேளாவிலும் 1டிகிரி சென்டி கிரேட் குளிர் இருந்தாலும் நிர்வாணமாக உட்கார்ந்து தியானம் செய்வார்கள். இப்படிப்பட்டயோகிகளை புரிந்து கொள்வது கடினம். இமாலய மலை பகுதிகள் (யமுனோத்தரி, கங்கோத்தரி மற்றும் நேபாளம்) இவர்களின் முக்கிய இடமாக இருக்கிறது.
கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை. குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் அகோரிகள் தங்கும் இடம் மயானம். எந்த ஊருக்கு சென்றாலும், நாம் ஹோட்டலை தேடுவது போல இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள்.
அகோரிகளுக்கு தங்கள் உடலின் சக்தி நிலை மிகவும் முக்கியமானது. யோக சக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும் இழக்க அவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள். இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது என்பது இவர்களுக்கு அத்துப்படி. மயானம், ஆறு மற்றும் வனங்களில் தங்கள் உடல்சக்தியை மேம்படுத்துவார்கள். தங்கள் யோக சக்தியை பிறருக்கு அநாவசியமாக காட்ட மாட்டார்கள். சமூகத்தில் தர்மம் தடுமாறும் பொழுது சூட்சமமாக செயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள்.
அகோரிகளின் ராணுவ அமைப்பின் தலைவர், பதவியை ஏற்கும் முறை விசித்திரமானது. புதிய தலைவரை வணங்கிவிட்டு, பழைய தலைவர் தன்னை மாய்த்துக் கொள்ளுவார்.
அகோரிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ண மாட்டார்கள். உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள்.
உடலில் எந்த ஒரு மதசின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம், சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணிய மாட்டார்கள். சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில், இடங்களில் பூசமாட்டார்கள். உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல. நிர்வாணத்திற்கான காரணம் ஆசை, பாசம், பொருள், ஆடை என்று எல்லாவற்றையும் கடந்து பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைந்து முற்றும் துறந்த நிலை என்று கூறலாம்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here