கரிகால சோழன் கட்டிய கல்லணையின் வரலாற்று ரகசியம் தெரியுமா உங்களுக்கு?

கல்லணை
கல்லணை

மிழகத்தில் உள்ள வியக்க வைக்கும் அணைக்கட்டுகளையும் அதன் வரலாறுகளையும் பார்த்தால் உண்மையில் பிரமிக்க வைக்கிறது. விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்த நாளில், தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த நாளில் நம்மால் ஒரு அணை கட்ட முடியுமா? என்று கேட்டால் நிச்சயம் முடியாது என்றுதான் யாராக இருந்தாலும் பதில் சொல்வார்கள். காரணம் ஒவ்வொரு அணைக்கு பின்னாலும் இருக்கும் வரலாறுகளை படித்தால், ‘ஆமாம்’ என்று நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள். அப்படி வியக்க வைக்கும் கல்லணையை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கன நீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணை கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இந்த அணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பமாகும்.

கல்லணை கரிகாலச் சோழனால் கட்டப்பட்டது என்பதை அனைவரும் அறிவர். மேலும், தமிழகத்தில் உள்ள அணைகளிலேயே கல்லணைதான் மிகவும் பழைமையானது. அதுமட்டுமின்றி, தற்போது வரை புழக்கத்திலுள்ள பழைமையான அணை கல்லணை என்பது மிகவும் வியக்கத்தக்க ஒரு விஷயம் ஆகும். இதுவே உலகின் மிகப் பழைமையான நீர்ப்பாசனத் திட்டம் என்று கூறுவதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். மேலும், இந்தக் கல்லணை மணலில் அடித்தளம் அமைத்து கட்டப்பட்டது இன்னொரு சாதனை. கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.

கரிகால சோழன்
கரிகால சோழன்https://ta.quora.com

கல்லணையில் உள்ள கரிகால சோழன் சிலை: கல்லணை பல காலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும், வறட்சியாலும் வளமை குன்றியது. இந்தச் சூழலில் 1829ல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். இவர்தான் பயனற்று இருந்த கல்லணையை தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்டிருந்த அடித்தளத்தை ஆராய்ந்த அவர், பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் பாராட்டும் விதமாக கல்லணைக்கு, ‘கிரான்ட் அணைகட்’ என்ற பெயரையும் சூட்டினார்.

இதையும் படியுங்கள்:
ஐந்து முகம், எட்டு கரங்கள் கொண்ட முருகன் கோயில் எங்குள்ளது தெரியுமா?
கல்லணை

பல நூற்றாண்டுகளைக் கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. பழைமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டால், நமக்குப் பின் வரும் தலைமுறைகளும் இந்த வரலாறுகளை தெளிவாகக் காண முடியும் என்பதில் ஐயமில்லை.

நம்மால் கட்ட முடியாத அணைக்கட்டுகளை, நம் முன்னோர்கள் நமக்கு கட்டிவைத்து சென்றுள்ள பொக்கிஷ அணைக்கட்டுகளை பாதுகாக்க வேண்டியது பராமரிக்க வேண்டியது நம் கடமை அல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com