குல்ஃபி என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பொதுவாக தமிழகத்தில் குல்ஃபி விற்பவர்களைப் பார்த்தால், வட மாநிலத்தவர்களாகவே இருப்பார்கள். ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? அதற்கு நாம் சிறிது வரலாற்றை அறிந்துக் கொள்வது அவசியமாகும்.
பொதுவாக குல்ஃபி, பானி பூரி ஆகியவையெல்லாம் வட மாநிலத்தவர்களே விற்பார்கள். பானி பூரியை பொறுத்தவரை, அது மகாபாரத காலத்தில் பாஞ்சாலி செய்த உணவு என்று கூறுவார்கள். ஆகையால், அப்போதிலிருந்து இப்போதுவரை வட மாநிலங்களில் பானி பூரி புகழ்பெற்றது. பின்னர், அதனை அவர்கள் தென்னிந்தியாவிலும் கொண்டு வந்து பிரபலமாக்கினார்கள். அதேபோல்தான், குல்ஃபியும்.
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற முகலாய ஆட்சி 1426ம் ஆண்டு முதல் 1857ம் ஆண்டு வரை நீடித்தது. அந்த காலக்கட்டத்தில்தான் இந்தியாவில் ஏலக்காய், இலவங்கப்பட்டை, குங்குமப்பூ போன்ற நிறைய பொருட்கள் அதிகளவு உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டன. அதன்மூலம் ஏராளமான இனிப்பு பலகாரங்கள் செய்யப்பட்டன. அப்போது சரியாக 16ம் நூற்றாண்டு காலத்தில் அக்பர் நிர்வாகத்தின் கீழ் மசாலா பொருட்களுடன், பால் பயன்படுத்தி பல விதமான இனிப்பு பலகாரங்களை செய்ய ஆரம்பித்தனர்.
குறிப்பாக, பாலை கட்டியாக்கி, அமுக்கி உருண்டையாக, சதுரங்கமாக ( அதாவது பால்கோவா போல்) செய்யப்பட்ட பலகாரங்கள் மிகவும் பிரபலமானவையாக இருந்தன. ஆகையால், மேலும் கூடுதல் சுவையுடைய இனிப்பு பலகாரத்தை செய்ய முகலாயர்கள் முயற்சி செய்தனர். அப்போதுதான் Bake செய்து, அதில் குங்குமப்பூ மற்றும் பிஸ்தா ஆகியவற்றை பயன்படுத்தி, அதனை கூம்பாக இருக்கும் உலோகங்களில் அடைத்து வைத்து உறைய வைத்தார்கள்.
உறைய வைக்க இப்போது போல அப்போதெல்லாம் ஃப்ரிட்ஜ் இல்லைதானே? ஆகையால், அவர்கள் உறைய வைக்க பனி மற்றும் உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள். இதுகுறித்து Ain –i- Akbari, Abu’l Fazl என்பவர்கள் பாரசீக மொழியில், உப்புப்பெட்டி (பொட்டாசியம் நைட்ரேட்) பயன்படுத்தி குளிரவைக்கும் முறையை பற்றி எழுதி வைத்துள்ளனர்.
அந்த ஆவணத்தில் தான் பாரசீக மொழியில், குல்ஃபி என்று இருந்தது. குல்ஃபி என்றால், ‘மூடப்பட்ட கோப்பை’ என்று பொருளாகும். முகலாயர்கள் பாரசீக மொழி பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அப்போதிலிருந்து, இன்றைய காலம் வரை பிஸ்தா, பாதம், க்ரீம், சாக்லெட் மற்றும் ரோஜா போன்ற நிறைய ஃப்லேவர்கள் விதவிதமாகக் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
முகலாயர்களின் இந்த கண்டுபிடிப்பு சுவை மிக்கதாக இருப்பதாலே, இன்றும் குல்ஃபி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது. இப்போது தெரிகிறதா? ஏன் குல்ஃபியை வடமாநிலத்தவர்களே அதிகம் விற்கிறார்கள் என்று.