

மனிதனுக்கு ஆடைகள் வழங்கி அவனை உண்மையான நாகரிக மனிதனாக்கிய பெருமை பருத்தி செடிகளுக்குத் தான் உரியது. பருத்தியிலிருந்து நூல் நூற்ற மனிதன் ஆடைகளை நெசவு செய்து கொண்டான். குகை மனிதன் விலங்குகளைப் போலவே திரிந்து வந்தான். அவன் தன்மானத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தழைகளையும், மரவுரிகளையும் ஆடைகளாக உபயோகித்தான். எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான் பருத்தியின் உபயோகத்தை தெரிந்து கொண்டான்.
பதினெட்டாவது நூற்றாண்டு வரையில் பட்டு நூலைப் போலவும், கம்பளியைப் போலவும் பருத்தி நூல் நெசவும், கையாலேயே நடந்தது. பெரும்பாலான வெப்ப நாடுகளில் பருத்திச் செடிகளை காணலாம். பருத்திக்காய் நன்கு முற்றி நெற்றாகி வெடித்ததும் பருத்தி வெளிப்படுகிறது.
விலங்குகளின் ரோமத்தில் இருந்து நூல் நூற்பதற்கு மனிதன் எவ்வாறு கற்றுக் கொண்டான்? தற்காலத்து மனிதன் கூடைகளை முடையவும், கயிறுகளைத் தயாரிப்பதற்கும், நாணல், கோரை தோல் துண்டுகள் ஆகியவற்றை முறுக்கத் தெரிந்து கொண்டான். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே சணல் நூற்பு பழக்கத்தில் இருந்ததாக தெரிகிறது.
அதன் பின்னர் பருத்தியில் இருந்தும் நூற்கலாம் என்னும் சிந்தனை அவனுக்கு ஏற்பட்டது. பருத்தியிலிருந்து நூல் நூற்பதற்கு இந்தியாவே வழிகாட்டியது.
கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே பருத்தியையும், பருத்தி நூலில் நெசவு செய்யப்பட்ட ஆடைகளையும் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்திருக்கிறது இந்தியா. பருத்தி என்றால் என்ன என்பது பற்றியும், அதிலிருந்து நூல் நூற்று ஆடைகள் தயாரிக்க முடியும் என்பதையும் அறிந்து கொண்டிருந்தனர் நம் இந்திய மக்கள். ஐரோப்பா அநாகரிகத்தில் மூழ்கியிருந்த காலத்திற்கு முன்பே இந்தியா நாகரீகத்தில் தலைசிறந்த நாடாக விளங்கியது. இங்கு சகஜமாக நடைபெற்று வந்த பருத்தி நூல் நூற்புக்கும், நெசவுக்கும், எடுத்துக்காட்டாக பண்டைய இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்திலும் கைராட்டுகளிலும் கையாலும் நூல்நூற்றும் வந்தனர்.
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு பிறகு பிரிட்டிஷ்காரர்கள் பருத்தியின் உபயோகத்தை தெரிந்து கொண்டார்கள். லங்கா ஷயரிலும், மான்செஸ்டரிலும் ஆலைகள் உற்பத்தி செய்த துணிகளை இந்தியா மீது திணிப்பதற்கும், இந்தியாவின் புராதான நெசவுத் தொழிலை அழிப்பதற்கும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் தமது ஆதிக்கத்தை பயன்படுத்திக் கொண்டு செய்த கொடுமைகள் கணக்கில் அடங்காது.
டாக்கா மஸ்லின் துணியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். கைக்குள் அடங்கக்கூடிய மஸ்லின் துணியை நமது டாக்கா நெசவாளர்கள் தமது நுட்பமான கைத்திறனால் உற்பத்தி செய்தனர். பொறாமை காரணமாக அந்த நெசவாளர்களின் கட்டை விரல்களை வெள்ளையர் துண்டித்தனர்.
வெள்ளையர் செய்த கொடுமைகளே தேச பக்தக் கனலாக மாறி ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் எரிய ஆரம்பித்தது. அந்தக் கனலை மகாத்மா காந்தி முன் எடுத்தார். அவர் நடத்தி வெற்றி கண்ட சுதந்திர போராட்டத்தில் அந்நிய துணி எரிப்பும், கைராட்டையிலும், தக்ளியிலும் நூல் நூற்பும் முக்கியமாக இடம் பெற்றன.
அவர் ஆரம்பித்த கதர் இயக்கம் வெறும் நூலையும் துணியையும் மட்டும் சார்ந்து இருக்காமல், அந்த இயக்கம் பொருளாதார முனையில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு சிறந்த ஆயுதமாகும். சாத்வீகப் போரில் ஒரு சிறந்த தத்துவமாகவும் விளங்கியது. பருத்தியைப் பற்றியும் பருத்தி நூலைப் பற்றியும் கூறும் வரலாற்றிலே மகாத்மா காந்திக்கு முக்கியமான இடம் உண்டு என்பதை வரலாறு மறுக்க முடியாது.
பிறகு வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து வந்த நிலையில் மாறுதல் ஏற்படவில்லை. மத்திய காலத்தில் பருத்தி நூல் நூற்பு வேகம் அதிகரிக்கப்பட்டது. நூல் நூற்கும் கைராட்டை தோன்றியது. நெசவுத்தொழில் முறைகளிலும் மாறுதல் ஏற்பட்டது. வரலாற்றுக்கு முந்தின காலத்தில் இருந்து சில அடிகளே முன்னால் வைக்கப்பட்டன. இயந்திர சகாப்தம் பிறக்கவில்லை என்றாலும் தழைகளையும் மரவுரிகளையும் தரித்து வந்த மனிதனுக்கு ஆடைகளை வழங்கிய பருத்தி தாவரம் மனிதனின் மானத்தை காக்கும் தாவரம் என்று கூறுவது மிகையாகாது.