விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்து கோயில்களைக் கட்டிய நமது முன்னோர்கள்!

விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்து கோயில்களைக் கட்டிய நமது முன்னோர்கள்!

னிதனுக்கு தலைதான் பிரதானம். தலையிலிருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலின் மற்ற அங்க அவயங்களை செயல்பட வைக்கிறது. இதேமாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது. இதை மூலஸ்தானம், கர்ப்பகிரகம் என்றும் சொல்லுவார்கள். நமது உடல் பிரம்மாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாக இருக்கும். அது மாதிரிதான் ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சுமமும் தேவரகசியமும் அடங்கியுள்ளன.

வாஸ்து கணக்கின்படி, நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நமது முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர். பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒருவகை மின்னோட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோயில் கருவறை விமானக் கலசங்கள் மூலம் கருவறை மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க விரவும். எனவேதான் ஆலயங்களுக்குச் செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது இதற்காகவே நமது முன்னோர்கள் கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தைக் கடைபிடித்தனர்.

அனைத்து ஆலயங்களிலும் கருவறையின் வாசல் தவிர, மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும், கருவறை அமைப்பை ஆறு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை: அதிஷ்டம், பாதம், மஞ்சம், கண்டம், பண்டிகை, ஸ்தூபி எனப்படும். இதில் மூலவர் சிலை நிறுவப்படும் பகுதியை அதிஷ்டானம் என்பார்கள். பீடம் என்றும் சொல்வதுண்டு. கருவறையின் வெளிப்புறச் சுவரை கோஷ்டம் என்பார்கள். அவற்றில் பல்வேறு கடவுள் உருவங்கள் இடம்பெற்றிருக்கும்.

ஒரு கோயில் எந்த மூர்த்திக்கு உரியதோ அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அது மட்டுமின்றி, அந்த கருவறை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இறையருளை அள்ளித் தரும் பொக்கிஷமாக இருக்கவும் வழி வகுத்திருந்தார்கள். இந்த நடைமுறை 2000 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது ஆகம வழிபாட்டு முறைகளுக்கும் முன்பே தோன்றிவிட்டது. அந்தக் காலகட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள் தங்களது அரண்மனையை விட அருள் தரும் கோயில்கள் எப்போதும் உறுதியாக நின்று நிலை பெற்றுத் திகழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள்.

பெருங்கோயில், மாடக்கோயில், கரக்கோயில் என எட்டு விதமான கோயில்களை நமது முன்னோர்கள் கட்டினார்கள். இவற்றில் கருவறை மட்டும் சதுரம், வட்டம், முக்கோணம் எனும் மூன்று வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன. இதில் சதுர அமைப்பு தேவ உலகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் மண்ணுலகத்திலும் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன. தமிழ்நாட்டில் முக்கோண அமைப்புடன் ஆன கருவறை அமைப்பதில்லை. வட்ட வடிவ கருவறை புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களில் மட்டுமே காண முடியும் என்றாலும் மதுரை அழகர் கோயில் கருவறை வட்ட வடிவில் இருப்பது ஆச்சரியமானது. மற்றபடி தமிழக ஆலயங்களில் கருவறை சம சதுர வடிவில்தான் பெரும்பாலும் அமைந்துள்ளன.

கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும். தொன்மை வாய்ந்த ஆலயங்களில் கருவறையின் வெளிப்பகுதி கஜப்ருஷ்டம் வடிவில் இருக்கும். கஜம் என்றால் யானை. ப்ருஷ்டம் என்றால் பின்பகுதி என்று பொருள். ஆக, கருவறையின் வெளிப்புற சுவர் யானையின் பின்பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று பொருள். இத்தகைய அமைப்பை, ‘தூங்காணை மாடக்கோயில்’ என்பார்கள். அதாவது ஒரு யானை முன்னங்கால்களை முன்புறம் நீட்டியும் பின்னங்கால்களை பின்புறம் மடித்தும் படுத்திருப்பது போன்று காணப்படும் . இத்தகைய கருவறையை நம் முன்னோர்கள் சாதாரணமாக அமைத்துவிடவில்லை. கோயில் கட்டத் தேர்வு செய்யப்படும் இடத்தில் தானியங்களை விதைப்பார்கள். அந்த தானியங்கள் மூன்று நாட்களில் முளைத்து விட்டால் அது உத்தமமான இடம். ஐந்து நாட்களில் முளைத்தால் மத்திமம். ஐந்து நாட்களுக்குப் பிறகு முளைத்தால் அதமம். மத்திமம் மற்றும் அதமமான இடங்களில் கருவறை அமைக்க மாட்டார்கள். உத்தமமான இடத்தில் மட்டுமே கருவறையை அமைப்பார்கள். இதுவே பிரபஞ்ச சக்திகளை ஒன்று திரட்டித் தரும் தலமாக மாறும் என்று நம் மூதாதையர்கள் கணித்துத்தான் கோயில்களையும் கருவறைகளையும் கட்டினார்கள்.

கருவறைக்குள் வைரம், வைடூரியம், தகடுகள், கருங்கற்கள், சுட்ட கற்கள், ஆற்று மணல் போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும் இருந்தது. சுண்ணாம்பு, கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் இவற்றை கலந்து அரைத்து பூசி கருவறையை உருவாக்குவதை, ‘கர்ப்ப கிரக லட்சணம்’ என்றனர்.

கர்ப்பகிரக சதுர அளவு ஒரு தண்டம் எனப்படும். இதன் அடிப்படையில்தான் ஆலயத்தின் மற்ற பகுதி அமைப்புகள் இருக்கும். உள் பிராகாரம் ஒரு தண்ட அளவு விஸ்தாரத்துடனும், இரண்டாம் பிராகாரம் இரண்டு தண்ட விஸ்தாரத்துடனும், மூன்றாம் பிராகாரம் நான்கு தண்ட விஸ்தார அளவுடனும், நான்காம் பிராகாரம் ஏழு தண்ட விஸ்தார அளவுடனே இருத்தல் வேண்டும். இப்படி நம் முன்னோர்கள் கருவறையை பார்த்துப் பார்த்து பரிசோதித்துக் கட்டினார்கள். சங்க காலத்தில் கருவறையை நம் முன்னோர்கள், ‘திருவண்ணாழிகை’ என்று அழைத்தனர். கருவறை வலுவாக இருக்க வேண்டும் என்பதிலும் நமது முன்னோர்கள் மிகவும் கவனம் செலுத்தினார்கள். தேப்பெருமாநல்லூரில் உள்ள சிவாலய கருவறை தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது. பெரும்பாலான கருவறைகள் இப்படித்தான் கட்டப்பட்டுள்ளன. அதுபோல கருவறை வடிவமைப்பிலும் மிகுந்த நுட்பம் கடைபிடிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் ஆலய கருவறை இதயம் போன்றது. வேலூர் அருகே திருவிரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் ஆலய கருவறை ஓங்கார வடிவத்துடன் இருக்கிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய அமைப்பு ஆச்சரியப்படத்தக்கது. சந்திரகாந்த கல்லால் உருவான இந்தக் கருவறை, வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெப்பமாகவும் இருக்கும். இப்படி பல சூட்சுமங்கள் கொண்ட கருவறையை நமது முன்னோர்கள் சற்று இருட்டாகவே வைத்தனர்.

இதையும் படியுங்கள்:
சிற்பக் கலைக்கூடமாக விளங்கும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயம்!
விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்து கோயில்களைக் கட்டிய நமது முன்னோர்கள்!

அதிலும் ஒரு அறிவியல் பின்னணி உள்ளது. கருவறை விமான கலசம் மூலம் சூரிய கதிர்களின் அலை மூலவர் சிலைக்குக் கடத்தப்படும் அதேசமயம் சிலைக்கு அடியில் உள்ள யந்திரம் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களை மூலவர் சிலைக்கு கடத்தும். இதனால் கருவறையில் இறையாற்றல்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிரம்பி இருக்கும். கருவறை சற்று இருட்டாக இருந்தால்தான் அந்த இறையாற்றல் ஆலயத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவும். இந்த விஞ்ஞான உண்மையை நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால்தான் அவர்கள் ஆலய கருவறையை சற்று இருளாக இருக்கும்படி செய்தனர். அது மட்டுமின்றி, அந்த இறையாற்றல்களைப் பெற தினமும் ஆலயங்களுக்குச் செல்லும்படியும் மற்றவரை வற்புறுத்தினார்கள்.

அனைத்து இடங்களிலும் காந்த அலைகள் இருந்தாலும், கருவறையில்தான் அவை நமக்கு ஆற்றல் தரும் சக்தியாக மாறுகிறது. கருவறையில் ஒரே ஒரு விளக்கு தொங்க விட்டிருப்பார்கள் அல்லது விக்கிரகத்துக்குப் பின்னால் ஒரு செயற்கை விளக்கை ஏற்படுத்தியிருப்பார்கள். இவைதான் கருவறையில் உள்ள இறையாற்றல்களை வெளிப்பக்கத்திற்கு வரும்படி செய்கிறது. தினம் தினம் இந்த இறையாற்றல்கள் திரண்டு வெளி வருகிறது. அதனால்தான் கருவறையில் பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, எண்ணெய் என எந்தப் பொருள் கொண்டு அபிஷேகம் செய்தாலும் அவை துர்வாசத்தை ஏற்படுத்துவதில்லை. அதற்கு பதில் கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக மாறுகிறது. கருவறை நைவேத்தியங்கள் மகத்துவம் பொருந்திய மருந்தாக மாறுவதற்கு இறையாற்றலே காரணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com