வெயிலோடு விளையாடி: இலக்கியம் போற்றும் கோடைக்காலம்!

summer season
summer season
Updated on

தென்றல் காற்றுண்டு; கையில் ஏந்தும்

வண்ண மலருண்டு; கனிவு தரும்

மணம்மிக்க கனியுண்டு...”

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் இந்த அமர வரிகள், கோடை காலத்தை ஒரு சாபமாகப் பார்க்காமல், இயற்கையின் கருணையாகப் பார்க்க நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன. சுட்டெரிக்கும் வெயிலைப் பற்றிப் புலம்பும், வெறுக்கும் நாம், அதற்கு இதமாக இயற்கை வழங்கியுள்ள நிழலையும், தென்றலையும் ரசிக்க மறந்துவிடுகிறோம். சங்க இலக்கியம் முதல் சமகாலம் வரை கோடைக்காலம் எவ்விதம் கொண்டாடப்படுகிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

சங்க இலக்கியத்தில் கோடை:

சங்க இலக்கியத்தில் கோடை என்பது 'பாலை' நிலத்தின் பின்னணியில் பிரிவின் காலமாகச் சித்தரிக்கப்படுகிறது. எனினும், வேனில் காலத்தின் சிறப்புகளாகக் கொன்றை மலர்கள் பொன்னிறமாகப் பூத்துக் குலுங்குவதையும், மணல் பரப்பில் கானல் நீர் தோன்றுவதையும் புலவர்கள் அழகாக வர்ணித்துள்ளனர்.

தற்காலப் படைப்புகளில் கோடை:

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், கோடை மதியங்களின் நிசப்தத்தைப் பற்றியும், ஊர் அடங்கிய மதிய வேளையில், நிழல் தரும் பெரிய மரங்களின் அடியில் அமர்ந்து கதை பேசும் மனிதர்களையும், நுங்கு தரும் குளிர்ச்சியையும் தனது கட்டுரைகளில் வர்ணித்துள்ளார்.

வண்ணதாசனின் 'ஈரமான' வெயில்:

நவீன காலத்தின் மென்மைக் கவிஞர் வண்ணதாசன் (கல்யாண்ஜி), கோடையை வறட்சியின் அடையாளமாகப் பார்ப்பதில்லை. அவரது கதைகளில், வெயில் என்பது ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே வரும் மெல்லிய வெளிச்சம்.

தெருக்களில் ஆள் நடமாட்டம் குறைந்த வேளையில், திண்ணையில் அமர்ந்திருக்கும் ஒரு முதியவரின் தனிமை அல்லது ஒரு சிறுமியின் விளையாட்டை வெயில் ஒரு கருவியாக அளக்கும். கோடையில் ஆறு வறண்டு கிடப்பதையும், ஆங்காங்கே தேங்கியிருக்கும் சிறு குட்டை நீரில் மீன்கள் துடிப்பதையும் அவர் வர்ணிக்கும்போது, அது ஒரு அழகிய ரசனையாக மிளிரும். மண்பானைத் தண்ணீரின் மணம், மோர், தர்பூசணி ஆகியவை அவருக்கு அன்பைப் பரிமாறிக்கொள்ளும் ஊடகங்கள்.

வறட்சிக்கு இடையில் வாழ்வாதாரம்’:

திருப்பூரை சேர்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கோடை காலத்தை எதார்த்தமான வாழ்வியலோடு தொடர்புபடுத்துகிறார். நதிகள் வறண்டு கிடப்பதும், அந்த வறட்சிக்கு இடையிலும் மனிதர்கள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடுவதும் இவருடைய கதைகளில் இழையோடும். வறண்ட நிலத்தின் வெடிப்புகளில் கூட ஒருவித வாழ்வியல் அழகு இருப்பதை கதைகளில் படம் பிடித்துக் காட்டுகிறார்.

இதையும் படியுங்கள்:
வரலாற்றைப் பாதுகாக்கும் இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்: நீங்கள் அறியாத அரிய தகவல்கள்!
summer season

மேலைநாட்டு இலக்கியத்தில் கோடை:

ஆங்கில இலக்கியத்தில் கோடை என்பது மகிழ்ச்சி மற்றும் சுதந்திரத்தின் குறியீடு. வில்லியம் ஷேக்ஸ்பியர்: தனது 'Sonnet 18' கவிதையில், "Shall I compare thee to a summer’s day?" என்று கேட்கிறார். கோடையின் வெளிச்சம் உலகிற்குத் தரும் ஒளி ஈடு இணையற்றது.

ஹென்றி ஜேம்ஸ் Summer afternoon" (கோடை மதியம்) என்ற இரண்டு சொற்களே ஆங்கில மொழியின் அழகான சொற்கள் என்பார்.

டி.எச். லாரன்ஸ்: கோடை காலத்தின் வெப்பத்தை 'உயிர்ப்பின் விசை'  என்று அழைக்கிறார். செர்ரி பூக்களும் நீண்ட பகல் பொழுதுகளும் அவருக்குப் புதிய உத்வேகத்தைத் தருகின்றன.

திரையில் ஒரு காவியம்: 'வெயில்'

இலக்கியத்தைத் தாண்டி, திரையில் வசந்தபாலனின் 'வெயில்' திரைப்படம் ஒரு மைல்கல். ஜி.வி. பிரகாஷின் இசையில் வரும் "வெயிலோடு விளையாடி..." பாடல், வெயில் என்பது உழைக்கும் மக்களின் அடையாளம் என்பதைப் பெருமையோடு சொல்லும். விருதுநகர் போன்ற ஊர்களின் வெப்பத்தையும், மனித உறவுகளின் தீவிரத்தையும் இந்தப் படம் அப்படியே கண்முன் நிறுத்தியது.

வெயில் என்பது வெறும் தகிப்பு மட்டுமல்ல; அது ஒரு உணர்வு. புறத்தே வெயில் சுட்டெரித்தாலும், அகத்தே ஒரு குளிர்ந்த நீரோடையை நம் இலக்கியங்கள் ஓடவிட்டுக் கொண்டே இருக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com