

சபரிமலை ஐயப்பனின் திருவாபரணம் மிக பிரத்தியேகமான ஒன்றாகும். அது பந்தள ராஜாவினால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. சபரிமலை ஐயப்பனின் திருவாபரணங்களை போன்று வேறு எந்த இடத்திலும் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேறு ஐயப்பன் கோவில்களுக்கு திருவாபரணங்கள் இருந்தாலும் அவை சபரிமலை திருவாபரணங்களைப் போல இருக்காது.
அந்த வகையில் மகரவிளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வருகிற 12-ந் தேதி(திங்கள் கிழமை) பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்படுகிறது.
சபரிமலையில் மகர சங்க்ரமண நேரத்தில் ஐயப்பனுக்கு சார்த்துவதற்காக பந்தளம் அரண்மனையிலிருந்து திருவாபரணம் புறப்படும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கண்கொள்ளாக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகள் போதாது என்று தான் சொல்ல வேண்டும். ஆண்டுமுழுவதும் பந்தளம் அரண்மனையின் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டிருக்கும் திருவாபரணம் வருடத்தில் 5-6 நாட்களுக்குத்தான் வெளியே கொண்டு வரப்படுகிறது.
பந்தளம் அரண்மனையில், திருவாபரணத்திற்கு பூஜைகளை முடித்து சபரிமலை புறப்படுவதற்காக அரசர் உட்பட அனைவரும் காத்திருப்பார்கள்
எவ்வளவு நேரம் ஆனாலும் வானில் கருடன் வந்து திருவாபரணத்தை வட்டமிட்ட பிறகுதான் திருவாபரண யாத்திரை புறப்படும் என்பது பல ஆண்டுகளாக தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியமாகும். அப்படி கருடன் திருவாபரணத்தை வட்டமிடும் காட்சியை காண கண்கோடி வேண்டும். இந்த காட்சியை காண பல மணிநேரம் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் காத்திருப்பார்கள்.
இந்த ஆபரணப் பெட்டியை அனைவரும் சுமந்து செல்லமுடியாது. இதனை சுமப்பதற்காகவே பாரம்பரியமாகவே சில குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்களே இந்த பெட்டிகளை சுமப்பதற்காக விரதம் மேற்கொள்கிறார்கள்.
பந்தளம் அரண்மனையிலிருந்து புறப்படும் திருவாபரண ஊர்வலத்தை வழிநெடுகிலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக காத்திருந்து விளக்கேற்றி வரவேற்பது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவமாகும்.
சுமார் மூன்று நாட்கள் காட்டுவழியாக வந்து சேர்ந்த ஆபரணம் பெரியானைவட்டத்தை அடைந்து, சரங்குத்தி கடந்து, பதினெட்டாம் படியேறி, சன்னிதானம் அடைந்து, ஐயப்பனுக்கு அந்த திருவாபரணம் சார்த்தி, கண நேரம் மட்டுமே கிடைக்கும் அரிதான அந்த தரிசனத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.
ஐயப்பனுக்கு சாற்றப்படும் திருவாபரணங்கள் சுத்தமான பசுந்தங்கத்தால் ஆனவை. பன்னெடுங்காலத்துக்கு முன்பு, பந்தள மன்னனால் சபரிமலை சாஸ்தாவுக்காக செய்யப்பட்டது.
திருவாபரப்பெட்டி ஊர்வலமாக வரும் போது மொத்தம் மூன்று பெட்டிகளாக வரும்.
அவை திருவாபரணப்பெட்டி, வெள்ளிப்பெட்டி, கொடிப்பெட்டி. இதில் திருவாபரப்பெட்டி மட்டுமே ஐயப்பன் சன்னதியை அடையும். மற்ற இரண்டு பெட்டிகளும் மாளிகைப்புறத்தம்மன் சன்னதிக்கு சென்றுவிடும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பாண்டின் மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெறுவதையொட்டி, இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவாபரப்பெட்டி ஊர்வலம் வரும் 12-ம்தேதி நடைபெற தொடங்குகிறது. மகரவிளக்கு பூஜை அன்று சாமி ஐயப்பனுக்கு பாரம்பரிய வழக்கப்படி திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
12-ந் தேதி தொடங்கும் திருவாபரண ஊர்வலம் அன்று இரவு ஆயிரூர் புதியகாவு தேவி கோவிலிலும், 13-ந்தேதி லாகா வனத்துறை சத்திரத்திலும் தங்கும். பின்னர் 14-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவில் வந்து சேரும் திருவாபரணங்கள், மாலை 6 மணி அளவில் சபரிமலை சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டு 18-ம் படி வழியாக எடுத்து செல்லப்பட்டு, ஐயப்ப சாமிக்கு அணிவித்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
அப்போது சபரிமலை பொன்னம்பலமேட்டில் 3 முறை ஜோதி வடிவாய் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அந்த அரிய காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்வார்கள்.
மகர விளக்கையொட்டி கோவிலில் 19-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 20-ந்தேதி காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் தை மாத பூஜை வழிபாடுகளும் நிறைவுபெறும்.