தமிழர்களின் உணர்வோடு கலந்தது கிராமிய இசை. தொட்டில் முதல் சுடுகாடு வரை கிராமியப் பாடல்கள் பாடப்படுகின்றன. கிராமியப் பாடல்களில் பல வகை உண்டு. இறைவனுக்காகப் பாடப்படும் கிராமியப் பாடல்கள் ஒழுக்கப்பாட்டு, வேதாந்தப் பாட்டு, பழமொழிப் பாட்டு இறை வணக்கப் பாட்டு எனப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்தில் பாடப்படும் கிராமியப் பாடல்கள் நலுங்குப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு, ஆரத்திப் பாட்டு, ஊஞ்சல் பாட்டு, மசக்கைப் பாட்டு, நோன்புப் பாட்டு, சடங்குப் பாட்டு, ஒப்பாரி பாட்டு என பல வகைப்படுகிறது.
வேலை செய்யும்போது பாடப்படும் கிராமியப் பாடல்கள் தொழிற்பாட்டு, உழவுப் பாட்டு, நடவுப் பாட்டு, ஏற்றப் பாட்டு, சுண்ணாம்பு இடிப்போர் பாட்டு, தெம்மாங்குப் பாட்டு. ஓய்வுக் காலங்களில் மன உற்சாகத்திற்கு பாடும் பாட்டு புதிர் பாட்டு, கோமாளிப் பாட்டு, கும்மிப் பாட்டு, கோலாட்டம் பாட்டு எனப்படுகிறது.
சில சந்தர்ப்பங்களில் பாடப்படும் கிராமியப் பாடல்கள் மழைப் பாட்டு, பிரார்த்தனை பாட்டு, பூசாரிப் பாட்டு, புராணப் பாட்டு, விழாப் பாட்டு, சிகிச்சை பாட்டு, சுகாதார கும்மி பாட்டு ஆகியவை.
இவற்றைப் பாடப் பயன்படுத்தும் இசைக்கருவிகளாக எக்காளம், திருச்சினம், கஞ்சிரா, பூசாரி கை சிலம்பு, தவண்டை, உடுக்கை, தப்பட்டம், உருமி மேளம், பறை என பலவிதமான கருவிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. தமிழர் திருநாளாம் பொங்கலன்று இந்த இசைக்கருவிகள் கொண்டு பாடப்படும் பாடல்களும், குழுக்களும் பிரசித்தமானவை.