சிலருக்கு உள்ளங்கை சொரசொரப்பாகவும், உள்ளங் கால்கள் கடினமான தோலுடனும் வெடிப்புகளுடனும் காணப்படும். பருவநிலை மாற்றத்தால் சிலருக்கு உள்ளங்கையில் தோல் உரியும். சிலருக்கு கைகளில் வெடிப்பு உண்டாகும். அரிப்புடன் சேர்த்து உள்ளங்கை தடித்துப் போவதும், எரிச்சலும் ஏற்படும். அதேபோல் உள்ளங்கால்கள் சொரசொரப்புடனும், கடினத் தன்மையுடனும் தோல் உரிந்து வலியுடன் இருக்கும். இவற்றை சரி செய்து மினுமினுக்க வைக்கும் சில அழகு குறிப்புகளை காணலாம்.
பால் இயற்கையான மாய்சரைசராக செயல்படுகிறது. காய்ச்சாத பால் ஒரு கரண்டி அளவு எடுத்து தேன் ஒரு ஸ்பூன் கலந்து உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தடவி விடவும். 15 நிமிடங்கள் வரை ஊற விட்டு பின் கழுவ வறண்ட சருமம் மிருதுவாக மாறும்.
விட்டமின் ஈ ஆயில் அல்லது ஆலிவ் எண்ணெய்: உள்ளங்கைகளை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடங்கள் வைத்து பிறகு ஒரு காட்டன் துணி கொண்டு ஈரம் போகத் துடைக்கவும். இப்பொழுது விட்டமின் இ ஆயில் அல்லது ஆலிவ் எண்ணெயை சிறிது எடுத்து தடவி மசாஜ் செய்யவும். இந்த ஆயில் மசாஜ் நம் உள்ளங்கைகளை வறண்டு போகாமல் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளும்.
கற்றாழையில் அதன் தோலை சீவி தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற போடவும். பிறகு அதிலிருந்து நுங்கு போன்ற வெள்ளைப் பகுதியை எடுத்து கைகளில் நான்கு தேய்த்து மசாஜ் செய்யலாம். இதுவும் நம் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து வறண்டு போவதை தடுக்கும்.
ஓட்ஸை பொடித்து வெதுவெதுப்பான நீரில் கலந்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு அதில் நம் கைகளை வைத்து சிறிது நேரம் கழித்து எடுத்து கழுவி விடவும். பின் ஏதேனும் ஒரு மாய்ஸ்சரைசரை தடவி வர உள்ளங்கையில் தோல் உரிதல், தடித்து சிவந்து போகுதல் குணமாகும். அத்துடன் தினமும் அதிக அளவு தண்ணீர் பருகுவதும் நல்லது.
கடுமையான குளியல் சோப் மற்றும் டிடர்ஜென்ட் சோப்புகளை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் பாடிவாஷ் லிக்விட்களை பயன்படுத்தலாம்.
குளிர்ந்த கால நிலைகளில் வெளியே போகும் போது கையுறைகளை அணியலாம். கால்களுக்கு சாக்ஸ் போடலாம்.
உள்ளங்கால்களை வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு, சிறிது கல் உப்பு, எலுமிச்சை சாறு விட்டு இருபது நிமிடங்கள் பாதங்களை அதில் வைத்து மெல்லிய காட்டன் துணியால் துடைத்து சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வர உள்ளங்கால்கள் மென்மையாக மாறும்.
வாசலின் பெட்ரோலியம் ஜெல்லை படுக்கப் போகும் போது இரவில் உள்ளங்கால்களில் தடவி விட்டு படுக்கலாம். அதே போல் ஆலிவ் ஆயிலை சிறிது எடுத்து உள்ளங்கால்கள் இரண்டிலும் தடவி மென்மையாக மசாஜ் செய்ய நல்ல உறக்கம் வருவதுடன் தோலும் மென்மையாகும்.
குளியலுக்கு கிளிசரின் சோப்பை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பாதாம் எண்ணெயை உள்ளங்கால்களில் தடவி மசாஜ் செய்யலாம்.
கருமை படர்ந்த கணுக்காலுக்கு அரை ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறுடன் சிறிது பால் கலந்து பஞ்சு கொண்டு அந்த இடத்தை மென்மையாக தேய்த்துவர கருமை நீங்கும். நகங்களுக்கு சிறிது காய்ச்சாத பாலில் பஞ்சை முக்கி நக இடுக்குகளில் தேய்த்து வர நகங்கள் உடையாமலும், மினுமினுப்பாகவும் இருக்கும்.
சர்க்கரை ஒரு ஸ்பூன் எடுத்து அத்துடன் விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் கலந்து சிறிது எலுமிச்சம் பழச்சாறு விட்டு உள்ளங்கைகளிலும், உள்ளங்கால் களிலும் மென்மையாக தேய்த்து மசாஜ் செய்ய கடினத்தன்மை நீங்கி தோல் மிருதுவானதாகிவிடும்.