முகம் தங்கம் போல ஜொலிக்க, இது மட்டும் போதுமே!

Aavaram flower face pack
Aavaram flower face pack
Updated on

சந்தைகளில் அதிக கெமிக்கல் நிறைந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக நம் முன்னோர்களின் இந்த ஐடியாவே நன்றாகத்தான் இருக்கிறது. அட ஆமாங்க! சருமம் மென்மையாக ஜொலிப்பாக இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. அதற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரே ஒரு பூ போதும். அதுதான் ஆவாரம்பூ.

ஆவாரம்பூ மிக சிறந்த மூலிகைகளில் ஒன்று. இதில் கொட்டி கிடைக்கிறது அத்தனை நன்மைகள். இதை பற்றி தெரிந்துக் கொண்டு நாம் பயன்படுத்தினாலே நம்முடைய முகமும் கண்டிப்பாக ஜொலிக்கும். இதை எப்படி பயன்படுத்த வேண்டும்? இதில் உள்ள நண்மைகள் என்ன என்பதை இங்கு தெளிவாக பார்க்கலாம்.

ஆவாரை இருக்க சாவார் உண்டோ என்ற பழமொழிக் கேற்ப, ஆவாரம்பூ நம் உடலிற்கு அதிக நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். மேலும் இதை சருமத்திற்கு பயன்படுத்துவதினால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. அதனால்தான் ஆவாரம்பூ பற்றி தெரிந்தவர்கள் இதை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

இந்த ஆவாரம்பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, வெதுவெதுப்பான நீரில் சேர்த்து தேனுடன் கலந்து மூலிகை தேநீராக்கி குடிக்கலாம். இது நல்ல மலமிளக்கியாக செயல்படும் எனவும் ஆவாரம் பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலுக்கு உதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஆவாரம் பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு தேய்த்து வர முடிக்கு சிறந்த பயன் கிடைக்குமாம்.   

அதேபோல் இதை ஃபேஸ்பேக் முறையில் பயன்படுத்தலாம். இது நம் முகத்திற்கு அதிக பொலிவையும், இளமைத் தோற்றத்தையும் கொடுக்குமாம்.

பொதுவாகவே ஆவாரம்பூ டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அதிகமாக கிடைக்கும். இந்த பூவை பறித்து நன்கு காய வைத்து பொடியாக அரைத்து சருமத்திற்கு பயன்படுத்தலாம். பூ கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் ஆவாரம்பூ பொடியாகவே வாங்கிப் பயன்படுத்தலாம்.

சருமத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும்?

பூக்களாக கிடைக்கும் பட்சத்தில் 15 ஆவாரம் பூக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பொடியாக என்றால், ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, 1/4 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்த்து சிறிது பன்னீர் ஊற்றி நன்றாக பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து ஃபேஸ்பேக்காக பயன்படுத்தலாம்.

இதை பயன்படுத்துவதற்கு முன்பு, முகத்தை நன்கு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஃபேஸ்பேக்கை 15 நிமிடங்கள் முகத்தில் வைத்திருந்தால் போதுமானது என்றே கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஃபேஸ்பேக்கை நீண்ட நேரம் முகத்தில் வைத்திருப்பீர்களா? போச்சு!
Aavaram flower face pack

மேலும் இந்த ஆவாரம்பூ பொடியை நாம் குளிக்கும் போது பாசிப்பயிறு, கடலைமாவுடன் சேர்த்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம்.

ஆவாரம்பூ ஃபேஸ்பேக்கின் நன்மைகள்

  • இந்த ஃபேஸ்பேக்கை நாம் வாரத்தில் மூன்று நாட்கள் பயன்படுத்தினோம் என்றால், நம் முகத்தில் இருக்கக்கூடிய பிக்மென்டேஷன் அனைத்தும் குறைய ஆரம்பிக்கும்.

  • கழுத்தில் இருக்கக்கூடிய கருமைகள் படிப்படியாக நீங்கும்.

  • அது மட்டும் அல்லாமல் அதிகப்படியாக எண்ணெய் சுரப்பதும் குறைய ஆரம்பிக்கும் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பு: எந்த ஒரு பொருளையும் சருமத்திற்கு பயன்படுத்தும் முன் நம் கையில் அதை பயன்படுத்தி சோதனை செய்வது அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com