உங்கள் கூந்தலை கலரிங் செய்யும்போது காது மடல்களிலோ அல்லது நெத்தியிலே, பின்கழுத்துப் பகுதியிலோ தெரியாமல் சாயம் படலாம். இது யாரும் தெரிந்து செய்யக்கூடியது அல்ல. ஆனால், எவ்வளவு பெரிய பியூட்டிஷியன் என்றாலும் சில சமயங்களில் இதுபோன்ற தவறுகள் நேர்வது சகஜம்தான். அதேபோல் வீட்டில் நீங்களாகவே உங்கள் கூந்தலுக்கு கலரிங் செய்யும்போது எவ்வளவு கவனத்துடன் செய்தாலும் சருமத்தில் சாயம் பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த சாயத்தைப் போக்க மிக எளிதான வழிகள் உள்ளன.
அந்த முறைகளை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
கூந்தலில் சாயம் பூசிக்கொண்டிருக்கும்பொழுதே சருமத்தில் சாயம் படிந்துவிட்டது என்றால், உடனே துணியில் தண்ணீர் நனைத்து சாயம் இருக்கும் இடத்தில் தேய்த்து அதனைப் போக்கிவிடலாம்.
இதுவே நீங்கள் அப்போது பார்க்காமல் சிறிது நேரம் கழித்துப் பார்த்தீர்கள் என்றால் கீழுள்ள முறைகளைப் பின்பற்றுங்கள்.
பெட்ரோலியம் ஜெல்லி:
கலரிங் செய்வதற்கு முன்னர் இந்த பெட்ரோலியம் ஜெல்லி மற்றும் சாயம் தடுக்கும் கிரீம்களை சருமத்தில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக கழுத்து, காது, தலைமுடி முடியும் இடங்களில் பயன்படுத்த வேண்டும். இதனால் நீங்கள் கூந்தலுக்கு கலரிங் செய்து முடித்தப்பிறகும் ஈரத்துணியால் துடைத்தால் எளிதாக சாயம் நீங்கிவிடும்.
சோப்:
இது எளிதான முறை என்றாலும் சாயம் முழுவதுமாக செல்ல சிறிது நேரம் எடுக்கும். லிக்வீட் சோப்பு அல்லது நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் சோப்பும்கூட இதற்கு பயன்படுத்தலாம். சாயம் பட்ட இடத்தில் சற்று நனைத்துவிட்டு சோப்பு பயன்படுத்தி தேய்க்க வேண்டும். சாயம் போகும் வரை அதனைப் பயன்படுத்த வேண்டும்.
பற்பசை (Toothpaste):
பற்பசையில் சாயம் போக்குவதற்கான பண்புகள் உள்ளன.
ஆகையால் சாயம் பட்ட இடத்தில் பற்பசைத் தடவி நன்றாக தேய்த்து
சுடுநீரில் கழுவினால் சாயம் இடந்த இடமே தெரியாமல் மாறிவிடும்.
லெமன் மற்றும் பேக்கிங் சோடா:
லெமன் சாறில் உள்ள அமிலத்தன்மையும் பேக்கிங் சோடாவில் உள்ள இயற்கைப் பண்புகளும் சேர்ந்தால் சாயத்தை நீக்கிவிடலாம்.
லெமன் சாறு மற்றும் பேக்கிங் சோடாவை சமமாக எடுத்து பேஸ்ட் போன்று தயாரித்துக்கொள்ளவும். பின் அதனை சாயம்பட்ட பகுதியில் தேய்த்து ஒரு நிமிடம் ஊறவைத்த பிறகு சுடுநீரில் கழுவினால் சாயம் முழுதும் நீக்கப்படும்.
மேக்கப் ரிமூவர்:
மேக்கப் ரிமூவர் மற்றும் நகப்பாலிஷ் ரிமூவர் ஆகியவை பயன்படுத்தி சருமத்தில் படியும் சாயத்தைப் போக்கலாம்.
ஒரு காட்டன் துணி அல்லது பஞ்சில் ரிமூவர் வைத்து சருமத்தில் படிந்த சாயத்தின் மேல் தேய்க்க, சாயம் நீங்கிவிடும். ஆனால் அந்த இடம் உலர்ந்து காணப்படும். ஆகையால் இது பயன்படுத்தியவுடன் Moisturizer பயன்படுத்துவது அவசியம்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் அல்லது குழந்தைகளுக்கான எண்ணெய்யை பயன்படுத்தி சாயத்தைப் போக்கலாம். ஒரு காட்டன் துணியில் எண்ணெய் வைத்து அந்த இடத்தில் தேய்த்தால் சாயம் கரைந்து அந்த இடத்தை விட்டு நீங்கிவிடும். பின் சுடுநீரில் கழுவி, Cleanser மற்றும் Moisturizer பயன்படுத்துவது அந்த இடத்தை உலராமல் வைத்துக்கொள்ளும்.