பட்டு சேலைக்கு காஞ்சிபுரம் என்றால்... வெண்பட்டு வேஷ்டிக்கு எந்த ஊர் தெரியும?

பட்டு சேலைக்கு காஞ்சிபுரம் என்றால்... வெண்பட்டு வேஷ்டிக்கு எந்த ஊர் தெரியும?

ந்தியா மட்டுமின்றி அயல் நாடுகளிலும் சேலத்தில் நெய்யப்படும் ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பெண்களுக்கு வண்ண வண்ண பட்டுச்சேலைகள் என்றால் ஆண்களுக்கு தூய்மையான வெண்ணிறப் பட்டு வேட்டிகள் இங்கு உருவாகிறது. தமிழகத்திலேயே சேலத்தில்தான் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம் ஆகியவைகள் அதிக அளவில் நெய்யப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை, ஈரோடு, காங்கேயம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டு வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் கைகளினால் நெய்யப்படும் கைத்தறி வெண்பட்டுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு.

சேலத்திலும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளான அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, வலசையூர், சிங்கமெத்தை , ஆட்டையாம்பட்டி, நங்கவள்ளி, இளம்பிள்ளை, மல்லூர், தாரமங்கலம்,ஜலகண்டாபுரம் பகுதிகளில் உள்ள நெசவாளர்களால் வெண்பட்டு வேட்டிகளை அதிகளவில் உற்பத்தி செய்கிறார்கள்.

தரமுள்ள இவைகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களுக்கும் தவிர மலேசியா ,சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா ஆஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தனை சிறப்பு மிக்க சேலம் வெண்பட்டுக்கு பூவிசார் குறியீடு வழங்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக ஒன்றிய அரசுக்கு கோரிக்கை  விடுத்த நெசவாளர்களின் கருத்தை பரிசீலித்த மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் வெண்பட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கி பெருமை சேர்த்தது.

GI FOR SALEM HANDLOOM SILK
GI FOR SALEM HANDLOOM SILK Editor 1

இதில் போலியான தரமற்ற நூல்கள் கொண்டு நெய்யப்பட்டு மலிவு விலையிலும் வெண்பட்டு வேட்டிகள் கடைகளில் விற்பனைக்கு உள்ளது. இதைத் தடுக்கும் விதமாக சேலம் வெண்பட்டுக்கு இந்திய அரசின் கைத்தறி முத்திரையை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதை ஏற்ற அரசு தற்போது வெண்பட்டு உற்பத்தியாளர்கள் இந்திய அரசின் கைத்தறி முத்திரை பட்டு முத்திரையை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்ததுடன் சில விதிமுறைகளையும் விதித்துள்ளது.

அதாவது இந்த முத்திரைகளை பயன்படுத்துவதற்கு இந்திய அரசின் கைத்தறித்துறை மூலம் விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு  சான்றிதழுடன் ஒரு எண் வழங்கப்படும். பின் பார்கோடு சான்றிதழ் உள்ளிட்டவைகளை கொண்டு தாங்கள் உற்பத்தி செய்த வெண்பட்டில் இந்திய அரசின் கைத்தறி முத்திரையை அவர்கள் பயன்படுத்தலாம். இதுபோன்ற முத்திரையிடப்பட்ட வெண்பட்டில் பார்கோடு சான்றிதழ் என்னை சரிபார்க்கும் போது அந்த வேஷ்டி எப்போது , எங்கு ,யாரால் உற்பத்தி செய்யப்பட்டது போன்ற அனைத்து விபரங்களும் வந்துவிடும்.

national handloom logo
national handloom logo

மேலும் போலியாக வெண்பட்டை உற்பத்தி செய்து இந்த முத்திரைகளை பயன்படுத்தி விற்பனைக்கு அனுப்பினால் அந்த விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். இந்த உத்தரவினால் போலிகள் குறைந்து தரமான வெண்பட்டு நெய்யும் நெசவாளர்கள் பயன் பெறுவார்கள் என்பதால் சேலம் வெண்பட்டு உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்களை  மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com