சிரிக்கும்போது சிலருக்கு கன்னத்தில் அழகாக குழி விழுவதைப் பார்த்திருப்போம். இது ஒருவருக்கு மரபுவழி வருவதாகும்.
சிலருக்கு ஒரு கன்னத்திலும் இன்னும் சிலருக்கு இரண்டு கன்னத்திலுமே குழிவிழும். இது பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கும்.
பெண்களை விட ஆண்களுக்கு கன்னத்தில் குழி விழுவது மிகவும் அழகாக இருக்கும். இப்படி கன்னத்தில் குழி விழுவது அதிர்ஷ்டம் என்று கூட சொல்வார்கள்.
இது எதனால் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்?
கன்னக்குழி ஏற்படுவதற்கு காரணம் கன்னத்தில் உள்ள தசையில் ஏற்படும் குறைப்பாடேயாகும். நம் கன்னத்தில் ஸிக்கோமேட்டிக்கஸ் மேஜர் என்ற தசையுள்ளது. இந்த தசை இரு துண்டுகளாக பிரிவதாலேயே கன்னக்குழி ஏற்படுகிறது.
உலகத்தில் 20-30% மக்களுக்கே கன்னத்தில் குழி விழுகிறது. அதனால் இது ஒரு அரிதான விஷயமாகவே கருதப்படுகிறது. அத்துடன் இது அழகு, இளமை, அதிர்ஷ்டம் தருவதாக பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்.
கன்னக்குழியை செயற்கையாக செய்து கொள்ள டிம்பிள் பிலாஸ்டி சர்ஜரிகள் உள்ளது. இதை செய்து முடிக்க குறைந்தது 30 நிமிடங்கள் ஆகும். இந்தியாவில் இந்த சர்ஜரியை செய்வதற்கு குறைந்தது ரூபாய் 35,000 முதல் ரூபாய் 60,000 வரை பெறப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சை செய்வதால் பெரிதாக வலி ஏற்படாவிட்டாலும் அறுவை சிகிச்சை செய்த இடம் சற்று வீக்கத்துடன் காணப்படும். அது நாளடைவில் சரியாகி விடும். இது ஒரு பாதுகாப்பான அறுவை சிகிச்சையாகவே கருதப்படுகிறது.
அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலரும் இந்த சிகிச்சையை விரும்பி செய்து கொள்கிறார்கள். சமீப காலமாக இந்த அறுவை சிகிச்சை உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.