

குளியலறைகள் கட்டப்படும் முன்பே சோப் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால், பரவலாக பயன்பாட்டிற்கு வந்தது பல ஆண்டு காலம் கழித்து தான். ஆரம்பத்தில் எண்ணெய் மற்றும் மணலை கலந்து தேய்த்து குளித்து வந்தனர். சிலர் வேலையாட்களை வைத்து மரக்கிளைகளால் உடலைத் தேய்த்துவிடக்கூறி குளித்தனர்.
சோப் சுமார் 4,800 ஆண்டுகளுக்கு முன் (கி.மு. 2800) பாபிலோனியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது விலங்கு கொழுப்பு மற்றும் கார உப்புக்கலவையால் ஆனது. ஆரம்பத்தில் மருத்துவ சிகிச்சை மற்றும் துணி துவைக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட சோப்பு, பின்னர் உலகெங்கிலும் தனிநபர் சுகாதாரத்திற்கு உபயோகமானது.
"சோப்" என்ற சொல் லத்தீன் வார்த்தையான 'sapo' என்பதிலிருந்து உருவானது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை சோப்பு ஒரு சொகுசுப் பொருளாகக் கருதப்பட்டு, பல நாடுகளில் அதற்குக் கடுமையான வரி விதிக்கப்பட்டது.
ப்ராக்டர் அண்ட் கேம்பிள் என்ற நிறுவனம் போர் வீரர்களுக்குத்தான் முதலில் சோப்பை வழங்கியது, பின்னர் அவர்கள் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிந்துரைத்தனர். விரைவில், அது வீட்டுப் பொருளாக மாறியது. அதன் பிறகு பல வகையான சோப்கள் வந்தது. ஆனால், சோப்புகளில் குறிப்பிடத்தக்கது 1789 ம் ஆண்டு ஆண்ட்ரூ பியர்ஸ் கண்டுபிடித்த, கண்ணாடி போன்ற சோப்தான்.
நாம் பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்று சோப். குறைந்தது 50 ரூபாயிலிருந்து 100 வரை விலைகளை கொண்டிருக்கும் என கேள்விப் பட்டிருப்போம். ஆனால் ஒரு சோப்பின் விலை லட்சங்களில் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம் தங்கம் மற்றும் வைரத்தால் ஆன இந்த சோப்பின் விலை மட்டும் 2 லட்ச ரூபாயாம்.
உலகின் மிக விலையுயர்ந்த சோப் லெபனானின் திரிபோலியில் (Tripoli) தயாரிக்கப்படுகிறது. இந்த சோப்பை அந்நாட்டின் பேடர் ஹாசன் & சன்ஸ் (Bader Hassen & Sons) நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சோப்புக்கு 'தி கான் அல் சபௌன்' (Khan Al Saboun) என்று பெயரிடப்பட்டுள்ளது. சோப்பின் விலை 2800 டாலராகும் அதாவது நம்மூரில் 2,32,400 ரூபாயாகும்.
மேலும், இது அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் இயற்கை வாசனை திரவியங்களுடன் தயாரிக்கப் படுகிறது. கூடுதலாக, நிறுவனம் பல்வேறு உயர்தர சோப்புகள் மற்றும் கிரீம்களை உற்பத்தி செய்கிறது என்றும் கூறப்படுகிறது. பதர் ஹாசன் & சன்ஸ் நிறுவனத்தின் தகவலின்படி, மிகவும் விலையுயர்ந்த இந்த சோப்பு பாரானது தங்கம் மற்றும் வைரப் பொடியைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் இது மிகவும் விலை உயர்ந்ததாகும்.
'கான் அல் சபூன்' சோப் என்பது லெபனானை தளமாகக் கொண்ட, 1480-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் உலக புகழ்பெற்ற நிறுவனத்தால் இயற்கையான நறுமண பொருட்களை கொண்டு தயாராகிறது என கூறப் படுகிறது. இது ஆடம்பர சோப்பு தயாரிப்பு நிறுவனமாகும். இது மூலிகை பொருட்கள், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி, தோல் பராமரிப்புக்கு ஏற்ற, குறிப்பாக 'மணப்பெண் சோப்பு' (Bride's Soap) போன்ற சிறப்பு தயாரிப்புகளை வழங்கி, உலகளவில் பெயர் பெற்று வருகிறது.
இந்த சோப்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உள்ள சிறப்பு கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும், நிறுவனத்தின் மிகவும் விலையுயர்ந்த சோப்பானது மிக முக்கியமான நபர்களுக்கும் (VIPகள்) மற்றும் நெருங்கிய விருந்தினர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சோப் 2013இல் முதன்முதலில் தயாரிக்கப்பட்டு, கத்தாரில் உள்ள பெண்மணி ஒருவருக்கு பரிசாக வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015ஆம் ஆண்டில், பிபிசி செய்தி நிறுவனம், உலகின் மிக விலையுயர்ந்த சோப்பை பற்றி முதன்முதலில் செய்தி வெளியிட்டது. தங்கம் மற்றும் வைரத் தூள் காரணமாக இந்த சோப்பானது கரடுமுரடான அமைப்பைக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தங்க மற்றும் வைர பொடிகளை கொண்டு உருவாக்கப்படும் சோப் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது என்றும், மேலும், இதை பயன்படுத்தும்போது அது மகிழ்ச்சியைத் தரும் என்றும் மேலும், இந்த சோப்பு ஆன்மீக சக்தியை மேம்படுத்துவதோடு, மன அமைதியையும் தருவதாகவும் பிபிசிக்கு அளித்த பேட்டியில் அந்த நிறுவன நிர்வாக அதிகாரி (CEO) ஆமிர் ஹாசன் தெளிவுபடுத்தினார். இந்த வகை சோப் தயாரிக்க குறைந்தது ஆறு மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.