

பெண்கள் தலைவாரி பின்னலிட்டு பூச்சூடிக் கொண்டால் அதன் அழகே தனிதான். அளவாகவோ, அதிகமாகவோ பூச்சூடிக் கொண்டால் மங்களகரமான தோற்றத்தில் காட்சி தருவார்கள். இப்படி பூ சூடிக்கொள்ளும்போது சில வழிமுறைகளை கையாண்டால் ,சாதாரண அழகும் பேரழகாக மாறும்.
பின்னல் ஜடை
பின்னல் இட்டு ஜடையை தொங்க விட்டுக்கொண்டால் குள்ளமான உடற்கட்டை கொண்ட, பெண்கள் நல்ல அடர்த்தியான மலர் சரத்தை சூடிக்கொண்டால் மிக அழகாக இருக்கும். பின்னலில் ஒவ்வொரு மடிப்பிலும் சிறிய ரோஜா மொட்டுகளை அல்லது கனகாம்பரம் செருகலாம். மல்லிகை, முல்லை மலர்களை சரமாக கோர்த்து சூடிக்கொண்டால் பாந்தமாகவும், பாரம்பரியமான அழகான தோற்றத்தைத் தரும்.
தலைமுடி தொங்கவிடுதல்
உயரமான பெண்கள் தலைமுடியை தொங்கவிட்டு, எந்தவிதமான மலராக ஆனாலும் ,குறைவான அளவில் சூடிக் கொண்டாலே போதும் அழகாக இருக்கும். இரட்டை இலைகளுடன் கூடிய ஒற்றை ரோஜா மலரை அணிந்தால் உயரமாக உள்ள பெண்களுக்கு கவர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கும்.
பன் கொண்டை
பன் கொண்டை போட்டுக்கொள்ளும் பெண்கள் கொண்டையை சுற்றி மல்லிகை பூச்சரத்தை சுற்றிக்கொண்டால் எழிலான தோற்றத்தை அளிக்கும்.
ரிங் கொண்டை
ரிங் எனப்படும் வளையம் வைத்து அமைத்துக்கொள்ளும் கொண்டைக்கு, பிறைச்சந்திர வடிவில் மேற்புறமாக மலர்ச்சரத்தை சூடிக்கொண்டால் அழகாக இருக்கும்.
உயரமான கொண்டை
உயரமான கொண்டை போட்டுக்கொண்டால் எடுப்பான வண்ணங்களில் பெரிய பெரிய பூக்களை பட்டையாக தொடுத்து சரமாக்கி கொண்டையைச் சுற்றி அணிந்து கொண்டால் எடுப்பான தோற்றம் அளிக்கும். பிளாஸ்டிக் மணிகளால் தயார் செய்யப்பட்ட சரத்தை கொண்டையின் நடுவில் தொங்க விட்டுக்கொண்டாலும், அழகாகவும், அம்சமாகவும் இருக்கும். உடுத்தும் உடைக்கேற்ற வண்ணத்தில் மணியை தேர்ந்தெடுத்து அணிந்தால் மேலும் அழகுக்கு அழகாகத் தெரியும்.
வட்ட கொண்டை
வட்ட வடிவமான கொண்டை போட்டுக் கொள்பவர்கள் வட்டமான மலர்ச்சரம் அணிவதோடு, கொண்டையின் நடுவில் ஏதாவது ஒரு அழகு பொருளையோ, மலைரையோ ஆபரணத்தையோ அணிந்தால் சிறப்பாக இருக்கும்.
பக்கவாட்டு அலங்காரம்
கூந்தலை ஒரு பக்கமாக பின்னி அல்லது ஒதுக்கி காதின் அருகில் அல்லதுகொண்டை ஓரத்தில் பெரிய மலர்களை சூடினால் முகம் பொலிவாக தெரிய உதவும்.
இயற்கை மலர்களைப் போன்றே மல்லிகை, முல்லை போன்ற பிளாஸ்டிக்கினால் செயற்கை மலர்களை வாங்கி சூடிக்கொண்டாலும், புத்தம் புது மலர்களைப் போன்றே தோற்றமளிக்கும்.
பூக்கள் கூந்தலிலிருந்து நழுவாமல் இருக்க தலை முடியில் பூச்சூடும் ஊசிகளை சரியாக பயன்படுத்தினால் பூ கீழே விழாது. பூக்கள் நீண்ட நேரம் வாடாமல் இருக்க அவ்வப்போது தண்ணீர் தெளித்து வைத்துக்கொள்ளலாம்.
மலர்களை தலையில் சூடிக்கொள்வதுபோல பட்டு துணிகளிலும் வண்ணம் இல்லாத துணிகளிலும் தயார் செய்து விற்கப்படுகிறது. வண்ணத்துணிப் பூக்களையும் அணிந்து கொண்டாலும் பேரழகாக தெரியும். அணிந்துகொள்ளும் ஆடைகளுக்கு ஏற்ப செயற்கைப் பூக்களை அணிந்துகொண்டாலும் கூந்தல் எழிலாக காட்சி தரும்.