சமீப காலமாகவே ஐஸ் வாட்டர் பேசியல் என்பது பிரபலமடைந்து வருகிறது. இந்த எளிய மற்றும் பயனுள்ள முறையால் சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்கிறது. மேக்கப் போடுவதற்கு முன் ஐஸ் வாட்டர் பேசியல் செய்தால், மேக்கப் நீண்ட நேரம் அப்படியே இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் பதிவில் ஐஸ் வாட்டர் பேசியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Ice Water Facial:
ஐஸ் வாட்டர் பேசியல் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அதில் நீரை சேர்க்க வேண்டும். ஐஸ் கட்டிகள் மொத்தமாக உருகியதும், முகத்தை அதன் உள்ளே வைத்து சில நொடிகள் கழித்து வெளியே எடுக்க வேண்டும். இப்படியே மீண்டும் மீண்டும் பலமுறை செய்தால் சருமத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.
முகத்தில் உள்ள துளைகள் இறுகும்: ஐஸ் வாட்டர் பேசியல் செய்வதால் முகத்தில் உள்ள துளைகள் இறுகி அவற்றில் அழுக்கு படிவது குறையும். ஐஸ் வாட்டரின் குளிர்ச்சியால் முகத்தின் இரத்த நாளங்கள் சுருங்கி முகத்தில் உள்ள துளைகளைக் குறைக்கிறது. இது முகத்திற்கு மென்மையான மற்றும் இயற்கை பளபளப்பைக் கொடுக்கிறது.
வீக்கத்தைக் குறைக்கும்: சிலருக்கு காலையில் எழும்போது முகம் வீங்கி இருக்கும். அது ஏதேனும் முக அழற்சி பாதிப்பாக இருக்கலாம். எனவே அச்சமயத்தில் ஐஸ் வாட்டர் பேசியல் செய்தால், முகத்தின் ரத்த நாளங்கள் சுருங்கி அதிகமாக சேர்ந்திருக்கும் திரவத்தைக் குறைத்து வீக்கம் குறைய உதவும். இதன் மூலமாக கண்ணுக்கு கீழே இருக்கும் வீக்கம், எரிச்சலூட்டும் சருமம், சைனஸ் அழுத்தம் போன்ற பாதிப்புகளும் குறையும்.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது: ஐஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தை கழுவும்போது முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் தோல் செல்களுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதால், ஆரோக்கியமான ஒளிரும் சருமத்தை நீங்கள் அடையலாம். மேம்படுத்தப்பட்ட ரத்த ஓட்டம் முகத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை அகற்ற உதவுகிறது. இதனால் எப்போதும் இளமைத் தோற்றம் கிடைக்கும்.
உறிஞ்சுதலை அதிகரிக்கும்: தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதற்கு முன் ஐஸ் வாட்டர் பேசியல் செய்வதால் அவற்றின் செயல்திறன் மேம்படும். குளிர்ந்த நீர் முகத் துளைகளை சுருக்குவதால், முகத்திற்கு பயன்படுத்தும் பொருட்கள் விரைவில் ஆவியாகாமல், அதன் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் அதிகரிக்கும்.
இயற்கையான பளபளப்பு: முகத்தை ஐஸ் வாட்டர் பயன்படுத்தி கழுவும்போது அந்த உணர்வு உங்களுக்கு அதிக புத்துணர்ச்சியைக் கொடுக்கும். மேலும் முகத்தின் சென்சிட்டிவ் விஷயங்களைத் தூண்டி சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்க உதவும்.