திரிபலா பொடி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும் ஒரு ஆயுர்வேத மருந்தாகும். இதை தினமும் ஒரு ஸ்பூன் உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் நீங்கி உடல் எடை குறைவது சர்க்கரை நோய் கட்டுக்குள் இருப்பது போன்ற பயன்கள் உண்டாகும். அத்துடன் இது சரும அழகுக்கும் தலைமுடி ஆரோக்கியத்திற்கும் மிகவும் உகந்தது. அதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
திரிபலா பொடி ஃபேஸ் மாஸ்க்:
இரண்டு ஸ்பூன் திரிபலா பொடியைத் தேவையான அளவு தண்ணீர் கொண்டு கலக்கி முகத்தில் தடவவும். ஓரளவு உலர்ந்ததும் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம். வாரத்தில் இரு முறை இதுபோல ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் பளபளக்கும்.
சிறிதளவு திரிபலாப் பொடியை தண்ணீரில் கலந்து கண்களுக்கு கீழே தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் நீங்கிவிடும்.
திரிபலாப் பொடியின் நன்மைகள்;
இந்தப் பொடி சருமத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. ஈரப்பதமூட்டி மென்மையாக்குகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற சேர்மங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அழிக்கிறது. முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கிறது. வறண்ட சருமத்தின் தன்மையை மாற்றி ஈரப்பதம் மிக்க சருமமாக மாற்றுகிறது.
தலைமுடிக்கு திரிபலா பொடி ஹேர் மாஸ்க்;
திரிபலாப்பொடியை தினமும் சிறிதளவு உட்கொண்டு வந்தாலே தலைமுடி உதிர்தலில் இருந்து காக்கும். இதனை ஹேர் மாஸ்காகவும் பயன்படுத்தலாம் . இது முடி வளர்ச்சியை தூண்டி பொடுகை அழிக்கிறது. வறண்ட தலை முடியை பளபளக்கும் கேசமாக மாற்றுகிறது.
பயன்படுத்தும் விதம்;
இரண்டு ஸ்பூன் திரிபலா பொடியைத் தண்ணீருடன் கலந்து பேஸ்ட் போல செய்து உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரத்திற்கு பிறகு முடியை அலசவும்.
திரிபலா பொடியைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலை முழுவதும் மற்றும் தலைமுடியில் நன்கு தடவவும். ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு கழுவவும். வாரம் இரண்டு முறை இதை தேய்த்து குளித்தால் முடி உதிர்தல் நின்று பொடுகுத் தொல்லை நீங்கி ஆரோக்கியமான கூந்தல் உருவாகும்.