
அடுத்த நாள் காலையில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமெனில், இரவு நேரத்தில் உங்கள் முகத்தை நீங்கள் பராமரித்தே ஆகவேண்டும். காலை நேரத்தில் நமது சருமமானது அதிக மேக்கப், வெப்பம், தூசு போன்றவற்றால் பாதிப்படைகிறது. இதை இரவு நேரத்தில் பராமரிப்பதன் மூலம் சருமம் அதிகம் சேதமடைவதை தடுக்கலாம்.
முதலில் முகத்தில் இருக்கும் மேக்கப்பை கலைக்க வேண்டும். பின் கட்டாயம் முகத்தை நன்றாக கழுவவேண்டும். வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுவது நல்லது. அப்படி கழுவும்போது முகத்தை அழுத்தித் தேய்த்தல் கூடாது. அவ்வாறு தேய்க்கும்போது முகத்தில் உள்ள எண்ணெய்பசை தன்மை வெளியேறிவிடும். இதனால் பருக்கள் வரும் வாய்ப்பு அதிகம்.
முகத்தை கழுவுவதால் சருமத்தில் உள்ள துவாரங்கள் திறப்பதுடன், அதில் உள்ள அழுக்குகளும் நீங்குகின்றன. தூங்கச்செல்லும் முன், சில துளிகள் பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இது சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ளும்.
உதட்டிற்கு வெண்ணெய் தடவிக் கொள்ளலாம். இது ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். இதில் மிக முக்கியமானது தலையணை உறை. தலையணை உறையை வாரத்தில் ஒருமுறையேனும் மாற்றிவிட வேண்டும். தலையணை உறை சுத்தமில்லாமல் இருந்தாலும், முகத்தில் பருக்கள் வரும். ஆகையால் தலையணை உறையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய் பசை முகம்... பளிச்சென்று மாற... உங்களுக்கான டிப்ஸ்..!
தயிர், கடலைமாவு, எலுமிச்சைசாறு ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி சிறிதுநேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.
வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம்.
தக்காளி பழச்சாற்றை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அடிக்கடி முகம் கழுவவேண்டும். முகத்தை கழுவ சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால் எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்.
மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.
சிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு, அந்நீரை குளிர வைத்து, பின் அதனை காட்டன் துணியைக் பயன்படுத்தி முகத்தைத் துடைக்கலாம். இதுவும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும். ஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்துவர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுவதோடு சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசையைக் தடுக்கலாம்.
வெள்ளரிச்சாற்றுடன் பால் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும். கரும்புள்ளிகள் நீங்க குப்பைமேனி கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்து வரவேண்டும். ஒரு மாதத்திற்கு இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும், அழகுகூடும்.