முகத்தில் பருக்கள், சிறு சிறு கொப்புளங்கள், தழும்புகள், அரிப்பு ஆகியவற்றிற்கு ஒரே தீர்வு என்றால் அது தேயிலை மர எண்ணெய்தான். மேலும், இது நகங்களைச் சுத்தம் செய்யவும், தலையில் உள்ள பொடுகு ஆகியவற்றை நீக்கவும் உதவுகிறது.
2012ம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வில் 5 சதவீதம் கொண்ட ஒரு தேயிலை மரக் கிரீம் 24 பேருக்குப் பயன்படுத்தினார்கள். அதில் 16 பேர் தங்கள் அரிப்பு முற்றிலும் நீங்கியது என்று கூறினார்கள். மீதமுள்ள 8 பேர் அரிப்பு குறைந்ததாகக் கூறினார்கள். இதன்மூலம் தேயிலை மர எண்ணெய் அரிப்பைக் குறைக்கிறது என்பதை உறுதிப் படுத்தியுள்ளனர். மேலும், கருவளையம், தழும்பு, பருக்கள் ஆகியவற்றையும் சரி செய்கிறது என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஆனால், எண்ணெயை நேரடியாகவோ, அதிகமாகவோ பயன்படுத்தக்கூடாது. தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்துவதற்கென சில வழிமுறைகள் உள்ளன.
தேயிலை மர எண்ணெய் பயன்படுத்துவதற்கு முன் பஞ்சை எடுத்து முகத்தில் தடவி நன்றாக சுத்தம் செய்யவேண்டும். இப்படி செய்வதனால் முகத்தில் உள்ள பிசுபிசுப்புத் தன்மை நீங்கி புத்துணர்வுடன் இருக்கும்.
சுத்தமான பாலால் முகத்தைச் சுத்தம் செய்த பின்னர் தேங்காய் எண்ணெயில் இரண்டு அல்லது மூன்று சொட்டு தேயிலை மர எண்ணெய் சேர்த்து கலக்கவேண்டும். பின்னர், அதனை முகத்தில் அப்ளை செய்தால் மட்டும் போதும். அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை ஒரு 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவேண்டும்.
உலர்ந்த பின்னர் முல்தானி மெட்டி, தயிர் மற்றும் இரண்டு அல்லது மூன்று துளிகள் தேயிலை மர எண்ணெய் கலந்து முகத்தில் தேய்க்கவேண்டும். இது எந்த எரிச்சலையும் தரவில்லை என்றால் மட்டுமே அடுத்தடுத்து பயன்படுத்த வேண்டும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து ஈரத்துணியால் துடைக்க வேண்டும். தயிரின் லாக்டிக் அமிலமும் தேயிலை மர எண்ணெயின் பலன்களும் முதல் முறையே நல்ல மாற்றத்தைத் தரும். இதனைத் தினமும் பின்பற்றக் கூடாது. வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஏனெனில் தேயிலை மர எண்ணெய் அதிக தாக்கதைத் தரக்கூடிய ஒன்று.
அதேபோல் கூந்தலுக்கும் தேயிலை மர எண்ணெய் பயன்படுத்தலாம். பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் தேங்காய் எண்ணெயுடன் இரண்டு சொட்டு தேயிலை மர எண்ணெய் மற்றும் லேவண்டர் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்கவேண்டும் (எண்ணெய்களை சூடு செய்யவே கூடாது) பின்னர் ஷாம்புவுடன் இரண்டு சொட்டுக்கள் தேயிலை மர எண்ணெய் சேர்த்து கூந்தலை அலசினால் பொடுகு தொல்லை நீங்கிவிடும்.
தேங்காய் எண்ணெய் அல்லது Moisturizer உடன் கலந்து தேயிலை மர எண்ணெய் நகங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இது நகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் .