

உளுந்து சருமத்திற்கு ஒரு சிறந்த இயற்கை சுத்தப்படுத்தி, எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்பட்டு முகப்பருவைக் குறைத்து, நிறத்தை சமன் செய்து பளபளப்பைத் தருகிறது. உளுந்தை மிஷினில் அரைத்து வைத்துக்கொள்ளலாம் அல்லது மிக்ஸியில் நன்றாக பொடித்து ஈரம் படாத டப்பாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் போதும். இதைக்கொண்டு நம் முகத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்க முடியும்.
இன்ஸ்டன்ட் பளபளப்பு:
உளுத்தம் மாவு ஒரு ஸ்பூன் எடுத்து அத்துடன் காய்ச்சாத பச்சைப் பாலை சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ முகம் பளிச்சென்று பளபளக்கும்.
டானிங் நீக்க (Tan removal):
உளுந்தில் உள்ள குளிர்ச்சியான பண்புகள் வெயிலில் கருத்த சருமத்தை பராமரிக்க உதவும். உளுத்த மாவுடன் ஒரு துண்டு உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்தெடுக்கவும். இதனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட வெயிலினால் ஏற்படும் கருமை நீங்கி முகம் பளிச்சிடும்.
முகப்பரு நீங்க:
உளுந்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அத்துடன் முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து முகப்பருக்கள் வருவதை குறைக்க உதவுகிறது. உளுந்து மாவுடன் சிறிது கிராம்புத்தூள், பச்சைப் பால் சிறிதளவு கலந்து முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் மறைவதுடன் அதனால் ஏற்படும் வடுக்களும் குறைந்துவிடும்.
குளியல் பொடி:
உளுத்தம் பொடியுடன் கஸ்தூரி மஞ்சள்தூள் சிறிது, தேவையான அளவு தயிர் கலந்து தேய்த்து குளிக்க சோப்புக்கு மாற்றாக இருப்பதுடன் தேவையற்ற இறந்த செல்களை நீக்கி, அழுக்குகளைப் போக்கி உடலை பளிச்சென்றாக்கும்.
எண்ணெய் வழியும் சருமத்திற்க்கான ஃபேஸ் பேக்:
உளுத்தம் பொடியுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி ஃபேஸ் பேக் போட முகம் இயற்கையாகவே ப்ளீச்சிங் செய்தது போல் பளபளக்கும். பேஸ் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறைவதுடன் எண்ணெய் வழியும் சருமத்திற்கும் நல்ல பலனளிக்கும்.
உளுந்து பேஸ் பேக் போடுவதால் முகத்தில் உள்ள இறந்த சரும செல்கள் நீங்குவதுடன், சருமம் மென்மையாக மாறும். கரும்புள்ளிகள், மங்கு போன்றவை குறையும்.
முழங்கை, முழங்கால் கருமை நீங்க:
உளுத்தம் பொடியுடன் சிறிது பன்னீர், கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சிறிது கலந்து கருமை படிந்து காணப்படும் முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி நன்கு காயும்வரை வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி வர கருமை நீங்கிவிடும். இந்த பேஸ்ட்டை கழுத்தின் பின்புறம் உள்ள கருமை போகவும் பயன்படுத்தலாம்.