இப்போதெல்லாம் பலருக்கு தினசரி தலைக்கு குளிப்பது வழக்கமாகிவிட்டது. இது சிலருக்கு புத்துணர்ச்சியை தரும் மற்றவர்களுக்கு சுத்தமாக உணர வைக்கும். ஆனால் தினமும் தலைக்கு குளிப்பது நம் முடி மற்றும் தலைக்கு நல்லதா? என நமக்குள் ஒரு கேள்வி எழலாம். இந்தப் பதிவில் தினசரி தலைக்கு குளிப்பதன் நன்மை தீமைகளை விரிவாகப் பார்க்கலாம்.
தினசரி தலைக்கு குளிப்பதன் நன்மைகள்:
தினசரி தலைக்கு குளிப்பதன் மூலம் வியர்வை, அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்கி முடியை சுத்தமாக வைத்திருக்க முடியும். இது பொடுகு, அரிப்பு மற்றும் பிற தலை முடி பிரச்சினைகளைத் தடுக்க உதவும்.
தினசரி தலைக்கு குளிப்பது மன அழுத்தம், சோர்வைக் குறைத்து புத்துணர்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கும். தலை குளித்த பிறகு அதிலிருந்து வரும் வாசனை நம் மனநிலையை மேம்படுத்தி சுய நம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
தினசரி தலைக்கு குளிப்பதால் உங்கள் முடியை எளிதாக ஸ்டைல் செய்யலாம். ஈரமான முடியில் ஸ்டைல் செய்வது வறண்ட முடியில் ஸ்டைல் செய்வதை விட எளிதானது. மற்றும் இவ்வாறு செய்வது அந்த ஸ்டைல் கலையாமல் நீண்ட காலம் நீடித்திருக்க உதவும்.
தினசரி தலைக்கு குளிப்பதன் தீமைகள்:
தினசரி தலைக்கு குளிப்பதன் மூலம் முடியின் இயற்கையான எண்ணெய் அகற்றப்பட்டு, முடி அதிகமாக உலர்ந்து, மென்மையாகி உதிர ஆரம்பிக்கலாம். குறிப்பாக, மெல்லிய பட்டு போன்ற முடி கொண்டவர்களுக்கு இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். தினசரி ஷாம்பு பயன்படுத்துவதால் மயிர் இழைகள் வறண்டு பொடுகு உருவாகும் வாய்ப்புள்ளது.
அடிக்கடி ஷாம்பு பயன்படுத்துவது முடியின் கெராட்டின் அமைப்பை பாதித்து, முடியும் அடர்த்தியை குறைத்து எளிதில் உடையக்கூடியதாக மாற்றும். மேலும் இவ்வாறு செய்வது முடியின் கருமை நிறத்தை மங்கச்செய்து செம்பட்டை முடி உருவாவதற்கு வழிவகுக்கும்.
நீங்கள் அதிக உடல் உழைப்பு இல்லாத நபராக இருந்தால் தினசரி தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும். தலையில் எண்ணெய் பசை அதிகம் கொண்டவர்கள், வெளியே சென்று அதிகம் வேலை பார்ப்பவர்கள் மற்றும் தூசி, அழுக்கு அதிகம் உள்ள மூடப்பட்ட சூழலில் வேலை பார்ப்பவர்கள் தினசரி கட்டாயம் தலைக்கு குளிக்க வேண்டும்.
எனவே, நீங்கள் எதுபோன்ற பிரச்சனைகள் மற்றும் சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தினசரி தலைக்கு குளிக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.