5000 வருஷத்துக்கு முந்தைய ஃப்ரிஜ் எங்க இருக்குத் தெரியுமா?! வியக்க வைக்கும் நவீன தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகள்!

5000 வருஷத்துக்கு முந்தைய ஃப்ரிஜ் எங்க இருக்குத் தெரியுமா?! வியக்க வைக்கும் நவீன தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகள்!

இதுவரையிலும் இந்த உலகில் நிகழ்ந்துள்ள பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சிகளில்... அது ஹரப்பா, மெசபடோமிய அல்லது மொஹஞ்சதாரோ நாகரீகமாகவே இருந்தாலும் கூட இந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அங்கிருந்து நமது தற்போதைய வாழ்க்கை முறையின் வேர்களைக் கண்டறிந்த பல நிகழ்வுகள் இதுவரை நடந்தேறியுள்ளன.

இந்த கண்டுபிடிப்புகள் மூலமாக, நம் முன்னோர்கள் நம்மைவிட முன்னேறியவர்கள் என்பதற்கும், நாம் அறிந்திராத, நமக்கும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் அவர்கள் நெருங்கிப் பழகினார்கள் என்பதற்கும் சான்றுகள் கிடைத்துள்ளன. சமீபத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெற்கு ஈராக்கில் கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு உணவகத்தின் இடிபாடுகளை ஆராயும் போது அதிலிருந்து ஒரு கண்கவர் கண்டுபிடிப்பை கைப்பற்றினர். இந்த கண்டுபிடிப்பானது உலகின் முதல் நகரங்களில் அன்று மேற்கொள்ளப்பட்ட அன்றாட வாழ்க்கை குறித்து இன்று நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், பண்டைய ஈராக்கின் சுமேரிய நாகரிகத்தின் ஆரம்பகால நகர்ப்புற மையங்களில் ஒன்றாகக் கருதப்படுவதும், நம்மால் நன்கு அறியப்பட்ட சமகால நகரமுமான நசிரியாவின் வடகிழக்கில், பண்டைய லகாஷ் இடிபாடுகளில் ஒரு புதிய நகரம் மறைந்திருந்ததை அமெரிக்க-இத்தாலிய குழு ஒன்று கண்டுபிடித்தது. தற்போது அல்-ஹிபா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நகரம் இன்றைய தேதிக்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்கதாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் மாறியுள்ளது, கடந்த காலத்தில், பல வரலாற்று கண்டுபிடிப்புகள் இங்கு நிகழ்த்தப்பட்டுள்ளன. இது யூப்ரடீஸ் மற்றும் டைகிரிஸ் நதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த நகரம் நான்கு சதுப்புத் தீவுகளால் உருவாக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமேரிய நாகரிகத்தின் போது, ​​இப்பகுதியானது நகரங்கள்-மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. இங்கு ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வத்தை மதில் சூழ கட்டிடமெழுப்பி வணங்கினர் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

5000 ஆண்டு பழமையான ஃப்ரிஜ் அமைப்பு கண்டுபிடிப்பு...

இந்த அகழ்வாராய்ச்சியைத் தொடர்ந்து, ஆராய்ச்சியாளர்கள் உணவு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு திறந்த முற்றத்தைக் கண்டுபிடித்தனர், அதனுடன் பெஞ்சுகள், ஒரு அடுப்பு, பண்டைய உணவு நினைவுச்சின்னங்கள் மற்றும் 5,000 ஆண்டுகள் பழமையான இன்னமும் கூட ஈரப்பதம் குறையாத அமைப்பு கொண்ட ஒரு வித்தியாசமான வடிவமைப்பையும் அவர்கள் கண்டறிந்தனர். இதை நாம்'நவீனகால குளிர்சாதன பெட்டியுடன் ஒப்பிடலாம். ' உணவை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த அமைப்பு உதவியிருக்கலாம். இங்கு தான் மீனின் எச்சங்கள் அடங்கிய கூம்பு வடிவ கிண்ணங்களையும் அந்தக் குழு கண்டுபிடித்தது.

இது வீடாக இருக்க வாய்ப்பு இல்லை மதுக்கூடமாகவும் மக்கள் உணவருந்தும் இடமாகவும் இருந்திருக்கலாம்…

திட்ட இயக்குனர், ஹோலி பிட்மேன், இதைப் பற்றி விளக்கும் போது "இந்த ஆராய்ச்சியில் எங்களுக்கு ஒரு குளிர்சாதனப்பெட்டி கிடைத்துள்ளது, இப்போது எங்களிடம் நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் பரிமாற தயாராக உள்ளன, மக்கள் அமரும் பெஞ்சுகள் மற்றும் குளிர்சாதன பெட்டியின் பின்னால் ஒரு அடுப்பு கூட உள்ளது. இது 5000 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்களுக்கு உணவு சமைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் - என்று கூறினார்.

ஹோலி விளக்கியதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடியது என்னவென்றால், "இது ஒரு வீடாக இருக்க வாய்ப்பில்லை,  மக்கள் சாப்பிட வரக்கூடிய  இடமாக இருக்கலாம். அங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பீர் குடிப்பதற்கான ஆதாரங்களைக் கூட கண்டுபிடித்தனர். "சுமேரியர்களுக்கு பீர் மிகவும் பிரியமான பானமாகும், தண்ணீரை விடவும் இங்கு பீர் பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் அதிகமாக இருப்பதால், நாங்கள் அதை ஒரு மதுக்கடை என்று அழைக்கிறோம்," என்று அவர் கூறினார், அப்பகுதியில் தோண்டப்பட்ட கோயில்களில் ஒன்றில், பீர் செய்முறை கூட கண்டுபிடிக்கப்பட்டது.

ஆம், ஆராய்ச்சியின் போது சமர்பித்த அறிக்கைகளின்படி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த இடத்தில் ஒரு பழங்கால பீர் செய்முறையையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும், பென் அருங்காட்சியகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் பாக்தாத்தில் உள்ள பழங்கால மற்றும் பாரம்பரிய மாநில வாரியம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2019 ஆம் ஆண்டில் அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சிகள் மீண்டும் தொடங்கப்பட்டன, அங்கு அவர்கள் புதிய நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். தரவு மற்றும் தகவல்களைப் பாதுகாப்பதற்காக ட்ரோன் புகைப்படம் மற்றும் மரபணு பகுப்பாய்வு போன்ற நவீன நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் சுமேரிய நாகரிகத்தைப் பற்றியும் அந்தக் காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றியும் நன்கு புரிந்து கொள்ள முயற்சித்திருந்தனர்.

அறிக்கைகளின்படி பார்த்தால், இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஆரம்பகால அகழ்வாராய்ச்சிகள் மத கட்டிடக்கலை மற்றும் உயரடுக்கினரைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தியது, ஆனால் சமீபத்திய இந்த அகழ்வாராய்ச்சியானது உயரடுக்கு அல்லாத பகுதிகளை மையமாகக் கொண்டது மற்றும் பண்டைய நகரங்களைப் பற்றிய பரந்த புரிதலைக் கொண்டிருப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com