ஆடம்பரப் பொருட்களின் வரிசையில், மிகவும் அரிதான மற்றும் அதிக விலை உயர்ந்த சில பொருட்கள் உள்ளன. அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றுதான் Ambergris. விந்தணு திமிங்கலத்தின் செரிமான அமைப்பிலிருந்து பெறப்படும் ஒரு பொருள். இதன் தனித்துவத்திற்காகவே பூமியில் மிகவும் விலை உயர்ந்த இயற்கை பொருட்களில் ஒன்றாக உள்ளது. சரி வாருங்கள் இது ஏன் இவ்வளவு விலை உயர்ந்த பொருளாக இருக்கிறது எனத் தெரிந்து கொள்ளலாம்.
Ambergris என்றால் என்ன?
விந்தணு திமிங்கலம் எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகைத் திமிங்கலத்தின் செரிமான செயல்முறையில், Ambergris உருவாகிறது. விந்தணு திமிங்கலங்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாக இருக்கும் ஸ்குவிட்களின் கூர்மையான அலகுகளால் ஏற்படும் எரிச்சலை போக்குவதற்காக, இது தயாரிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. இது திமிங்கலத்தின் வயிற்றிலேயே சேர்ந்திருந்து காலப்போக்கில் அதன் மலம் அல்லது வாந்தி வாயிலாக வெளியேற்றப்படுகிறது.
ஆம்பர்கிரிஸ் அதிக விலைக்கு விற்கப்படும் முதன்மை காரணங்களில் அதன் தனித்துவமான வாசனை உள்ளது. இது காலப்போக்கில், சில பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழுடன் தொடர்பு கொள்ளும்போது சிறந்த நறுமணத்தை உருவாக்குகிறது. எனவே உயர்நிலை வாசனை திரவியங்களில் ஆம்பர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இந்த வாசனை நீண்ட காலம் நீடிப்பது மட்டுமின்றி, வாசனை திரவியத்திற்கு ஒரு தனித்துவமான தரத்தைச் சேர்க்கிறது.
இது வாசனை திரவியம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டதற்கான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக பாலுணர்வு மருத்துவத்தில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வந்த ஆம்பர்கிரிஸ், தலைவலி, வயிற்றுக் கோளாறுகள் உட்பட பல்வேறு விதமான நோய்களுக்கும் மருந்தாக உட்கொள்ளப்பட்டது.
மிகவும் அரிதானது மற்றும் விலை உயர்ந்தது என்பதால் இவை சட்டவிரோதமாக எடுக்கப்படுவது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சில நாடுகளில் ஆம்பர்கிரிஸ் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் வாசனையை பூர்த்தி செய்ய வாசனை திரவியங்களில் செயற்கை ஆம்பர்கிரிஸ் மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக விந்தணு திமிங்கலங்கள் வேட்டையாடப்படுவது தவிர்க்கப்படுகிறது எனலாம்.
சரி இவ்வளவு சொல்லிட்டியே இதன் விலை என்னன்னு சொல்லுப்பா என்கிறீர்களா? சராசரியாக ஒரு கிலோ ஆம்பர்கிரிஸின் விலை 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் இது 20 லட்சங்களுக்கு மேல் போகும். இந்த அளவுக்கு மதிப்பு மிக்க பொருள் திமிங்கலத்தின் கழிவு என்று நினைத்து பார்க்கையில்தான் கொஞ்சம் முகம் சுழிக்கும்படியாக உள்ளது.