இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் உலோகக் கழிவுகள்தான். இத்தகைய உலோகக் கழிவுகளை அழிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
உலகம் முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால், சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பிரச்னைகள் ஏற்படுகிறது. குறிப்பாக செப்பு எனப்படும் தாமிரம் தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதால், அதை உற்பத்தி செய்யும் நாடுகளில் சிலி முன்னிலையில் இருக்கிறது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து அதிகப்படியான தாமிரம் வெட்டி எடுக்கப்படுகிறது.
இதனால் சுற்றுப்புறத்திலும் அதிகப்படியான உலோகக் கழிவுகள் சேர்ந்து பெரும் கேடு விளைவிக்கிறது. இதை சரிசெய்யும் வகையில் சிலி நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உலோகத்தைச் சாப்பிடும் பாக்டீரியாவைக் கண்டுபிடிக்கும் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு தற்போது வெற்றியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர்கள் சில நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி, சுரங்க ஆலையிலிருந்து வெளியேறும் உலோகக் கழிவில் ஆய்வு மேற்கொண்டனர். இவற்றை சுற்றுச்சூழலுக்கு எவ்விதமான பாதிப்புமின்றி அழிக்கும் நோக்கிலேயே பாக்டீரியா பயன்படுத்தி ஆய்வு செய்தனர். அப்போது அந்த உலோகக் கழிவுகளை ஒரு வகை பாக்டீரியாக்கள் சாப்பிடுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அதாவது ஒரு ஆணி அளவிலான உலோகத்தை பாக்டீரியாக்கள் சாப்பிடுவதற்கு சுமார் இரண்டு மாதங்கள் வரை ஆனது.
மேலும், இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஒரு ஆணி அளவிலான உலோகத்தை மூன்றே நாட்களில் தின்று பாக்டீரியாக்கள் காலி செய்தன. எனவே இது வெற்றியடைந்ததால் இந்த தொழில்நுட்பத்தை தாராளமாக செயல்படுத்தலாம் என ஆய்வாளர்கள் தங்களின் முடிவை வெளியிட்டனர். மேலும் பல சோதனைகள் மூலம் இந்த பாக்டீரியா மனிதர்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ ஏதாவது தீங்கு விளைவிக்குமா என ஆய்வு செய்தபோது, அதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற முடிவு கிடைத்தது.
தற்போது இந்தத் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைக்கு சிலி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான அங்கீகாரம் கிடைத்ததும் எல்லா தொழிற்சாலைகளிலும் இது செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.