வாடகை வீடு வேண்டாம் கரண்ட் பில் வேண்டாம்... 10 மாசம் வானத்துலையே வாழ்க்கை நடத்தும் விநோத ஜீவன்!

Common Swift Bird
Common Swift Bird
Published on

நாம் பேருந்திலோ அல்லது ரயிலிலோ ஒரு நாள் முழுவதுமாகப் பயணம் செய்தாலே உடல் வலி வந்துவிடுகிறது. ஆனால், புவியீர்ப்பு விசைக்கே சவால் விடுவதுபோல, கிட்டத்தட்ட ஒரு வருடம் முழுவதும் தரையில் காலே வைக்காமல் வானத்திலேயே மிதந்து கொண்டிருக்கும் ஒரு உயிரினத்தைப் பற்றிக் கற்பனை செய்து பாருங்கள். 

இது ஏதோ ஹாலிவுட் படக்கதை போலத் தோன்றலாம். ஆனால் இயற்கையில் இப்படி ஒரு அதிசயம் உண்மையாகவே நடக்கிறது. 'காமன் ஸ்விஃப்ட் (Common Swift)' என்று அழைக்கப்படும் இந்தச் சிறிய பறவைகள், ஓய்வு என்பதையே அறியாத இயற்கையின் அதிசயங்கள்.

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!

பறவைகளின் இந்த விசித்திரமான நடத்தையை நிரூபிக்க, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு சுவாரஸ்யமான பரிசோதனையை மேற்கொண்டனர். அவர்கள் சில பறவைகளின் உடலில் மிகச் சிறிய மின்னணுப் கருவிகளைப் பொருத்தினர்.

அந்தக் கருவிகள் விமானத்தில் இருக்கும் கறுப்புப் பெட்டியைப் போலச் செயல்பட்டு, அந்தப் பறவைகள் எங்குச் செல்கின்றன, எவ்வளவு நேரம் பறக்கின்றன, எப்போது ஓய்வெடுக்கின்றன போன்ற அனைத்துத் தகவல்களையும் சேகரித்தன. அந்தத் தரவுகளை அலசிப் பார்த்தபோது விஞ்ஞானிகளே அதிர்ந்து போனார்கள். ஏனெனில், அந்தப் பறவைகள் தங்கள் வாழ்நாளில் 99 சதவீத நேரத்தை வானத்திலேயே செலவிடுவது தெரியவந்தது.

இதையும் படியுங்கள்:
3 மாடி வீடு, கார், ஆட்டோக்கள்; பிச்சைக்காரரின் சொத்து மதிப்பைக் கேட்டு மிரண்டு போன அதிகாரிகள்..!
Common Swift Bird

வானமே வீடு!

நமக்குச் சாப்பிடுவதற்கு ஒரு தட்டும், தூங்குவதற்கு ஒரு மெத்தையும் தேவை. ஆனால் இந்தப் பறவைகளுக்கு வானம்தான் எல்லாமே. இவை பசிக்கும்போது தரையிறங்கி இரை தேடுவதில்லை. மாறாக, காற்றில் பறக்கும் பூச்சிகளைப் பறந்துகொண்டே லாவகமாகப் பிடித்துச் சாப்பிடுகின்றன. தாகம் எடுத்தால் நீர்நிலைகளின் மேலே தாழ்வாகப் பறந்து நீரை அருந்துகின்றன. 

பறந்துகொண்டே தூங்கும்!

எல்லா உயிரினங்களுக்கும் தூக்கம் அவசியம். அப்படியானால் இவை எப்போது தூங்குகின்றன என்ற சந்தேகம் நமக்கு வரலாம். விடியற்காலையிலும், சூரியன் மறையும் அந்தி நேரத்திலும் இவை மிக உயரத்திற்குச் செல்கின்றன. கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் உயரத்திற்குச் சென்றுவிட்டு, சிறகடிக்காமல் காற்றினில் மிதக்கின்றன. கிளைடிங் என்று சொல்லப்படும் இந்த மிதக்கும் நிலையில் இருக்கும்போது, இவை குட்டித் தூக்கம் போடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
மக்கள் உழைப்பால் ராம்சர் தளமாக மாறிய இந்தியாவின் முதல் 'பறவை கிராமம்' எது தெரியுமா?
Common Swift Bird

ஆபத்து!

இந்தப் பறவைகள் இன்று பெரிய சவாலைச் சந்தித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் நாம்தான். விவசாயத்தில் நாம் பயன்படுத்தும் அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்துகள், இந்தப் பறவைகளின் முக்கிய உணவான வண்டுகளையும் பூச்சிகளையும் அழித்துவிடுகின்றன. உணவுச் சங்கிலியில் ஏற்படும் இந்தத் துண்டிப்பு ஸ்விஃப்ட் பறவைகளைப் பாதிக்கிறது. 

பூமியில் நடப்பதை விட வானில் மிதப்பதையே விரும்பும் இந்தப் பறவைகள், இயற்கையின் தகவமைப்புத் திறனுக்குச் சிறந்த சான்றாகும். சஹாரா பாலைவனத்தைக் கடந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்தச் சிறிய பறவைகளின் வலிமை பிரமிக்க வைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com