ஒரே வயலில் இரண்டு ரக நெல் சாகுபடி செய்வது எப்படி?

ஒரே வயலில் இரண்டு ரக நெல் சாகுபடி செய்வது எப்படி?
Updated on

விவசாயத்துறை தற்போது பல்வேறு வகையான பிரச்னைகளை சந்தித்து வருகிறது. அதேநேரம் அதை எதிர்கொள்ளும் தொழில்நுட்பமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரே சாகுபடியில் இரண்டு விதமான நெல் பயிர்களை பயிரிட்டு நடவு செய்யும் முறையை பெரும்பான்மையான விவசாயிகள் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றனர். ஏனென்றால், தற்போது விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பது உறுதி இல்லாத நிலையாக மாறி இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு குறுகிய கால பயிரை நிலத்தின் ஒரு பகுதியிலும், மற்றொரு புறத்தில் நீண்ட கால பயிரையும் பயிரிடத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் இருக்கும் தண்ணீரை வைத்துக்கொண்டு குறுகிய கால பயிரை முதலில் அறுவடை செய்ய முனைப்பு காட்டுகின்றனர்.

நீண்ட கால பயிரை தண்ணீர் கிடைக்கும் பட்சத்தில் வளரவிட்டு அவற்றை அறுவடை செய்கின்றனர். இல்லையென்றால் அவற்றை கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் குறுகிய கால பயிரின் மூலம் செலவுத் தொகையை ஈடு செய்ய முடிகிறது. தீவனமாக பயன்படுத்தும் பொழுது செலவு குறைந்து நஷ்டம் தடுக்கப்படுகிறது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

தற்போது சம்பா பயிரிடத் தொடங்கி இருக்கும் விவசாயிகள், நெல் நடவு சாகுபடியோடு சேர்த்து வரிசை நடவு மற்றும் பயறு வகை சாகுபடி என்று பாத்தி முறை சாகுபடியையும் மேற்கொள்கின்றனர். இதனால் சம்பா சாகுபடியின்போது தங்க சம்பா, துயமல்லி, கறுப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற ஏழு விதமான நெல்களை பயிரிட்டு இருக்கின்றனர். இவற்றை இரு விதமாகப் பிரித்து அதிக நாட்கள் வருவதை நிலத்தின் ஒரு புறத்திலும், குறைந்த கால பயிரை நிலத்தின் மறுபுறத்திலும் பயிரிட்டு சாகுபடி செய்கின்றனர். இதனால் ஒன்று கைவிட்டாலும் மற்றொன்று கைவிடாது. இதனால் நஷ்டம் அடைவதிலிருந்து தப்பிக்க முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com